பள்ளிகள் திறப்பு எப்போது? வெயில் கொளுத்தி வரும் நிலையில் முதலமைச்சர் விஜய் முக்கிய ஆலோசனை!
சென்னை: தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவிருந்த நிலையில், தற்போது நிலவி வரும் கடும் வெயிலின் உக்கிரம் காரணமாக பள்ளி திறப்பு தள்ளிப்போகுமா என்ற எதிர்பார்ப்பு பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதுகுறித்து முதலமைச்சர் விஜய் தற்போது அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கடுமையான வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டும் என சில கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

முதல்வர் விஜய் ஆலோசனை
இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனிடம் கேட்டபோது, "ஜூன் முதல் வாரத்தில் வெப்ப அலை இருக்குமா? என வானிலை துறையிடம் கேட்டு, அதன் பிறகு முதல்மைச்சர் விஜய்யிடம் ஆலோசித்து பள்ளி திறப்பு தேதி அறிவிக்கப்படும்" என்று கூறி இருந்தார்.
இந்த நிலையில், பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சர் விஜய் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் முதலமைச்சர் ஆலோசனை நடத்தி உள்ளார்.
வெயிலின் தாக்கத்திற்கு இடையே ஜூன் 1 ஆம் தேதியே பள்ளிகளைத் திறக்கலாமா? அல்லது மாணவர்களின் பாதுகாப்பைக் கருதி குறைந்தபட்சம் ஒரு வாரம் தேதியைத் தள்ளி வைக்கலாமா? ஒருவேளை தள்ளி வைத்தால், விடுபடும் பாடநாட்களை எவ்வாறு ஈடு செய்வது? என்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்பு குறித்த அதிகாரப்புர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெற்றோர்களின் அச்சமும், எதிர்பார்ப்பும்
தமிழகத்தின் பல பகுதிகளில் வெயில் சதம் அடித்து வருவதால், குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும்போது நீரிழப்பு (Dehydration), கடுமையான சோர்வு மற்றும் வெப்பக் காய்ச்சலால் பாதிக்கப்படலாம் எனப் பெற்றோர்கள் பெரிதும் அஞ்சுகின்றனர். அதிக வெப்பம் குழந்தைகளின் கற்றல் திறனையும் பாதிக்கும் என்பதால், அரசு நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
மாணவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பை முதன்மையாகக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு பள்ளிகள் திறக்கும் தேதியை குறைந்தபட்சம் ஒரு வார காலத்திற்கு தள்ளிப் போட வேண்டும். மாணவர்களின் உடல்நல பாதுகாப்பே அரசின் முதன்மை பொறுப்பாகும் என்பதால், நிலவும் வெப்ப அலை சூழ்நிலையை தீவிரமாக பரிசீலித்து உடனடி முடிவு எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.
பள்ளிகள் எப்போது திறக்கப்பட்டாலும், வகுப்பறைகளில் போதிய காற்றோட்ட வசதி, தடையற்ற குடிநீர் விநியோகம் மற்றும் அவசர மருத்துவ உதவிகளுக்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளைப் பள்ளிக்கல்வித்துறை முன்கூட்டியே உறுதி செய்ய வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications