முதலமைச்சர் ஸ்டாலினை சீண்டிய 2 மாஜி மந்திரிகள்! பாய்ச்சலுக்கு தயாராகும் திமுக! இனி தான் டிவிஸ்ட்!
சென்னை: அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் தலையிடாமல் முதலமைச்சர் ஸ்டாலின் நாகரீகமான முறையில் நடந்து கொண்ட நிலையில், அவரை வம்புக்கு இழுக்கும் விதமாக 2 முன்னாள் அமைச்சர்கள் பேசியிருப்பது திமுகவினரை கொதித்தெழ வைத்துள்ளது.
அதிமுக பொதுக்குழுவுக்கு முதல்வர் தரப்பு நினைத்திருந்தால் பல்வேறு காரணங்களை அடுக்கி போலீஸ் பாதுகாப்பையே மறுத்திருக்க முடியும். ஆனால் அது போல் செய்யாமல் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொண்டார் முதல்வர் ஸ்டாலின்.
ஆனால் அவரையே உரசிப் பார்க்கும் வகையில் ''திமுக ஆட்சிக்கு சாவுமணி'', ''உதயநிதிக்கு பட்டாபிஷேகம் செய்யும் போது ஏற்படும் பிரச்சனைகளை பார்க்க காத்திருக்கிறோம்'' என்றெல்லாம் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பேசியிருப்பது தான் திமுகவின் கடும் கோபத்திற்கு காரணமாக கூறப்படுகிறது.

அதிமுக பொதுக்குழு
அதிமுகவை பொறுத்தவரை இப்போது குழம்பிய குட்டையாக காட்சியளிக்கிறது. ஒரு பக்கம் அதிமுக பொதுச்செயலாளர் நான் தான் என்றுக் கூறிக் கொண்டு வருகிறார் சசிகலா. அவரது லெட்டர் பேட்களிலும் இன்னும் அப்படித்தான் தனது பதவியை குறிப்பிட்டு வெளியிடுகிறார். இன்னொருபுறம் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் பதவியில் அமர காய் நகர்த்தி வருகிறார். இவர்கள் இருவருக்கு இடையே பொதுச்செயலாளர் பதவியே வேண்டாம் கூட்டுத்தலைமை தான் தொடர வேண்டும் என கூறி வருகிறார் ஓ.பன்னீசெல்வம்.

ஆயிரம் பிரச்சனை
இப்படி திரும்பிய பக்கமெல்லாம் அதிமுகவில் ஆயிரம் பிரச்சனைகள் உள்ளன. இதற்கு மத்தியில் அதிமுக பொதுக்குழு நேற்று முன் தினம் நடைபெற்றது. அந்தப் பொதுக்குழுவை எப்பாடுபட்டேனும் நிறுத்திவிட வேண்டும் என துடியாய் துடித்தார் ஓ.பன்னீர்செல்வம். இதற்காக அவர் அரசியல் லாபியையையும் கையில் எடுத்தார். ஆனால் முதலமைச்சர் ஸ்டாலினோ இன்னொரு கட்சியின் உட்கட்சி விவகாரத்தில் தலையிடுவது முறையாக இருக்காது எனக் கருதி அரசியல் நாகரீகத்தோடு அந்த விவகாரத்தை கையாண்டார்.

மாஜி அமைச்சர்கள்
அதிமுக பொதுக்குழுவுக்கு பாரபட்சமின்றி பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு அறிவுறுத்தினார். இப்படிப்பட்ட சூழலில், அதிமுக பொதுக்குழுவில் பொதுக்குழு கூட்டப்பட்டதற்கான காரணங்களை பற்றி பேசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ''திமுக ஆட்சிக்கு சாவுமணி அடிப்போம்'' என முதல்வர் ஸ்டாலினை சீண்டும் வகையில் பேசினார் முன்னாள் அமைச்சர் வேலுமணி. அதைத் தொடர்ந்து பேட்டியளித்த மற்றொரு முன்னாள் அமைச்சரான சி.வி.சண்முகம், ''ரொம்ப சந்தோஷப்படாதீங்க, உதயநிதிக்கு பட்டாபிஷேகம் நடக்கும் போது இருக்கு '' எனக் கூறியதுடன் முதலமைச்சரின் பேரனான இன்பநிதி வரைப் பேசி வம்புக்கு இழுத்திருக்கிறார்.

புது டிவிஸ்ட்
ஏற்கனவே மாஜி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது திமுகவினர் கடும் கோபத்தில் இருந்து வரும் நிலையில், அவரது பேச்சை சுட்டிக்காட்டி இனியும் இப்படியே பேசவிட்டால் அது சரியாக இருக்காது என்ற தங்கள் ஆதங்கத்தை மேலிடத்தில் கொட்டியுள்ளனர் முக்கியப் பிரமுகர்கள் பலர். இதனால் இனி வரும் நாட்களில் அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு பல டிவிஸ்ட்கள் காத்திருப்பதாக கண் சிமிட்டுகிறார்கள் உள் விவரம் அறிந்தவர்கள்.












Click it and Unblock the Notifications