பாஜகவில் தேடி வந்த முக்கியப்பதவி... தொடர்ந்து அமைதி காக்கும் குஷ்பு... காரணம் என்ன..?
சென்னை: பாஜகவில் தன்னை தேடி வந்த முக்கியப் பதவி ஒன்றை நடிகை குஷ்பு வேண்டாம் என நிராகரித்துள்ளார்.
மேலும் தனது மனதில் தோன்றிய கருத்தை துணிச்சலாக பொதுவெளியில் முன் வைக்க தயங்காத குஷ்பு, அண்மைக்காலமாக அமைதி காத்து வருகிறார்.
கையில் 3 வயது குழந்தை.. திடீரென இளம்பெண் செய்த பகீர்.. அரண்டு போன தர்மபுரி கலெக்டர் ஆபிஸ்!
அரசியலில் அவர் காட்டிய வேகமும், தீவிர ஈடுபாடும் முன்பைக் காட்டிலும் இப்போது சற்று குறைந்திருக்கிறது.
குஷ்பு அரசியல்
முற்போக்கு எண்ணங்களை கொண்ட நடிகை குஷ்பு கடந்த 2010-ம் ஆண்டு திமுகவில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். கருணாநிதி மீது கொண்ட மரியாதையும், திராவிட இயக்க கொள்கையும் அவரை திமுகவில் இணைய வைத்தது. திமுகவுக்காக பிரச்சாரம், மேடைப்பேச்சு என பயணித்த அவர் 2014-ம் ஆண்டு திடீரென திமுகவில் இருந்து விலகிக்கொண்டார். கருணாநிதிக்கு பிறகு திமுகவுக்கு யார் தலைமை ஏற்பார்கள் என்ற விவகாரத்தில் அவர் அளித்த பதில் ஸ்டாலின் தரப்பை அதிருப்திக் கொள்ளச்செய்தது.
6 மாத காலம்
இதனால் குஷ்பு திமுகவிலிருந்து விலகிய போது அவரை யாரும் தடுக்கவில்லை. சுமார் 6 மாத காலம் அமைதியாக தொலைக்காட்சி தொடரில் கவனம் செலுத்தி வந்த அவர், திடீரென ஒருநாள் சோனியாகாந்தியை சந்தித்து தன்னை காங்கிரஸில் இணைத்துக்கொண்டார். தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் குஷ்புவின் கணவர் சுந்தர் சியும் ஒரே மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் இருவருக்கும் ஏற்கனவே நெருங்கிய நட்பு இருந்தது. அதன் மூலம் குஷ்புவை காங்கிரசுக்கு அழைத்து வந்தவரே ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தான்.
தமிழக காங்கிரஸ்
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இருந்தவரை, குஷ்புவுக்கு காங்கிரஸில் உரிய முக்கியத்துவம் கிடைத்து வந்தது. திருநாவுக்கரசர் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக பதவியேற்றதை தொடர்ந்து குஷ்புவுக்கு கிடைத்து வந்த முக்கியத்துவம் குறையத் தொடங்கியது. இந்நிலையில் கே.எஸ்.அழகிரி தலைவராக வந்த பிறகு, காங்கிரஸ் நிகழ்ச்சிகளில் குஷ்புவையே பார்க்க முடியாத சூழல் உருவானது. இருப்பினும் டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்கள் வாயிலாக காங்கிரஸ் கட்சிக்காக குரல் கொடுத்து வந்ததோடு அக்கட்சிக்காக தேசிய அளவில் பிரச்சார பயணங்களையும் மேற்கொண்டார்.
எதிர்பார்ப்பு
காங்கிரஸ் கட்சி சார்பில் அவருக்கு எம்.எல்.ஏ., எம்.பி., சீட் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் பதவி மட்டுமே கொடுக்கப்பட்டது. இதனால் ஒரு கட்டத்தில் அக்கட்சியிலிருந்து விலகி, ஜே.பி.நட்டா முன்னிலையில் கடந்த ஆண்டு பாஜகவில் இணைந்தார் குஷ்பு. இதனிடையே நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் குஷ்பு களமிறங்குவார் என தகவல்கள் வெளியாகிய நிலையில் ஆயிரம் விளக்கு தொகுதிக்கு மாற்றப்பட்டார் குஷ்பு.
நிராகரிப்பு
இதனிடையே தேர்தல் முடிவுக்கு பிறகு தொடர்ந்து சைலண்ட் மோடுக்கு சென்றுவிட்டார் குஷ்பு. மேலும், பாஜகவில் தனக்கு வழங்கப்பட்ட தேசியச் செய்திதொடர்பாளர் பதவியை வேண்டாம் எனக் கூறி நிராகரித்துவிட்டார். தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் அறிவிப்புகள், அரசு வேலையில் பெண்களுக்கு 40% இட ஒதுக்கீடு, நீட் விவகாரத்தில் பாஜக அரசு மீதான திமுகவின் குற்றச்சாட்டு என எந்த விவகாரம் குறித்து குஷ்பு கருத்து தெரிவிக்கவில்லை.
6 மாதம் அவகாசம்
குஷ்புவின் அமைதிக்கான காரணம் குறித்து அறிய அவரை நாம் தொடர்பு கொண்டு பேசிய போது, ''மேற்கண்ட விவகாரங்கள் குறித்தெல்லாம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதில் அளித்து வருவதாக தெரிவித்தார். திமுக ஆட்சி அமைந்து சில மாதங்கள் தான் ஆகியிருப்பதாகவும் முழுமையாக 6 மாதங்கள் அவகாசம் அளித்த பிறகே இந்த அரசின் செயல்பாடுகள் குறித்து கருத்து தெரிவிக்க இயலும் எனவும் கூறினார்.''