Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உரிமைத்தொகை 1 கோடி பெண்களுக்கு கூட போய் சேரல.. பல குளறுபடிகள்.. அதிமுக மாஜி அமைச்சர் குற்றச்சாட்டு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் 1 கோடி குடும்பத் தலைவிகளுக்குக் கூட ரூபாய் 1000 பணம் கிடைக்கவில்லை. இந்த திட்டத்தில் பல குளறுபடிகள் நடந்திருக்கின்றன என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலமாக தமிழ்நாட்டில் உள்ள 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி துவக்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ரூ.1000 செலுத்தப்பட்டுள்ளது. எனினும், ஏராளமானோர், தகுதி நிபந்தனைகளை பூர்த்தி செய்தும் தங்களுக்கு உரிமைத்தொகை கிடைக்கவில்லை எனக் குற்றம்சாட்டி வருகின்றனர்.

ADMK former minister RB Udhayakumar says that not even 1 crore women get Rs 1000

பலர், தங்களுக்கு உரிமைத்தொகை விண்ணப்பம் தொடர்பாக எந்த குறுஞ்செய்தியும் வரவில்லை என்றும் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் ஏராளமான குளறுபடிகள் நடந்திருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். அரசு அறிவித்தபடி 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.1000 பணம் சென்று சேரவில்லை என அவர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக ஆர்பி உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் 2 கோடியே 20 லட்சம் மனுக்கள் விநியோகிக்கப்பட்டதாக செய்திகளில் சொல்லப்பட்டது. அதிலே பூர்த்தி செய்யப்பட்ட ஒரு கோடியே 60 லட்சம் மனுக்களில் ஏறத்தாழ 60 லட்சம் விண்ணப்பங்கள் அரசால் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. ஆக மொத்தம் ஒரு கோடியே 20 லட்சம் குடும்பங்களை இந்த அரசு இன்றைக்கு தகுதி இல்லை என்கிற காரணத்தினாலும், விண்ணப்பங்கள் முழுமையாக பூர்த்தி செய்து வரவில்லை என்கிற காரணத்தினாலும் தள்ளுபடி செய்து இருப்பதன் மூலம் இந்த குடும்பங்களுடைய வேதனையை இந்த அரசு சம்பாதித்திருக்கிறது.

மக்களை சமாதானப்படுத்துவதற்கு அரசு ஒரு கோடி குடும்பங்களுக்கு கொடுத்து இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதில் ஒரு கோடி பேருக்கு கொடுத்ததாகவும் தெரியவில்லை, அதிலே இன்னும் பல குளறுபடிகள் உள்ளது. முழுமையான புள்ளி விவரம் அரசிடமும் இல்லை, யாரிடமும் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. தகுதி உள்ள மனுக்கள் என்று அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதில் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு இன்னும் முழுமையாக 100 சதவீதம் கொடுக்கப்படவில்லை என்கிற உண்மை தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது 1 கோடியே 20 லட்சம் மனுக்கள் பூர்த்தி செய்யப்படாத அல்லது பூர்த்தி செய்யப்பட்டு தகுதி இல்லாத மனுக்களை எல்லாம் மேல்முறையீடு செய்யலாம் என்று இதை நியாயப்படுத்த மக்களுக்கு கொடுக்கப்படும் இன்னொரு வாய்ப்பு என்று சொல்லப்பட்டு மக்களை சமாதானம் செய்கிறார்கள். இது நடைமுறைக்கு சாத்தியப்படாத வகையிலே மக்களை ஏமாற்றுகிற ஒரு அறிவிப்பாகத்தான் இது பார்க்கப்பட்டு வருகிறது. வருமான உச்சவரம்பு, சொத்து உச்சவரம்பு, மின் பயனீட்டு அளவு உச்சவரம்பு இந்த உச்சவரம்பை நிர்ணயித்து முன்பாகவே ஒரு கோடி பேருக்கு வழங்கப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் அறிவிக்கிறார். இதில் முரண்பாடு உள்ளது.

ADMK former minister RB Udhayakumar says that not even 1 crore women get Rs 1000

பயனாளிகள் கண்டறியப்பட்டு அதற்கு பின்னர் தான் பயனாளிகள் எண்ணிக்கையை அறிவிக்க முடியும் இதுதான் அடிப்படை. ஆனால், முன்பே எப்படி ஒரு கோடி பயனாளிகள் என்று அறிவிக்க முடியும்? தற்போது அரசு விண்ணப்பிக்கலாம் என்று சொல்லி வருகிறது. பொதுவாக ஏற்கனவே நிர்ணயித்த வருமானம், சொத்து, மின் கட்டணம் இவைகளில் எதாவது விதியை தளர்த்தினால் அதிலே பயனாளிகளை உள்ளே கொண்டு வரலாம். ஏற்கனவே தகுதி இல்லை என்று அரசே தள்ளுபடி செய்துவிட்டு, தற்போது முழுக்க முழுக்க ஒரு மோசடியாக ஏமாற்று வேலையாக மக்களை அலைக்கழிக்கிறது அரசு.

அனைத்து மகளிருக்கும் உரிமைத்தொகை வழங்க வேண்டும் என்று அந்த மக்களுடைய தேவைகளை, கோரிக்கைகளை சட்டமன்றத்திலே தெளிவாக உறுதியாக ஆதாரபூர்வமாக எடப்பாடியார் எடுத்து வைத்ததை, நீங்கள் கேட்காத காரணத்தினால், இன்றைக்கு ஒரு கோடியே 20 லட்சம் குடும்பங்கள் மட்டுமல்ல, இந்த மகளிர் உரிமை தொகை திட்டத்தில் ஒரு கோடி என்று அறிவித்து அதில் பயனாளிகள் என்ணிக்கை பாதியைத் தாண்டவில்லை. எடப்பாடியார் வைத்த வேண்டுகோளின் படி அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகையை வழங்க இந்த அரசு முன்வருமா அல்லது பாழும் கிணற்றில் தள்ளிவிடுகிற ஒரு நடவடிக்கையாக இந்த அரசு நடவடிக்கை தொடருமா?" என ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+