கல்யாணமே ஆகலை குழந்தைகள் எப்படினு போலீஸ் விசாரிச்சாங்களாம்! ஏன் இவ்வளவு கோபம்! கஸ்தூரி உருக்கம்
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மட்டும் கஸ்தூரி எப்படி குழந்தைகளை விட்டுவிட்டுச் சென்றார் என சமூகவலைதளங்களில் பலர் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.அதை விட மோசமாக கஸ்தூரிக்கு கல்யாணமே ஆகலை குழந்தை எப்படினு போலீஸார் விசாரணை நடத்தியதாகவும் ஒரு பொய்யான செய்தியை சிலர் பரப்பியதாகவும் கஸ்தூரி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நவம்பர் மாத தொடக்கத்தில் பிராமணர்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரியும் கலந்து கொண்டார். அப்போது அவர் பிராமணர்களை சிலர் வந்தேறிகள் என விமர்சிப்பது குறித்து பேச முற்பட்டபோது தெலுங்கர்கள் குறித்து அவர் ஆபாசமாக பேசி அந்த சமூகத்தின் மீது அவதூறு கருத்துகளை அள்ளி தெளித்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

கஸ்தூரி மீது தமிழகத்தில் உள்ள காவல்நிலையங்களில் எல்லாம் வழக்குபர் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவரை இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த சம்மன் கொடுக்க அவருடைய போயஸ் தோட்ட இல்லத்திற்கு போலீஸார் சென்றனர்.
அப்போதுதான் அவரது வீடு பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து அவருடைய செல்போனுக்கு போன் செய்த போது அவரது போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து அவர் தலைமறைவாகிவிட்டதாக சொல்லப்பட்டது.
அவரை தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வந்த நிலையில் மதுரை திருநகர், தேனி ஆண்டிப்பட்டி காவல் நிலையங்களில் தன் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரி கஸ்தூரி முன்ஜாமீன் மனுவை வழக்கறிஞர் மூலம் தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணை நவம்பர் 14 ஆம் தேதி நடத்தப்பட்டது.
அப்போது கஸ்தூரியின் பேச்சை கண்டித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்ற நீதிபதி, அவரது ஜாமீன் மனுவை ரத்து செய்தார். இதையடுத்து கஸ்தூரியை தேடுவதில் போலீஸார் தீவிரம் காட்டினார். இந்த நிலையில் கடந்த 17ஆம் தேதி அவர் ஹைதராபாத்தில் ஒரு தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கியிருந்ததாக சொல்லப்பட்டு அவர் கைது செய்யப்பட்டு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து கஸ்தூரி ஜாமீன் மனுவை தாக்கல் செய்தார். அவருக்கு ஆட்டிஸம் பாதித்த ஒரு குழந்தை இருப்பதால் அவரை பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதால் அவரது ஜாமீன் மனு மீது மனிதாபிமான அடிப்படையில் போலீஸார் எதிர்ப்பு ஏதும் தெரிவிக்காததால் அவருக்கு ஜாமீன் கிடைத்தது.
இந்த நிலையில் கஸ்தூரி தனது கைது குறித்து சில விஷயங்களை ஒரு சேனலுக்கு பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நான் தலைமறைவாக இருந்த போது கைது செய்யப்பட்டேன் என்ற செய்தி உண்மை அல்ல. ஹைதராபாத்தில் எனது வீட்டில் இருந்தேன்.
அங்குதான் எனது புகுந்த வீடு உள்ளது. அங்கு என் மகன் படித்து வருகிறான். திருமணமே ஆகாத கஸ்தூரிக்கு எப்படி குழந்தை என்றெல்லாம் போலீஸார் விசாரணை நடத்துவதாக சமூகவலைதளங்களில் செய்தி பரவியதை வருத்தத்துடன் கண்டிக்கிறேன். காவல் துறையினர் என்னை கண்ணியமாகவே நடத்தினார்கள்.
சிலர் கஸ்தூரி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மட்டும் எப்படி குழந்தைகளை விட்டுவிட்டு சென்றார் என கேட்கிறார்கள். பிக்பாஸுக்கு நான் போவதற்கு முன்பு எனது அத்தை, மாமா ஆகியோர் குழந்தைகளை பார்த்துக் கொண்டார்கள். அதனால் நான் சென்றேன்.
சிறையில் நான் தனியாக அடைக்கப்பட்டேன். நிறைய புத்தகங்களை படித்தேன். புரதங்கள், விட்டமின்கள் கொண்ட சத்தான உணவு கொடுத்தார்கள். எல்லாருக்கும் ஒரே மாதிரியான உணவுதான். சிறையில் நிறைய அப்பாவிகளை சந்தித்தேன். எனக்கு சிறை தண்டனையை விட செல்போன் இல்லாமல் இருந்ததுதான் பெரிய தண்டனையாக இருந்தது. இவ்வாறு கஸ்தூரி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications