கோர முகத்தை காட்டிய நிலச்சரிவு..வயநாட்டில் மரண ஓலம்! சோகத்தில் மூழ்கியுள்ளேன்.. விஜய் சொன்ன வார்த்தை
சென்னை: கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ள நிலையில் மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கின்றனர். அவர்களை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்று வரும் நிலையில், வயநாடு நிலச்சரிவு சம்பவம் என்னை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது என நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவில் இருந்தே பலத்த காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக வயநாட்டில் உள்ள முண்டகாயம், சூரல்மாலா ஆகிய இடங்களில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது.

திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள் மீது மண், பாறைகள், மரங்கள் ஆகியவை விழுந்தன. இதில் சிக்கி 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். மேலும் படுகாயங்களுடன் 150க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர்.
அதே நேரத்தில் மேலும் நூற்றுக்கணக்கானோர் இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பதாக தகவல் கிடைத்திருக்கும் நிலையில் காணாமல் போனவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மீட்புப் பணியில், கேரளா தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு துறையினர், காவல் துறையினர் , உள்ளூர் இளைஞர்கள் உள்ளிட்ட பலர் இடிபாடிகளில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக அனுமதித்து வருகின்றனர். தற்போதைய நிலையில் நூற்றுக் கணக்கானோர் மீட்கப் பட்டாலும், மேலும் பலர் நிலச்சரிவில் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச் சரிவு பாதிப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், சுரேஷ்கோபி ஆகியோரை தொடர்பு கொண்டு நிலைமை குறித்து கேட்டறிந்துள்ளார். இது மட்டுமல்லாமல் வயநாடு நிலச் சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா , தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் தமிழகம் சார்பில் 5 கோடி ரூபாய் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளதோடு, 2 ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் மீட்பு குழுவும் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் வயநாடு நிலச்சரிவு சம்பவம் என்னை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது என நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவர் ஆன விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவரது பதிவில்,"வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட சோகமான செய்தியை கேட்டு மிகவும் வருத்தம் அடைந்தேன். எனது எண்ணமும் பிரார்த்தனைகளும், துயரம் அடைந்த குடும்பத்தினருடன் தான் உள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மீட்பு மற்றும் நிவாரண பணிகளை போர்க்கால அடிப்படையில் வழங்க அரசு அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் நடிகர் விஜய்க்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விஜய் சூட்டிங்கிற்காக கேரளா சென்றிருந்த போது, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வந்து அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர். குறிப்பாக தமிழர்கள் அதிகம் வசிக்கும் வயநாட்டில் விஜய்க்கு அதிக ரசிகர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications