முதல்வரின் முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரனுக்கு கூடுதல் பொறுப்பு.. 'அந்த' நம்பிக்கையே காரணம்
சென்னை: முதல்வரின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரி உதயச்சந்திரனுக்கு கூடுதல் பொறுப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற நிலையில், பள்ளிக் கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் திறம்படச் செயலாற்றிய உதயச்சந்திரன், மருத்துவப் பணிகள் கழகம் உள்ளிட்ட துறைகளில் சிறப்பாகச் செயலாற்றிய உமாநாத் உள்ளிட்ட 4 ஐஏஎஸ் அதிகாரிகள் முதல்வர் ஸ்டாலினின் தனிச் செயலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தொல்லியல் துறை ஆணையராக பதவி வகித்த முதன்மைச் செயலர் உதயச்சந்திரன், முதல்வரின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பள்ளிக் கல்வித்துறையில் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தி அசத்திய உதயச்சந்திரன் 1995 பேட்ச் அதிகாரியாவார்.
தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக முன்னாள் எம்.பி. சண்முகசுந்தரம் நியமனம்!
அதிரடி ஆக்ஷன்
குறிப்பாக, அவர் 2011ல் டி.என்.பி.எஸ்.சி செயலாளராக நியமிக்கப்பட்ட போது, டி.என்.பி.எஸ்.சி நிர்வாகத்தில் நடந்த ஊழலை கண்டறிந்தார். பணம் பெற்றுக் கொண்டு, தேர்வில் பாஸ் செய்ய வைப்பதும், வேலை வாங்கிக் கொடுப்பது என்று நடந்த மோசடிகளை கண்டறிந்த உதயச்சந்திரன், தகுந்த ஆதாரத்தோடு மொத்த கும்பலையும் சிக்க வைத்து அதிரடி காட்டினார். குறிப்பாக, அப்போது டி.என்.பி.எஸ்.சி. தலைவராக இருந்த செல்லமுத்துவும் இந்த மோசடியில் சிக்க அவரது பதவியே காலியானது.
பெரும் வரவேற்பு
பிறகு, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, பள்ளிக்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்ட உதயச்சந்திரன், 10வது மற்றும் 12வது வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும்போது மாநிலத்திலும் பள்ளியிலும் முதல் மூன்று இடங்கள் பெற்றவர்களை அறிவிக்கத்தடை விதித்து உத்தரவிட்டார். இது உளவியல் ரீதியாக மாணவர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. லட்சக்கணக்கான மாணவர்களின் பெற்றோர்கள் இவரது இந்த உத்தரவுக்கு பெரும் வரவேற்புக் கொடுத்தனர். அதுமட்டுமின்றி, பன்னிரெண்டாம் வகுப்பில் மொத்தம் 1200 மதிப்பெண்கள் என்றிருந்ததை 600 ஆக குறைத்ததும் இவர் தான்.
மாணவர்கள் வளர்ச்சி
அதேபோல், +1 மற்றும் +2 இரண்டிற்கும் பொதுத்தேர்வு.புதுமைகளை புகுத்தி சிறப்பாகச் செயல்படும் அரசு பள்ளிகளை கண்டறிந்து மாவட்டத்திற்கு 4 பள்ளிகள் வீதம் தேர்ந்தெடுக்கப்பட்டு "புதுமைப் பள்ளி" விருது ரூ.1.92 கோடி செலவில் வழங்கப்படும் . 486 அரசு நடுநிலைப் பள்ளிகளில் ரூ 6.71 கோடி செலவில் கணினி வழிக் கற்றல் மையங்கள் அமைக்கப்படும். 5639 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு நாப்கின் வழங்கும் இயந்திரம் மற்றும் எரியூட்டி இயந்திரம் ரூ. 22.56 கோடி செலவில் வழங்கப்படும். 31322 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ. 4.83 கோடி செலவில் நாளிதழ்கள் மற்றும் சிறுவர் இதழ்கள் வழங்கப்படும் போன்ற இவரது பல சீர்திருத்தங்கள் வரவேற்பு பெற்றன.
சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை
இந்த நிலையில், தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக ஆட்சியில், முதல்வரின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள உதயச்சந்திரனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை இவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், தமிழக அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் புதிய திட்டங்கள், நடைமுறையில் உள்ள மக்கள் நலத் திட்டங்கள் ஆகியவற்றைக் கண்காணிப்பது, அவற்றை சீரிய முறையில் அமல்படுத்துவது ஆகிய பணிகளை உதயச்சந்திரன் மேற்கொள்வார்.