இன்னிக்கு ஒரு புடி! ரெடியாகும் கமகம பனையூர் பிரியாணி! ரசிகர்களை சந்திக்கும் வாரிசு விஜய்! பரபர தகவல்
சென்னை : நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் இன்று அவர் மூன்று மாவட்ட ரசிகர்களை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதையடுத்து கமகம பிரியாணி உடன் விஜய்யை சந்திக்க ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
விஜய் நடித்துள்ள வாரிசு பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று அறிவித்து உள்ளனர். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி உள்ளது. தமிழ்நாட்டில் அதிக தியேட்டர்களில் வாரிசு வெளியாக உள்ளது.
இந்த படத்தை தெலுங்கு டைரக்டர் வம்சி படிப்பள்ளி இயக்கி உள்ளார். பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜு தயாரித்துள்ளார். இப்படத்தில் இடம்பெற்ற ரஞ்சிதமே, தீ தளபதி பாடல் வெளியாகி ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது.

நடிகர் விஜய்
விஜய்க்கு தெலுங்கிலும் அதிக ரசிகர்கள் உள்ளனர். இதனால் வாரிசு படத்தை ஆந்திரா, தெலுங்கானாவிலும் கூடுதல் தியேட்டர்களில் திரையிட திட்டமிட்டு உள்ளனர். இதற்கு தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் எதிப்பு தெரிவித்து உள்ளது. பொங்கல் பண்டிகையில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே அதிக தியேட்டர்களை ஒதுக்க வேண்டும் என்று தியேட்டர் அதிபர்களை வற்புறுத்தி உள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் நடிகர் விஜய் தனது ரசிகர்களை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் சந்தித்தார்.

ரசிகர்கள் சந்திப்பு
அப்போது கடன் வாங்கி செலவு செய்ய வேண்டாம் முதலில் உங்கள் பெற்றோர்களை பாருங்கள் எனது விஜய் ரசிகர்களுக்கு நேரிலேயே அறிவுரை வழங்கியதாக கூறப்பட்டது. அப்போது ரசிகர்களை விஜய் மக்கள் இயக்கம் என்ற நிர்வாகியான புஸ்ஸி ஆனந்த் காலில் விழ வைத்ததாகவும் இதனால் கடுப்பான விஜய் அவரை நேரில் அழைத்து கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று அரியலூர் பெரம்பலூர் உள்ளிட்ட மூன்று மாவட்ட ரசிகர்களை விஜய் நேரில் சந்திக்க இருக்கிறார். இதை அடுத்து அந்தந்த மாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட சில ரசிகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு பனையூரில் குவிந்து வருகின்றனர்.

வாரிசு படம்
ஏற்கனவே வாரிசு படம் பல சிக்கல்களை சந்தித்து வரும் நிலையில் நடிகர் விஜய்யின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. வாரிசு படம் குறித்து விஜய் ஏதும் முக்கிய தகவல்களை தெரிவிப்பாரா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. விஜய்யின் வாரிசு படத்தில் இரண்டு பாடல்கள் வெளியாகி ஹிட் அடித்த போதிலும் அவை காப்பி செய்யப்பட்டவை என்ற புகார் ஒரு புறம், ஆந்திரா தெலுங்கானாவில் வெளியிடுவதில் சிக்கல், படப்பிடிப்பில் யானையை பயன்படுத்திய புகார் என வழக்கம் போல் விஜய்யின் படம் சிக்கல்களை சந்தித்து வரும் நிலையில் படத்தை ஓரளவு வெற்றி பெறச் செய்ய வேண்டுமானால் புரமோஷன் பணிகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. இதன் காரணமாகவே நடிகர் விஜய் அடுத்தடுத்து ரசிகர்களை சந்தித்து வருகிறார் எனக் கூறப்படுகிறது.

புஸ்ஸி ஆனந்த்
இந்த நிலையில் நடிகர் விஜய்யை சந்திக்க வரும் ரசிகர்கள் எண்ணிக்கை புஸ்ஸி ஆனந்த் சொல்லும் அளவில்தான் இருக்க வேண்டும் என சில ரசிகர்கள் புகார் தெரிவித்துள்ளனர். புஸ்ஸி ஆனந்த் மற்றும் அவரது நெருங்கிய ஆதரவாளர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களுக்கு மட்டுமே நடிகர் விஜய்யை சந்திக்க பாஸ்கள் வழங்கப்படுவதாகவும் மன்ற நிர்வாகிகள் என்ற பெயரில் குறிப்பிட்ட சிலருக்கு வழங்கப்படுவதால் உண்மையான ரசிகர்கள் பாதிக்கப்படுவதாகவும் இதனை நடிகர் விஜய் கண்டிக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. இது ஒரு புறம் இருக்க நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாகவும் நடிகர் விஜய் ரசிகர்களுடன் ஆலோசனை மேற்கொள்வதாகவும் நாடாளுமன்றத் தேர்தலில் சென்னை மதுரை கோவை உள்ளிட்ட சில பகுதிகளில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் நேரடியாக விஜய்யின் ஆதரவுடன் போட்டியிடலாம் எனவும் தகவல் வெளியாகியிருக்கிறது.












Click it and Unblock the Notifications