“படுத்து பதவி”.. அவங்க வீட்டு பெண்களை விட்டு பிழைச்சாதான் இப்படி சொல்ல மனசு வரும்! டெய்சி ஆத்திரம்!
சென்னை : 'படுத்து பதவி வாங்கி இருப்பே' என்று மனசாட்சியேயின்றி, வக்கிர புத்தியோடு பேசும் ஆண்கள், தன் வீட்டு பெண்களை அப்படி விட்டு பிழைப்பு நடத்தினால் மட்டுமே இப்படி எழுத மனசு வரும் என பாஜக சிறுபான்மையினர் அணி தலைவர் டெய்சி சரண் பொங்கியுள்ளார்.
பாஜகவின் திருச்சி சூர்யா, பாஜக நிர்வாகி டெய்சி சரணை மிகவும் ஆபாசமாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்த ஆடியோ சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இருவரும் சமாதானமாகி நாங்கள் அக்கா தம்பி போல என அறிவித்தனர்.
ஆபாசமாக பேசிய விவகாரம் சுமூகமாக முடித்துக் கொள்ளப்பட்டதாகவும், பாஜகவுக்கு களங்கம் ஏற்படுத்தவே ஆளுங்கட்சியினர் இதனை பெரிதுபடுத்தியதாகவும் திருச்சி சூர்யாவும், டெய்சியும் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில், தான் பாஜகவில் பதவி பெற்றது பற்றி அருவருப்பாக விமர்சிப்பவர்கள் பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் டெய்சி சரண்.
கணபதி ஐயர் “பேக்கரி”.. சூர்யா சிவா - டெய்சி அக்கா தம்பி “டீலிங்”.. வடிவேலு காமெடியை இழுத்த கஸ்தூரி
டெய்சி - சூர்யா ஆடியோ
பாஜக ஓபிசி பிரிவின் மாநிலச் செயலாளராக இருக்கும் திருச்சி சூர்யா சிவா, பாஜக சிறுபான்மையினர் பிரிவின் தலைவராக இருக்கும் டெய்சி சரணை செல்போனில் அருவருப்பான வார்த்தைகளால் திட்டிய உரையாடல் ஆடியோ சில நாட்களுக்கு முன்பாக சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த உரையாடலில் திருச்சி சூர்யா, டெய்சி சரணை மிக ஆபாசமான முறையில் வசைபாடியிருந்தார்.
பதவிக்கு வந்தது எப்படி
அந்த ஆடியோவில் திருச்சி சூர்யா, டெய்சி சரணை மிகவும் தரக்குறைவான கெட்ட வார்த்தைகளால் தாக்கிப் பேசியதோடு, டெய்சி நடத்தை குறித்தும் அவர் பாஜகவில் பதவி பெற்றது குறித்தும் கடுமையாக இழிவுபடுத்துவதோடு, பாஜகவின் முன்னணி நிர்வாகி ஒருவரோடு இணைத்தும் மோசமாகப் பேசினார். டெய்சியை கொன்று விடுவேன் என்றும், டெய்சி கொல்லப்பட்டால் அதற்குத் தான் தான் பொறுப்பு என்றும் பகிரங்கமாகக் கொலை மிரட்டலும் விடுத்தார்.
அண்ணாமலை நடவடிக்கை
இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அந்த விவகாரத்தை அக்கட்சியின் மாநில ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரிக்கும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்தார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்ட பாஜக வெளிநாட்டு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவின் செயலாளர் காயத்ரி ரகுராம் கட்சிப் பொறுப்புகளில் இருந்து 6 மாத காலம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
சூர்யா டெய்சி விளக்கம்
தொடர்ந்து, திருப்பூர் பா.ஜ.க அலுவலகத்தில் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கனகசபாபதி தலைமையில் டெய்சி சரண், திருச்சி சிவா ஆகிய இருவரையும் ஒரே நேரத்தில் வரவழைத்து விசாரிக்கப்பட்டது. இதில், போனில் கடுமையாக மோதிக்கொண்ட டெய்சியும் சூர்யா சிவாவும் ஆஜராகி தத்தம் தரப்பு விளக்கங்களை அளித்தனர். அதன் பிறகு சூர்யா சிவாவும் டெய்சியும் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அக்கா - தம்பி
அப்போது பேசிய டெய்சி சரண், "கனகசபாபதி முன்னிலையில் இருவரும் எங்கள் தரப்பைச் சொன்னோம். ஒருவருக்கொருவர் பேசி, இந்த விஷயத்தை விட்டுவிடலாம் என முடிவு செய்தோம். யாருடைய வற்புறுத்தலும் இதில் இல்லை. யார் கண்ணோ பட்டதுபோல இந்த நிகழ்வு நடந்துவிட்டது. அவரை ஒரு தம்பி போல நினைக்கிறேன். ஆரம்பத்தில் அவர் என்னை அக்கா என்றுதான் கூப்பிட்டார். நானும் தம்பி என்றுதான் அழைத்தேன். திரும்பவும் அதேபோல தொடர்ந்து பயணிக்க முடிவு செய்துள்ளோம். ஊடகங்கள் இதைப் பெரிதுபடுத்த வேண்டாம்." என்று தெரிவித்தார்.
படுத்து பதவி வாங்கி இருப்பே
இந்நிலையில் தான் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் பாஜகவின் டெய்சி சரண் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், "'படுத்து பதவி வாங்கி இருப்பே' என்று மனசாட்சியே இன்றி, வக்கிர புத்தியோடு பேசும் ஆண்கள், தன் வீட்டு பெண்களை அப்படி விட்டு பிழைப்பு நடத்தினால் மட்டுமே இப்படி எழுத மனசு வரும்! இறைவனுக்கு பயந்து வாழும் நல்ல மனிதனால் இப்படி குரூரமாக மற்றவனை பேச முடியாது! வெந்த மனதில் ஈட்டி பாய்ச்சாதீர்!" என குமுறியுள்ளார்.
ஆடியோவில் சூர்யா குறிப்பிட்டது
சூர்யா சிவா போனில் தன்னை திட்டியது தொடர்பான விவகாரத்தில் சுமூகமாக செல்வதாகத் தெரிவித்த டெய்சி சரண் பதிவிட்ட இந்தக் கருத்து மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சூர்யா சிவா தான் போனில் டெய்சி பதவி பெற்றது தொடர்பாக கொச்சையாக விமர்சித்தார். அதனைச் சுட்டிக்காட்டி சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்தனர். இந்நிலையில் தான், அந்த விஷயத்தைச் சொல்லி ட்விட்டரில் டெய்சி சரண் பதிவிட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.