நான் எங்கும் ஓடி ஒளியவில்லை! ஹைதராபாத் வீட்டில் இருந்தேன்! அர்ஜுன் சம்பத் டிவிட்டரில் கஸ்தூரி வீடியோ
சென்னை: நான் எங்கும் ஓடி ஒளியவில்லை, ஹைதராபாத்தில் எனது வீட்டில்தான் இருந்தேன். சூட்டிங்கிற்காக ஹைதராபாத் சென்றேன். அங்குதான் தமிழக போலீஸார் வந்து அழைத்ததும் வந்துவிட்டேன் என கஸ்தூரி பேசும் ஒரு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை அர்ஜுன் சம்பத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவில் கஸ்தூரி கூறியிருப்பதாவது: நான் தினமும் ஹைதராபாத்தில் 4 நாட்கள் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். நேற்று கூட நான் ஷூட்டிங் முடித்துவிட்டு என் வீட்டிற்கு வந்தேன். அப்போதுதான் என்னை தமிழக போலீஸார் கைது செய்தனர்.

நான் ஹைதராபாத்தில்தான் வசித்துக் கொண்டிருக்கிறேன் என்றும் அங்குதான் எனக்கு பணி என்பதும் அனைவருக்கும் தெரியும். நான் இதை நிறைய முறை சொல்லியிருக்கிறேன். நான் தலைமறைவு என்ற பேச்சுக்கே இடமில்லை. என்னுடைய போன் என்னிடம் இல்லை.
எனது போனுக்கு ஊடகத்தினர் தொடர்ந்து போன் செய்து வந்தனர். இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக எனது வழக்கறிஞர் எனது போனை வாங்கி வைத்துக் கொண்டார். இப்போது கூட வேறு ஒருவரின் போனில் இருந்துதான் நான் இந்த வீடியோவை போடுகிறேன்.
நான் ஓடவும் இல்லை ஒளியவும் இல்லை என்பதை எல்லாருக்கும் தெரியப்படுத்தவே இந்த வீடியோவை போட்டுள்ளேன். என்னை ஹைதராபாத் வீட்டிற்கு வந்து சம்மன் கொடுத்து அழைத்தார்கள், நானும் ஒத்துழைப்பு கொடுத்து வந்துவிட்டேன். இதுவரை பத்திரிகை செய்திகளை நான் பார்க்கவில்லை. எனக்கு மன நிம்மதிவேண்டும் என்பதால் நான் பார்க்கவில்லை.
இன்று மீடியாக்களில் வந்த செய்திகளை பார்த்தேன். அதில் கஸ்தூரி பயந்து ஓடினார், தலைமறைவு என்றெல்லாம் எழுதியுள்ளார்கள். எனக்கு பயம் எல்லாம் கிடையாது. இதுவரை நான் எந்த அத்துமீறலையும் செய்யவில்லை. என்னை எழும்பூர் காவல் நிலையத்தில் காவலில் எடுத்துள்ளார்கள். இவ்வாறு கஸ்தூரி பேசிய வீடியோ வெளியாகியுள்ளது.
அதிலும் அர்ஜுன் சம்பத்தின் எக்ஸ்தள பக்கத்தில் இருந்து வெளியாகியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு பேசும் மக்கள் குறித்து நடிகை கஸ்தூரி அவதூறாக பேசியதாக வந்த புகாரை அடுத்து கஸ்தூரியை விசாரணைக்கு அழைக்க சென்றனர்.
அப்போது அவருடைய போயஸ் தோட்ட வீடு பூட்டி இருந்தது. செல்போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் அவர் தலைமறைவாகிவிட்டார் என தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வந்தனர். இந்த நிலையில்தான் அவர் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருந்தார்.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். இதையடுத்து கஸ்தூரியை கைது செய்ய போலீஸார் தீவிரம் காட்டிய நிலையில் அவர் ஹைதராபாத்தில் தயாரிப்பாளர் ஹரி என்பவரது வீட்டில் பதுங்கியிருந்ததாக போலீஸாருக்கு தகவல் கிடைத்ததாக சொல்லப்படுகிறது.
அதை வைத்து தனிப்படையினர் ஹைதராபாத் சென்று அங்கு கஸ்தூரி இருக்கும் வீட்டை சுற்றி வளைத்தனர். அப்போது கதவை உள்புறமாக பூட்டியிருந்த கஸ்தூரி, கதவை திறக்க மாட்டேன் என்றார். அதற்கு போலீஸார் நீங்கள் கதவை திறக்காவிட்டால் நாங்கள் உடைத்துக் கொண்டு உள்ளே வருவோம் என எச்சரிக்கை விடுத்தனர். இதனால் அவர் கதவை திறந்ததும் அவரை கைது செய்தனர்.
அவர் கைது செய்யப்பட்டதும் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் விசாரணை செய்யப்பட்டார். பிறகு அவர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார். இந்த நிலையில் அவர் எப்போது இந்த வீடியோவை வெளியிட்டார் என தெரியவில்லை. இந்த வீடியோ சரியாக 2 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.













Click it and Unblock the Notifications