இன்ஸ்டால்மென்டில் நடைபயணம்.. அண்ணாமலைக்கு தமிழ்நாட்டுல என்ன நடக்குதுனே தெரியாது: விளாசிய ஜெயக்குமார்
சென்னை: இன்ஸ்டால்மென்டில் நடைபயணம் செல்லும் அண்ணாமலைக்கு தமிழ்நாட்டில் என்ன நடந்தது, நடக்கிறது என்பதே தெரியாது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
சென்னையில் புதன்கிழமை இரவு கடுமையாக பெய்த கனமழையால் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கியது. மழை விட்ட பிறகு பல பகுதிகளில் தண்ணீர் வடிந்தாலும், தியாகராய நகர், மாம்பலம் உள்ளிட்ட சில பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் மக்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி அதிகாரிகள், மழைநீரை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை மழையால் மழைநீர் தேங்கியுள்ளதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இந்நிலையில், சென்னை தரமணியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பார்வையிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஜெயக்குமார், "4000 கோடி செலவு செய்து வடிகால் அமைத்துள்ளோம். இனி எங்கும் தண்ணீர் நிற்காது என்றார்கள். இன்றைக்கு பாருங்கள். சென்னை முழுவதும் அனைத்து இடங்களிலும் மழைநீர் தேங்கியுள்ளது. 4000 கோடியை முறையாக பயன்படுத்தி இருந்தால் இப்படி தண்ணீர் தேங்கி இருக்காதே" என்றார்.
மேலும் பேசிய அவர், "சமயோசிதமாக செயல்பட்டு, கூட்டங்களை நடத்தி, எந்தெந்த தாழ்வான பகுதிகளில் மழை தேங்கும் என்பதை கண்டறிந்து, அங்கெல்லாம் திறன் வாய்ந்த நீர் உறிஞ்சும் இயந்திரங்களை தயாராக வைத்திருந்து பயன்படுத்தி இருக்க வேண்டும். மருத்துவ முகாம்கள் இல்லை, மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சாப்பாடு வழங்கப்படவில்லை. அதற்கு இந்த அரசுக்கு வக்கில்லை. சென்னை அந்தமான் போல ஆகிவிட்டது. தொடர்ந்து கனமழை பெய்திருந்தால் திமுக அரசின் சாயம் வெளுத்துப் போயிருக்கும்." என்றார்.
மேலும், பாஜக தலைவர் அண்ணாமலை, இத்தனை ஆண்டு காலமாக ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் மழைநீர் வடிகால் பணிகளை சரிசெய்யவில்லை என விமர்சித்தது பற்றி பேசிய ஜெயக்குமார், "இன்ஸ்டால்மென்டில் நடைபயணம் செல்லும் அண்ணாமலைக்கு தமிழ்நாட்டில் என்ன நடந்தது, நடக்கிறது என்பதே தெரியாது. கடந்த கால ஆட்சி குறித்து அவர் குறை சொல்லக் கூடாது. காமாலை வந்தவர்களுக்கு காண்பதெல்லாம் மஞ்சள் என்பது போல, அண்ணாமலை பார்வையில்தான் பிரச்சனை உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதன் காரணமாக வருகின்ற டிசம்பர் 6 ஆம் தேதி வரை தனது நடைபயணத்தை ரத்து செய்துள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. சென்னை மழையால் மழைநீர் தேங்கியது குறித்துப் நேற்று சமூக வலைதளத்தில் பதிவிட்ட அண்ணாமலை, "ஒவ்வொரு அரசும், மழைநீர் வடிகால் பணிகள் என்று கூறி செலவிட்ட பல்லாயிரம் கோடி நிதி என்ன ஆனது என்ற கேள்வியை பொதுமக்கள் கேட்கத் தொடங்கி விட்டார்கள்.
அதிகாரிகள் கடுமையாக உழைத்தும், நிலைமையை முழுமையாகச் சீர்செய்ய முடியவில்லை என்றால், அடிப்படையிலேயே தவறு இருக்கிறது என்பதுதான் பொருள். சென்னை முழுவதும் பழுதான சாலைகளும், எங்கும் தேங்கி நிற்கும் மழைநீரும், இத்தனை ஆண்டு காலமாக, தமிழக ஆட்சியாளர்கள் செய்ததாக கூறிய மழை நீர் வடிகால் பணிகளைக் கேள்விக்குரியதாக்கி இருக்கின்றன. தமிழக அரசு பாடம் கற்க, இன்னும் எத்தனை மழைக் காலங்கள் வேண்டும்?" எனக் கேள்வி எழுப்பி இருந்தார்.












Click it and Unblock the Notifications