25,000 கூடுதல் வாக்குச் சாவடிகள்.. முதியோருக்கு தபால் ஓட்டு.. சுனில் அரோரா சொன்ன முக்கிய தகவல்கள்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலின்போது கூடுதலாக 25,000 வாக்குப் பதிவு மையங்கள், முதியோருக்கு தபால் வாக்குரிமை வழங்குவது உள்ளிட்ட பல முக்கிய தகவல்களை, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று சென்னையில் தெரிவித்தார்.
தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான 8 பேர் கொண்ட தேர்தல் அதிகாரிகள் குழு நேற்று முதல் சென்னையில் முகாமிட்டு உள்ளது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் பற்றி இந்த குழு ஆய்வு நடத்தியது. மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தலைமை தேர்தல் அதிகாரி, டிஜிபி, அரசியல் கட்சியின் பிரதிநிதிகள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பல தரப்பினரிடமும் தொடர்ந்து ஆலோசனை நடத்தியது இந்த குழு.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் எப்போது நடைபெறும்? தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா பதில் இதுதான்
பின்னர் சுனில் அரோரா நிருபர்களிடம் கூறிய முக்கிய தகவல்கள் இவைதான்:
- வாக்காளர்களுக்கு பணம் தருவதை தடுக்க, இரண்டு தேர்தல் செலவின பார்வையாளர்கள் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்
- வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கையின் போது வீடியோ பதிவு செய்யப்படும்
- கொரோனா காரணமாக தமிழகத்தில் கூடுதலாக 25,000 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும், அதாவது, வாக்கு பதிவு மையங்கள் 68,000த்திலிருந்து 93,000 ஆக அதிகரிக்கப்படும்.
- தேர்தலில் வாக்களிக்க கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கப்படும்
- ஆர் கே நகர், வேலூர் இடைத்தேர்தல் போன்று தமிழக சட்டமன்ற தேர்தல் இருக்காது
- தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலும் சேர்த்து நடத்தப்படும்
- விழாக் காலம், தேர்வு உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டே தேர்தல் தேதி இறுதி செய்யப்படும்
- 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு தபால் முறையில் வாக்களிப்பது தொடர்பாக, கட்சிகளிடையே மாறுபட்ட கருத்து இருக்கிறது.
- ராஜஸ்தானில் தபால் வாக்கு முறையில் எந்த முறைகேடும் நடக்கவில்லை, எனவே, முதியோர்கள் தபால் மூலம் வாக்களிக்கும் முறை தொடரும்
- தமிழகத்தில் பாதுகாப்பு பணிக்கு முழு அளவில் மாநில போலீசார் பயன்படுத்தப்படுவர், தேவைக்கு ஏற்ப மத்திய படைகள் பயன்படுத்தப்படும். இவ்வாறு சுனில் அரோரா தெரிவித்தார்.