நடிகர் விஜயின் கட்சி கொடி எது? தீவிரமாக தயாராகும் தமிழக வெற்றிக் கழகம்.. கசிந்த முக்கிய தகவல்
சென்னை: தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கி 2026 சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கு தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இத்தகைய சூழலில் தான் நடிகர் விஜய் தனது கட்சிக்கான கொடி வடிவமைப்பில் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும், இன்னும் ஒரு வாரத்தில் நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்வதாகவும் முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் விரைவில் அரசியலுக்கு வருவார் என்று கூறப்பட்டு வந்த நிலையில் திடீரென்று கடந்த பிப்ரவரி மாதம் தனது கட்சியின் பெயரை அறிவித்தார். தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் கட்சியை தொடங்கினார்.

மேலும் வரும் 2026 தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதாக நடிகர் விஜய் அறிவித்துள்ளார். இதன்மூலம் 2026 சட்டசபை தேர்தலுக்கு முன்பாக எந்த தேர்தலிலும் போட்டியிடவில்லை என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார். இதனால் சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் அவரது கட்சி களமிறங்கவில்லை.
தற்போது நடிகர் விஜய் திரைப்படங்களில் நடித்து வருகிறார். விரைவில் அவர் சினிமாவில் இருந்து விலகி முழுநேர அரசியல்வாதியாக மாற உள்ளார். இதற்கிடையே தற்போது மாவட்டம், சட்டசபை தொகுதி வாரியாக நடிகர் விஜய் நிர்வாகிகளை நியமனம் செய்து வருகிறார். மேலும் பெண்கள், இளம் தலைமுறையினரின் வாக்குகளை கவரும் வகையில் விஜய் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு சட்டசபை தொகுதி வாரியாக பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கி குடும்பத்துடன் போட்டோவும் எடுத்து கொண்டார்.
இந்நிலையில் தான் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஒரு வாரத்தில் கட்சி கொடி வெளியிட வாய்ப்புள்ளது. அதாவது விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பிறந்தநாளையொட்டி புதுச்சேரியில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று 100க்கும் அதிமகமானவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். அப்போது தான் இன்னும் ஒரு வாரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகம் செய்யப்பட உள்ளது என்று புஸ்ஸி ஆனந்த் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதன்மூலம் நடிகர் விஜய் தற்போது முழு நேர அரசியல்வாதியாக மாற தயாராகி விட்டார். முன்னதாக கள்ளக்குறிச்சியில் கடந்த மாதம் கள்ளச்சாராயம் குடித்து 66 பேர் பலியாகினர். அப்போது நடிகர் விஜய் நேரடியாக கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும் இந்த சம்பவம் பற்றி அவர் கட்சியின் எக்ஸ் பக்கத்தில் இந்த சம்பவம் என்பது அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது என முதல் முறையாக ஆளும் திமுகவுக்கு எதிராக குற்றம்சுமர்த்தினார்.
அதேபோல் சமீபத்தில் நடந்து 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒவ்வொரு சட்டசபை தொகுதிகளிலும் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளை நேரில் அழைத்து நடிகர் விஜய் பாராட்டினார். இந்த வேளையில் நீட் தேர்வால் ஏழை, கிராமப்புற, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
இத்தேர்வு மாநில அரசுகளின் உரிமைகளுக்கு எதிரானது. நீட் தேர்வு தேவையில்லை என்பது தான் எனது கருத்து. நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு கொண்டு வந்த சட்டப்பேரவை தீர்மானத்தை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன். ” என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்தார். மேலும் அவர் மத்திய அரசு என்பதற்கு பதில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை போன்று ஒன்றிய அரசு என்ற வார்த்தையை பயன்படுத்தினார். இதன்மூலம் அவர் மத்திய அரசையும் விமர்சிக்க தொடங்கினார்.
இப்படி ஆளும் மாநில அரசு, மத்திய அரசை விமர்சிக்க தொடங்கி உள்ள நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை இன்னும் ஒருவாரத்தில் அறிமுகம் செய்ய உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. இருப்பினும் கட்சியின் கொடி எப்படி இருக்கும்? கொடியின் நிறம்? கொடியில் ஏதேனும் படம் இடம்பெறுமா? என்பது பற்றிய எந்த தகவலும் தற்போது வெளியாகவில்லை. இதனால் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் உள்பட அனைவருமே நடிகர் விஜயின் கட்சியின் கொடியை எதிர்நோக்கி காத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications