ஹைதராபாத்திலிருந்து பறந்த விஜய்! பனையூரில் பரபர மீட்டிங்! மக்கள் இயக்கத்தினருக்கு ‘முக்கிய’ அட்வைஸ்!
சென்னை : ஹைதராபாத்தில் இருந்து படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ள நடிகர் விஜய் பனையூரில் உள்ள தனது இல்லத்தில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தியதாகவும் அதில் நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களுக்கு முக்கிய அறிவுரைகள் வழங்கியதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
நடிகர் விஜய் அரசியல் பிரவேசம் குறித்து நேரடியாக கருத்துக்களை தெரிவிக்காவிட்டாலும் அது தொடர்பாக நீண்ட ஆலோசனையில் இருக்கிறார். இதன் விளைவாகவே கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட்டனர்.
முதலில் நடைபெற்ற 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் சுமார் 51 பேர் வெற்றி பெற்றதாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கூறினர். ஆனால் விஜய்க்கு தெரியாமல் அவர்கள் போட்டியிட்டதாக தகவல்கள் உலாவின.
சாதி, மதம், கோயில், சாமியார் வேண்டாம்.. கடவுளிடம் இந்த வரம் கேட்பேன்! “லிஸ்டு” போட்ட விஜய் ஆண்டனி
நடிகர் விஜய்
அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், நடிகர் விஜய்யின் ஒப்புதலுடன் தான் தேர்தலில் அவர்கள் போட்டியிட்டதை உறுதி செய்யும் வகையில் பனையூரில் தனது வீட்டில் தேர்தலில் வெற்றி பெற்ற விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்ததோடு அவர்களுக்கு விருந்தும் வைத்தார். இதை அடுத்து நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் களமிறங்கினர்.
விஜய் மக்கள் இயக்கம்
பெரிய அளவிலான வெற்றி இல்லை என்றாலும் விஜய்யின் புகைப்படம் மற்றும் கொடியை எடுத்துச் சென்றதற்கே அவர்களுக்கு ஓரளவுக்கு வாக்குகள் கிடைத்தது. இதனால் உற்சாகத்தில் இருக்கும் விஜய் சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடலாமா என நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும் தனது இயக்கத்தின் செயல்பாடுகள் அரசியல் அடித்தளத்தை உறுதி செய்து கொள்ளும் வகையில் விஜய் மக்கள் இயக்க ஐடி விங்கை பலப்படுத்தும் நடவடிக்கைகளும் நடைபெற்று வருகிறது.
திடீர் ஆலோசனை
இதனிடையே ஹைதராபாத்தில் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்ப நடிகர் விஜய் பனையூரில் உள்ள தனது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியிருக்கிறது. சென்னை பனையூரில் உள்ள அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் அதன் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள், பல்வேறு அணிகளின் நிர்வாகிகள், மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.
முக்கிய அட்வைஸ்
இதில் இயக்கத்தை பலப்படுத்துவது குறித்தும் அரசியல் செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தொடர்ந்து நடிகர் விஜய் உடன் ஆலோசனைக்கு பிறகு இயக்க நிர்வாகிகளுடன் பேசிய புஸ்ஸி ஆனந்த்," ரசிகர்கள் முதலில் குடும்பத்தை பார்க்க வேண்டும். அதன் பிறகு தொழிலை பார்க்க வேண்டும். அதன் பிறகு தான் அரசியல் சேவை உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு வர வேண்டும் எனவும் வருமானத்தின் ஒரு பகுதியை மட்டும் விஜய் மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகளுக்கு செலவிட வேண்டும். ரசிகர்கள் யாரிடமும் கடன் வாங்க கூடாது என்று விஜய் கூறியதாக தெரிவித்திருக்கிறார்.