இன்னும் ஒரு தேர்தலைக் கூட சந்திக்கலை.. அதுக்குள்ள இப்படியா? தவெக விஜயை டார்ச்சர் செய்யும் அணிகள்?
சென்னை: தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் பட்டியல் விரைவில் வெளியாக உள்ளது. ஆனால் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் ஆதரவாளர்கள் பல மாவட்டங்களில் கட்சியில் நான்கு அணிகளாக செயல்பட்டு வருவது தலைமைக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் பட்டியல் வெளியானால் கட்சிக்குள் குழப்பம் ஏற்படும் என்பதாலேயே இன்னும் பட்டியல் வெளியிடப்படாமல் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் திரையுலகின் நம்பர் ஒன் நடிகராக இருந்து தற்போது அரசியல்வாதி அவதாரம் எடுத்திருக்கிறார் விஜய். கட்சியின் பெயரை அறிவித்தது தொடங்கி உறுப்பினர் சேர்க்கை, ஆலோசனை, மாநில மாநாடு, புத்தக வெளியீட்டு விழா என மிகவும் பிசியாகவே இருக்கிறார்.

விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற தகவல் வெளியானதிலிருந்து அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் அவரைப் பற்றி தான் பேசி வருகின்றனர். நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ விஜய் குறித்து பதிலளிக்க வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது.
நடிகர் விஜய்:
கட்சியின் முதல் மாநில மாநாட்டில் பாஜகவைக் கொள்கை எதிரியாகவும், திமுகவை நேரடி எதிரியாகவும் விஜய் குறிப்பிட்டார். மேலும் கூட்டணிக்கு தயார் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என விஜய் வெளிப்படையாக அறிவித்தார். இந்த நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் விஜய் கூட்டணி அமைக்கலாம் என கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட கட்சிகளை கொண்டு விஜய் தனியாக கூட்டணி அமைக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
மாவட்ட நிர்வாகிகள்:
இது ஒருபுறம் இருக்க கட்சியில் மாவட்ட நிர்வாகிகள் பட்டியல் இன்னும் வெளியாகவில்லை. ஆனால், ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு கட்சியில் பதவி அளிக்கப்பட இருக்கிறது. தமிழகத்தில் அமைப்பு ரீதியாக நூற்றுக்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்ய விஜய் திட்டமிட்டு இருக்கிறார். தமிழகத்தில் 234 தொகுதிகள் இருக்கும் நிலையில் இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற அடிப்படையில் மாவட்ட செயலாளர் நியமனம் நடைபெற இருக்கிறது.
அணிகள் பட்டியல்:
மேலும் மாவட்ட தலைவர், மாவட்ட செயலாளர், மாவட்டத் துணைச் செயலாளர் என தனது ரசிகர் மன்றத்தில் இருந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட இருக்கிறது. மேலும் துணைத் தலைவர், துணைச் செயலாளர் பதவிகளில் பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் அதிகளவு வாய்ப்பு தர திட்டமிடப்பட்டிருக்கிறது. அது மட்டும் அல்லாமல் 28 சார்பு அணிகளும் விஜய் கட்சியில் உருவாக்கப்பட இருக்கிறது. மகளிர் அணி, தொண்டரணி, இளைஞர் அணி, மருத்துவர் அணி, பொறியாளர் அணி, இலக்கிய அணி உள்ளிட்ட 28 அணிகளுக்கும் தலைவர், செயலாளர், அமைப்பாளர்கள் உள்ளிட்ட பொறுப்புகள் வழங்கப்பட இருக்கிறது.
பட்டியல் தாமதம்:
அந்தப் பட்டியல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இன்னும் பட்டியல் வெளியாகாமல் இருப்பதற்கான காரணம் குறித்தும் சில தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளது. இது தொடர்பாக தமிழக வெற்றி கழகத்தின் சில முக்கிய நிர்வாகிகளிடம் பேசிய போது கிடைத்த தகவல்கள் அதிர்ச்சி அளிக்கும் விதமாக இருந்தது. கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தனது ஆதரவாளர்களை மாவட்ட தலைவர்கள் ஆக்க முயற்சி செய்து வருகிறார்.
விஜய் ரசிகர் மன்றம்:
அதே நேரத்தில் விஜய் ரசிகர் மன்றம் மக்கள் இயக்கத்தில் பயணித்தவர்கள் சில மாவட்டங்களில் வலுவாக இருக்கின்றனர். அவர்களை மாற்ற முடியாது. ஆனால் அங்கு தனது ஆதரவாளர்களை நியமிக்க சீனியர் நிர்வாகி ஒருவர் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு ஏற்கனவே இருக்கும் ரசிகர் மன்ற நிர்வாகிகள் ஒப்புக்கொள்ளாததால் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு நெருக்கமாக இருக்கும் சில நிர்வாகிகள், மகளிர் அணி, மாணவர் அணி, வர்த்தக அணி என்ற பெயரில் தனியாக செயல்பட்டு வருகின்றனர்.
மாவட்ட நிர்வாகிகள் புறக்கணிப்பு:
பல மாவட்டங்களில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிக்கம்பம் மற்றும் பலகைகளில் மாவட்டத் தலைவர்களின் பெயர்கள் இல்லாமல் இருக்கிறது. திமுக, அதிமுக போன்ற பெரிய பெரிய கட்சிகளில் கூட மாவட்ட செயலாளர் பெயர் புகைப்படமும் இல்லாமல் ஒரு துண்டு சீட்டைக் கூட பார்க்க முடியாது. ஆனால் தமிழக வெற்றி கழகத்தில் மாணவர் அணி நிர்வாகிகள் கூட விஜய் மற்றும் பொதுச் செயலாளரின் படத்தை பயன்படுத்துகின்றனர். ஆனால் மாவட்ட தலைவர்கள், செயலாளர்களின் பெயர்கள் இடம் பெறவில்லை,
புஸ்ஸி ஆனந்த்:
இந்த தகவல் தலைமைக்கும் புகாராக அனுப்பப்பட்டிருக்கிறது. விசாரித்த போது பிற அணிகள் பெயர்களில் செயல்பட்டு வருபவர்கள் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் ஆதரவாளர்கள் என்பது தெரிய வந்திருக்கிறது. பல ஆண்டுகளாக ரசிகர்களாக இருந்தும் தங்களுக்கு கட்சியில் பதவி கிடைக்கவில்லை என்றால் நிச்சயம் அவர்கள் போர்க்கொடி தூக்குவார்கள். இதனால் மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் பட்டியல் வெளியாகும் போது பிரச்சனை வெடிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் இது தரப்பையும் சந்தித்து ஆலோசனை நடத்திய பிறகே பெயர் பட்டியல் வெளியாகும். ஏற்கனவே ஒரு தரப்பு நிர்வாகிகள் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை சந்தித்திருக்கும் நிலையில் அடுத்த கட்ட சந்திப்பு விரைவில் நடக்கும் என்பது தான் தற்போது கிடைத்திருக்கும் தகவல்..












Click it and Unblock the Notifications