விக்கிரவாண்டியில் செப்.23-ல் தவெக மாநாடு நடக்கும்.. ஜனவரிக்கு ஒத்திவைப்பு இல்லை- புஸ்ஸி ஆனந்த்!
சென்னை: நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு திட்டமிட்டபடி வரும் 23-ந் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் கட்சி மாநாடு ஜோதிடர் ஆலோசனையின்படி ஜனவரி மாதத்துக்கு ஒத்தி வைக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியான நிலையில் புஸ்ஸி ஆனந்த் திட்டமிட்டபடி செப்டம்பர் 23-ல் மாநாடு நடைபெறும் என உறுதியாக தெரிவித்துள்ளார்.
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் களமிறங்குவதை இலக்காகக் கொண்டு தமிழக வெற்றிக் கழகம் கட்சியைத் தொடங்கினார் நடிகர் விஜய். அண்மையில் விஜய் கட்சியின் கொடி, பாடல் வெளியிடப்பட்டு பேசு பொருளானது.

இதனையடுத்து செப்டம்பர் 23-ந் தேதி விஜய் கட்சியின் முதல் மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் மதுரை,திருச்சி, சேலம், ஈரோடு என பல நகரங்களில் மாநாட்டு இடம் தேர்வு செய்யப்பட்டு கைவிடப்பட்டது. பின்னர் ஒருவழியாக விக்கிரவாண்டியில் தற்போது இடம் தேர்வாகி இருக்கிறது. இந்த இடத்தில் மாநாடு நடத்துவதற்காக முறையாக போலீஸ் அனுமதி கேட்டுள்ளது நடிகர் விஜய் கட்சி. இதனைத் தொடர்ந்து போலீசாரும் விஜய் கட்சி நிர்வாகிகளுக்கு 21 கேள்விகளை அனுப்பி விளக்கம் கேட்டுள்ளது. பொதுவாக எந்த ஒரு கட்சி மாநாடு நடத்தினாலும் இது போன்ற கேள்விகளை போலீசார் கேட்பது வழக்கம்தான்.
இந்த நிலையில் மாநாட்டுக்கான இடமே இன்னமும் முடிவாகாத நிலையில் மாநாட்டை ஒத்திவைப்பது தொடர்பாகவும் நடிகர் விஜய் தரப்பு ஆலோசிப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. அடுத்த 3 மாதங்களுக்கு மழை காலம் என்பதால் ஜனவரியில் மாநாட்டை நடத்தலாமா? என ஆலோசனை நடத்தினார் நடிகர் விஜய் எனவும் கூறப்பட்டது.
இன்னொரு பக்கம், நடிகர் விஜய் தரப்பில் கடலூர் ஜோதிடர் ஒருவரையும் சந்தித்து ஆலோசனை நடத்தப்பட்டதாம். தற்போதைய நிலையில் மாநாட்டை ஒத்திவைப்பதுதான் சரியாக இருக்கும் என ஜோதிடரும் அறிவுறுத்தினாராம். கடலூர் ஜோதிடரின் அறிவுரைப்படியே அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் கட்சி மாநாட்டை ஒத்திவைக்கலாமா என்பதுதான் நடிகர் விஜய் தரப்பில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் விவாதங்கள் எனவும் தகவல்கள் வெளியாகின.
ஆனால் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், செப்டம்பர் 23-ந் தேதி திட்டமிட்டபடியே விக்கிரவாண்டியில் கட்சியின் மாநாடு நடைபெறும்; இதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என தெளிவுபடுத்தி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications