விவசாயத்தை அழிக்கும் சிப்காட் வேண்டாம்.. அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்.. களத்தில் இறங்கும் எடப்பாடி!
சென்னை: திமுக அரசைக் கண்டித்து திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் வரும் அக்டோபர் 4ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்காக திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தொகுதி, அனக்காவூர் ஒன்றியத்தைச் சேர்ந்த 9 ஊராட்சிகளில் உள்ள சுமார் 3300 ஏக்கர் விவசாய விளை நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இந்த சிப்காட் பணிக்காக விளை நிலங்கள் கையகப்படுத்தும் பணிக்கு விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "எதிர்க்கட்சியாக இருக்கின்றபோது அரசியல் காரணங்களுக்காகவும், வாக்குகளைக் கவர வேண்டும் என்ற நோக்கத்திற்காகவும், அதிமுக அரசு செயல்படுத்திய பல்வேறு மக்கள் நலத் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுவதையே தனது குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டவர் திமுக தலைவர் ஸ்டாலின். திமுக எதிர்க்கட்சியாக இருக்கின்றபோது என்னென்ன காரணங்களுக்காக ஆர்ப்பாட்டங்களையும், போராட்டங்களையும் நடத்தியதோ, அதையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு, தற்போது இந்த அரசு மக்கள் விரோத விடியா அரசாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.
அந்த வகையில், திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், செய்யாறு சட்டமன்றத் தொகுதி, அனக்காவூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல்மா, தேத்துறை, குறும்பூர், நர்மா பள்ளம், நெடுங்கல், அத்தி, வடஆளப்பிறந்தான், இளநீர்குன்றம், வீரம்பாக்கம் ஆகிய 9 ஊராட்சிகளைச் சேர்ந்த சுமார் 3,300 ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாய விளை நிலங்களை 'சிப்காட் தொழிற்பூங்கா விரிவாக்கம்' என்ற பெயரில் கையகப்படுத்துவதற்கான செயலில் விடியா திமுக அரசு இறங்கி உள்ளது. இச்செயல் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சீர்குலைப்பதாக அமைந்துள்ளது. இதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் செயலில் ஈடுபட்டுள்ள விடியா திமுக அரசைக் கண்டித்தும்; விவசாய நிலங்களை கையகப்படுத்தும் முடிவை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக திருவண்ணாமலை வடக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில், 4.10.2023 - புதன் கிழமை காலை 10.30 மணியளவில், அனக்காவூர் கிழக்கு ஒன்றியம், மேல்மா கூட்டு ரோடு என்ற இடத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சேவூர் S. இராமச்சந்திரன், M.L.A., கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான முக்கூர் N. சுப்பிரமணியன் ஆகியோர் தலைமையிலும்; திருவண்ணாமலை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் தூசி K. மோகன், Ex. M.L.A., கழக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளருமான R.M. பாபுமுருகவேல், Ex. M.L.A., ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், திருவண்ணாமலை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களும், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ள வேண்டும். விவசாயப் பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பதற்கும்; விவசாய விரோத விடியா திமுக அரசைக் கண்டித்தும் நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பொதுமக்களும், விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் பெருந்திரளான அளவில் கலந்துகொண்டு ஆதரவு நல்கிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications