விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்! 5 தலை ஆதிசேஷன் நிழலில் அம்சமான கணபதி.. கீழே கொழுக்கட்டையுடன் எலியார்!
சென்னை: விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்காக இளம் சிற்பி சந்தனத்திலாலாந ஆதிசேஷ நாராயண கணபதி சிலையை வடிவமைத்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தி வரும் 31 ஆம் தேதி புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. இதனால் ஆங்காங்கே விநாயகர் சிலைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. களிமண்ணிலும் பிளாஸ்டர் ஆப் பாரிஸிலும் இச்சிலைகள் செய்யப்படுகின்றன.
ஆனால் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த இளம் சிற்பி ஒருவர் சந்தன மரத்தால் விநாயகர் சிலையை உருவாக்கியுள்ளார். அவர் பிரபல கைவினைக் கலைஞர் டி.கே. பரணியின் மகனாவார்.

திருமழிசை
திருமழிசையைச் சேர்ந்த கைவினைக் கலைஞர் டி.கே. பரணி. இவர் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி விதவிதமான அதே நேரத்தில் வித்தியாசமான விநாயகர் சிலைகளை செய்வதில் வல்லவர். இவர் செய்யும் சிலைகள் அனைத்தும் சந்தன மரக்கட்டைகளால் ஆனது.

தாத்தா காலம் முதல்
இவர் தனது தாத்தா காலம் முதல் இந்த நுண்சிற்பக் கலையை செய்து வருகிறார். வழிவழியாக செய்து வரும் நிலையில் தற்போது அவரது மகனும் மகளும் இந்த கலையைச் செய்து வருகிறார்கள். இவரது சிற்பங்கள் டெல்லியில் உள்ள தாஜ் கசானா என்ற கடையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இவரது தயாரிப்பில் உருவான ராதே கிருஷ்ணா சிலைதான் அமெரிக்க அதிபராக இருந்த பராக் ஒபாமா இந்தியா வந்த போது அவருக்கு பரிசாக அளிக்கப்பட்டது.

ஒற்றை அரிசி
இவர் ஒற்றை அரிசியிலும் சிற்பங்களை செய்துள்ளார். இந்த நிலையில் இவரது மகன் திலீப் தற்போது ஸ்ரீஆதிசேஷ நாராயண கணபதி சிலையை வடிவமைத்துள்ளார். இதுகுறித்து திலீப் கூறுகையில் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக எனது தந்தையும், தேசிய விருது பெற்ற கைவினைக் கலைஞருமான டி.கே. பரணியிடம் அரிசியிலும், சந்தன மரத்தில் நுண்சிற்பங்கள் செய்யக் கற்றுக் கொண்டேன்.

விநாயகர் சதுர்த்தி
தற்போது விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்காக என்னுடைய கற்பனையில் "ஸ்ரீ ஆதிசேச நாராயண கணபதி" சந்தனச் சிற்பத்தை உருவாக்கியுள்ளேன்" என்றார். இந்த விநாயகர் சிலையின் 7 அங்குலமாகும், அகலம்: 5 அங்குலத்திலும், குறுக்களவு 2 அங்குலத்திலும் மிக நுண்ணிய முறையில் அமைந்துள்ளது.

3 மாத காலம்
சுமார் 3 மாத காலமாக இந்த சிற்பத்தை திலீப் வடிவமைத்துள்ளார். ஆதிசேஷ வாகனத்தில் நாராயண கணபதி வீற்றிருப்பதைப் போல சிலை மிகவும் அழகுற அமைந்துள்ளது. தமிழக அரசின் மரபுவழி விருது 2018-ம் ஆண்டு பெற்றுள்ளார். சந்தன மரக்கட்டைகளை அரசு மானிய விலையில் கொடுத்து இவர்களை போன்ற சிற்பிகளை ஊக்குவிக்க வேண்டும் என்பதே இவர்களது கோரிக்கையாகும்.












Click it and Unblock the Notifications