ஆதவ் அர்ஜுனா சொன்னது நடக்குதா? ஈபிஎஸ் தலையில் இடிப்போல் இறங்கிய செய்தி.. அதிமுக எதிர்காலம்?
தமிழக அரசியல் களம் மீண்டும் அதிரடித் திருப்பத்தைக் கண்டுள்ளது. சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் இருந்து முக்கியத் தலைவர்கள் கொத்துக்கொத்தாக வெளியேறி வருவது மூலம் அக்கட்சியின் பலம் பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. இதேவேளையில் ஆதவ் அர்ஜுனா சொன்ன விஷயம் உண்மையாகும் வகையில் அடுத்தடுத்து சம்பவம் நடந்து வருகிறது.
சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைமை அலுவலகத்தில் இன்று அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் 3 பேர் உட்பட 9 முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் (Ex-MLAs) முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பனையூர் அலுவலகத்தில் பரபரப்பு
தமிழக வெற்றி கழகத்தின் பனையூர் தலைமை அலுவலகத்தில் இன்று தவெகவின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் அதிமுக ஆட்சிக் காலத்தில் செல்வாக்கு மிக்க அமைச்சர்களாக வலம் வந்த 3 முக்கியப் புள்ளிகள் தவெகவில் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, அதிமுகவின் முன்னாள் வீட்டுவசதித் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், முன்னாள் கைத்தறித் துறை அமைச்சர் (திருப்பூர்) எம்.எஸ்.எம். ஆனந்தன் மற்றும் முன்னாள் தொழில் துறை அமைச்சர் (கடலூர்) எம்.சி. சம்பத் ஆகிய மூவரும் தங்களின் ஆதரவாளர்களுடன் இன்று தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களின் இந்த முடிவு அந்தந்த மாவட்டங்களில் அதிமுகவின் அடித்தளத்தை பலவீனமாக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கணிக்கின்றனர்.
சேலம், தருமபுரி முதல் விருதுநகர் வரை
முன்னாள் அமைச்சர்கள் மட்டுமன்றி, கொங்கு மண்டலம் மற்றும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுகவின் வலுவான முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களும் இன்று தவெகவின் கொடியை தனது சட்டை பையில் குத்த உள்ளனர். தருமபுரி மேற்கு மாவட்ட தவெக நிர்வாகி சிவன் தலைமையில் இந்த 9 முன்னாள் எம்எல்ஏக்கள் இணைய உள்ளனர்.
தருமபுரி பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ கோவிந்தசாமி, சேலம் சங்ககிரி தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ சுந்தரராஜ், சேலம் வீரப்பாண்டி தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ ராஜமுத்து ஆகியோர் கொங்கு மண்டலத்திலிருந்து தவெகவுக்கு நகர்கின்றனர்.
தென் மாவட்டங்களைப் பொறுத்தவரை, விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர் முன்னாள் எம்எல்ஏ மான்ராஜ், சாத்தூர் முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன் ஆகியோரும், வட தமிழகத்தில் திருவண்ணாமலை கலசப்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ பன்னீர்செல்வம் உள்ளிட்ட 9 பேர் இன்று அதிகாரப்பூர்வமாகத் தங்களை இணைத்துக் கொள்கின்றனர்.
ஆதவ் அர்ஜுனா சொன்ன விஷயம்
அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான உட்கட்சிப் பூசல்களும், தொடர் தேர்தல் தோல்விகளுமே இந்த பிரம்மாண்ட வெளியேற்றத்திற்குக் காரணம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இதேவேளையில் தவெகவின் ஆதவ் அர்ஜுனா பேசுகையில்,"அதிமுகவின் 90 சதவீத தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் தவெகவை நோக்கி வரத் தீர்மானித்துவிட்டனர்" என்று குறிப்பிட்டிருந்ததை உண்மையாக்கும் விதமாகவே தற்போதைய நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன.
சில நாட்களுக்கு முன்பு திருச்சி முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், ஜெயங்கொண்டம் எக்ஸ் எம்எல்ஏ ராமஜெயலிங்கம் ஆகியோர் தவெகவில் இணைந்த நிலையில், இன்று மேலும் 9 முக்கியப் புள்ளிகள் இணைந்திருப்பது தவெகவின் அரசியல் பலத்தை மேலும் அதிகரிக்க உள்ளது.












Click it and Unblock the Notifications