கனவில் வந்த கருமாரி! திருவேற்காடு கோயில் வாசலில் மடிபிச்சை ஏந்திய நடிகை நளினி!
சென்னை: சென்னை புறநகர் பகுதியான திருவேற்காட்டில் வீற்றிருக்கும் தேவி கருமாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளியையொட்டியும் கும்பாபிஷேக பணிகளுக்காகவும் நடிகை நளினி, மடிப்பிச்சை எடுத்து அதில் கிடைத்த காணிக்கையை உண்டியலில் செலுத்தினார். அவர் ஏன் மடிப்பிச்சை எடுத்தார் என்பது குறித்தும் அவரே விளக்கம் அளித்தார்.
தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரை நடிகையான நளினிக்கு திருவேற்காடு தேவி கருமாரியம்மன் என்றால் உயிர்! அந்த தெய்வத்தை அனுதினமும் வேண்டிக் கொண்டே இருப்பார்.

தேவி கருமாரியம்மன் தன் வாழ்வில் நடத்திய திருவிளையாடல்கள் குறித்து நிறைய பேட்டிகளில் நளினி தெரிவித்துள்ளார். அந்த வகையில் ஒரு முறை அவர் தேவி கருமாரியம்மனின் பெரிய புகைப்படத்தை வைத்துக் கொண்டு வீட்டில் வழிபட்டு வந்தாராம்.
எப்போதும் அந்த தெய்வத்திற்கு பூஜை, புனஸ்காரம் என இருந்த நிலையில் இதை கவனித்த மாமியார் (ராமராஜனின் தாய்), "என்ன எப்ப பார்த்தாலும் சாமி சாமினு இருக்கே" என கேட்டு, அந்த தெய்வத்தின் புகைப்படத்தை வெளியே தூக்கி போட்டுவிட்டாராம்.
இதனால் நளினி, ராமராஜனிடம் அழுதாராம். சிறிது நேரத்திற்கெல்லாம் நளினியின் உடல் குண்டாகிவிட்டதாம். இதை பார்த்த மாமியார் பயந்து போய் மருத்துவமனையில் சேர்த்தாராம். அப்போது நிறைய சிகிச்சை கொடுத்தும் அவரது உடல்நிலையில் மாற்றம் ஏற்படவில்லையாம்.
அப்போது ராமராஜன், மாமியாரிடம் நளினி, "எனக்கு தேவி கருமாரியம்மன் புகைப்படம் வேண்டும். அதை பூஜிக்க எனக்கு அனுமதி கொடுக்க வேண்டும்" என கேட்டாராம். அவர்களும் ஒப்புக் கொண்டதை அடுத்து சிறிது நேரத்திற்கெல்லாம் உடல் மெலிந்துவிட்டதாம். "எப்போதும் தேவி கருமாரியம்மனுக்கு பூஜை செய்து வருகிறேன். அவரை வணங்கிய பிறகுதான் என் வாழ்க்கையில் எத்தனை நன்மைகள் நடந்தன" என நளினி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி நளினி, திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலுக்கு வந்திருந்தார். அப்போது அவர் மடிபிச்சை எடுத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அவர் கூறுகையில், எனது இஷ்ட தெய்வம், என்னுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் தெய்வம், எனது உயிராக இருக்கும் தெய்வம் திருவேற்காடு ஸ்ரீகருமாரியம்மன் எனது கனவில் வந்து எனக்கு என்ன செய்ய போகிறாய் என கேட்டாள்.
என்ன செய்வது என தெரியாமல் மடிப்பிச்சை ஏந்தி, என்னால் முடிந்த காணிக்கையை தருகிறேன் அம்மா என தெரிவித்தேன். இவ்வாறு நளினி தெரிவித்தார். நளினி கோயில் வாசலில் நின்று மடிபிச்சை எடுத்த போது ஏராளமான பக்தர்கள் தங்களால் முடிந்த காணிக்கை கொடுத்தனர். நேற்று காலை 6 மணி முதல் அவர் மடிப்பிச்சை ஏந்தினார். விரைவில் அம்மனுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
ராமராஜனை காதலித்து நளினி திருமணம் செய்தார். இருவரும் 13 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தனர். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 2000ஆம் ஆண்டு முதல் பிரிந்து வாழ்கிறார்கள். விவாகரத்தும் கிடைத்துவிட்டது.
இவர்களுக்கு அருணா, அருண் என்ற இரு குழந்தைகள் உள்ளனர். விவாகரத்துக்கு பின்னர் நடிக்கத் தொடங்கிய நளினி, தொலைக்காட்சி சீரியல்களில் நடித்துள்ளார். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி, வாழும் தெய்வம், சமயப்புரத்தாலே சாட்சி உள்ளிட்ட படங்களில் நளினி அம்மன் வேடங்களில் நடித்துள்ளார்.












Click it and Unblock the Notifications