என்ட்ரி கொடுக்கும் ஆதவ் அர்ஜுனா.. துள்ளி எழும் அதிமுக! ஏற்கனவே பி.கே வேற இருக்காரே! 2026ல் கச்சேரி!
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு, பின்னர் தானாகவே ராஜினாமா செய்த ஆதவ் அர்ஜுனா அதிமுகவில் இணைய இருப்பதாக தகவல்கள் உலாவுகின்றன. ஏற்கனவே பிரசாந்த் கிஷோரின் ஐ பேக் நிறுவனத்துடன் அதிமுக ஒப்பந்தம் மேற்கொண்டு இருப்பதாக கூறப்படும் நிலையில் அதிமுகவினர் உற்சாகமடைந்திருக்கின்றனர். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்காக ஆதவ் அர்ஜுனாவும், ஐ பேக்கும் இணைந்து வியூகம் வகுத்தது குறிப்பிடத்தக்கது.
பிரபல தொழிலதிபர் மார்ட்டினின் உறவினரும், வாய்ஸ் ஆஃப் காமன் நிறுவனருமான ஆதவ் அர்ஜுனா விடுதலை சிறுத்தைகள் கட்சியில் சேர்ந்த 21 நாட்களில் துணை பொது செயலாளர் பதவியை பெற்றதோடு, கட்சியின் சில நிகழ்வுகளை கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்.

குறிப்பாக மாநாடுகளை ஒருங்கிணைப்பது, அறிக்கைகள் வெளியிடுவது என இருந்த ஆதாப் அர்ஜுனா திடீரென ஆட்சி அதிகாரத்தில் பங்குப் கூட்டணியில் இல்லாமல் திமுக ஜெயிக்க முடியாது எனக் கூறியது அந்தக் கூட்டணியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால் திமுகவினர் கொந்தளித்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குள்ளேயே அவருக்கு எதிர்ப்பு எழுந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளின் பலத்தை எதிர்ப்பை பெற்றது. இதை அடுத்து அவரை ஆறு மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்தார் திருமாவளவன். அதே நேரத்தில் தானே கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்த ஆதவ் அர்ஜுனா ஒரு அறிக்கையையும் வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில் விஜய் கட்சியில் ஆதார் அர்ஜுனா சேரப் போவதாகவும், கட்சியில் துணை பொது செயலாளர் பதவி அல்லது பொருளாளர் பதவியை அவர் கேட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் ஆதவ் அர்ஜுனாவை கட்சியில் சேர்க்க வேண்டாம் என தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் விஜயை அறிவுறுத்தியதாக கூறப்பட்ட நிலையில் அது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் புதிய தகவல் அதிமுகவினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதாவது அதிமுகவில் ஆதவ் அர்ஜுனா சேர பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் அதற்கு எடப்பாடி பழனிச்சாமி சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் விரைவில் அவர் அதிமுகவில் இணையலாம் என கூறுகின்றனர் சீனியர்கள். இது தொடர்பாக சில முக்கிய நிர்வாகிகளிடம் பேசிய போது,"ஏற்கனவே அதிமுகவுக்கு பல வியூக நிபுணர்கள் வேலை செய்து வந்திருக்கின்றனர். ஆனால் அது பெரிய அளவில் பலனளிக்கவில்லை. இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்த ஆதவ் அர்ஜுனா அந்த கட்சியை ஊடக வெளிச்சத்திற்கு கொண்டு சென்றார் என்று தான் கூற வேண்டும்.
குறிப்பாக மது ஒழிப்பு மாநாடு, ஆட்சி அதிகாரத்தில் பங்கு என ஆதவ் அர்ஜினாவின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்தது. ஆனால் அவருக்கு எதிராக அந்தக் கட்சி நிர்வாகிகள் திரும்பியதால் கட்சியில் இருந்து வெளியேற நேரிட்டது. இந்த நிலையில் அதிமுகவுடன் அவர் பேச்சு வார்த்தை நடத்தினார். அதில் சுமூக உடன்பாடு ஏற்றப்பட்டு இருக்கிறது. துணை கொள்கை பரப்பு செயலாளர் பதவி வழங்கவும் தயாராக இருக்கிறது எடப்பாடி தரப்பு. விரைவில் அது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம்" என்கின்றனர்.
ஏற்கனவே அதிமுகவுடன் பிரசாந்த் கிஷோரின் ஐ பேக் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. தற்போது பிரசாந்த் கிஷோர் தனியாக கட்சி தொடங்கி இருக்கும் நிலையில் அவர் நேரடியாக வியூகம் வகுக்க வில்லை. அதே நேரத்தில் அந்த அமைப்பின் கட்டுப்பாடும், வியூகம் வகுக்கும் விவகாரங்களிலும் அவர்தான் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்காக ஆதவ் அர்ஜுனாவும் ஐ பேக் நிறுவனமும் சேர்ந்து வேலை பார்த்தது.
"ஸ்டாலின் தான் வராரு விடியில் தரப் போறாரு" என்ற கோஷம் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது. மேலும் சில தேர்தல் வாக்குறுதிகளையும், வேட்பாளர் பட்டியலையும், ஐ பேக் நிறுவனமே தயாரித்துக் கொடுத்தது. தற்போது திமுகவுக்கு எதிராக மக்கள் கொந்தளிப்பில் இருக்கும் நிலையில் ஐ பேக் நிறுவனமும் ஆதவ் அர்ஜுனாவும் அதிமுகவுக்கு வியூகம் வகுத்துக் கொடுத்தால் வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கும் என்பதால் அதிமுகவினர் உற்சாகத்தில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications