முதல்வர் ஸ்டாலினிடம் ரூ5 லட்சம் நிதி கொடுத்த நடிகர் வடிவேலு- கொங்குநாடு பேச்சுக்கு கடும் எதிர்ப்பு!
சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ரூ5 லட்சம் கொரோனா நிவாரண நிதி வழங்கினார் நகைச்சுவை நடிகர் வடிவேலு. மேலும் கொங்கு நாடு தனி மாநிலம் பேச்சுக்கும் நடிகர் வடிவேலு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் 2011-ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் நடிகர் வடிவேலு திமுகவுக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் செய்தார். அந்த தேர்தலில் திமுக தோல்வி அடைந்தது.
பின்னர் பல்வேறு காரணங்களால் கடந்த 10 ஆண்டுகளாக நடிகர் வடிவேலுக்கு அதிக திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவும் இல்லை. இருப்பினும் வடிவேலுவின் புதிய படங்கள் தொடர்பாக அவ்வப்போது செய்திகள் வெளி வந்து கொண்டிருக்கின்றன.

ஸ்டாலினுடன் சந்திப்பு
இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினை நடிகர் வடிவேலு சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது கொரோனா நிவாரண நிதியாக ரூ5 லட்சத்தை முதல்வர் ஸ்டாலினிடம் நடிகர் வடிவேலு வழங்கினார்.

நல்லாட்சி தரும் ஸ்டாலின்
பின்னர் தலைமை செயலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் நடிகர் வடிவேலு கூறியதாவது: ஒரே மாதத்தில் உலகமே உற்றுப்பார்க்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் ஆட்சி நடத்தி வருகிறார். அனைத்து பகுதிகளிலும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தி இருக்கிறார்.

ஸ்டாலினின் பொற்கால ஆட்சி
மகளிருக்கு இலவச பேருந்து பயணம், குடும்ப தலைவிகளுக்கு ரூ1,000 நிதி உதவி என ஒவ்வொரு திட்டங்களையும் மிக அழகாக நிறைவேற்றி வரும் பொற்கால ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசிகளை கட்டாயம் போட்டுக் கொள்ள வேண்டும்.

தடுப்பூசி அவசியம்
நான் 2 கொரோனா தடுப்பூசிகளை போட்டிருக்கிறேன். இன்னும் 40 தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள வேண்டும் என்று சொன்னாலும் அதற்கும் தயாராக இருக்கிறேன். மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க கொரோனா தடுப்பூசி போடுவது அவசியமானது.

கொங்கு நாடு எதற்கு?
தமிழகத்தில் ஏற்கனவே ராம்நாடு, ஒரத்த நாடு என பல உள்ளன. இதில் கொங்கு நாடு அந்த நாடு என ஏன் பேச வேண்டும்? நன்றாகத்தானே இருக்கிறது தமிழ்நாடு... இதனை ஏன் பிரிக்க வேண்டும். இவ்வாறு நடிகர் வடிவேலு தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications