அதுவா? இதுவா?? குழப்பத்தில் கோட்டைவிட்ட அதிமுக.. திமுகவுக்கு போனஸாக 2 எம்பிகள். சூப்பர் டிவிஸ்ட்
சென்னை: தமிழ்நாட்டில் காலியாக உள்ள இரண்டு ராஜ்ய சபா எம்பி பதவிகளுக்குத் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதிமுகவின் சொதப்பலான நடவடிக்கை காரணமாகவே இந்த இரண்டு இடங்களும் இப்போது திமுகவின் வசம் வருகிறது.
தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு மொத்தம் 18 உறுப்பினர்கள் உள்ளனர். மக்களவை தேர்தலைப் போல மாநிலங்களை உறுப்பினர்களைப் பொதுமக்கள் நேரடியாகத் தேர்ந்தெடுப்பதில்லை. மாறாக மாநிலச் சட்டசபை மூலமே மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
2 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாநிலங்களவையில் 3இல் பங்கு தேர்தல் நடைபெறும் என்பதால் மாநிலங்களவையில் கட்சியை வலுவாக வைத்திருப்பது அனைத்து கட்சிகளுக்குமே சவாலான ஒன்றாகவே இருக்கும்.

மாநிலங்களவை எம்பிகள்
தமிழ்நாட்டில் இருந்து தற்போது 16 எம்பிகள் மாநிலங்களவையில் உள்ளன. திமுகவுக்கு அதிகபட்சமாக எட்டு உறுப்பினர்களானர். இது போக திமுக கூட்டணிக் கட்சியான மதிமுக தலைவர் வைகோ ராஜ்ய சபா எம்பியாக உள்ளார். திமுகவிற்கு அடுத்து அதிமுகவிற்கு ஐந்து உறுப்பினர்கள் உள்ளனர். அதேபோல அதிமுக கூட்டணிக் கட்சிகளான பாமக (அன்புமணி ராமதாஸ்), மூப்பனார் காங்கிரஸ் (ஜிகே வாசன்) ஆகிய கட்சிகளுக்கு ஒரு உறுப்பினர் உள்ளனர்.

தனித்தனியாகத் தேர்தல்
தமிழ்நாட்டில் மொத்தம் 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி காலியாக இருந்தது. இந்த 3 எம்பி பதவிகளுக்கும் தனித்தனியாகத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று திமுக சார்பில் அக்கட்சியின் நாடாளுமன்ற தலைவர் டி ஆர் பாலு தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தார். ஏனென்றால் சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வென்றிருந்தது. அதேநேரம் அதிமுக கூட்டணி 75 இடங்களில் வென்றிருந்தது. ஒரே நேரத்தில் காலியாக உள்ள மூன்று இடங்களுக்கும் தேர்தல் நடத்தப்பட்டால் ஒரு இடம் அதிமுகவுக்குச் செல்லும் வாய்ப்பு இருந்ததாலேயே 3 உறுப்பினர் பதவிகளுக்கும் தனித்தனியாகத் தேர்தலை நடத்த வேண்டும் என திமுக வலியுறுத்தியது.

எம் எம் அப்துல்லா
கடந்த மார்ச் மாதம் தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலுக்கு முன்னர், ராஜ்ய சபா உறுப்பினர் முகமது ஜான் உயிரிழந்தார். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு தான் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். முகமது ஜானின் பதவிக்காலம் 2015 வரை இருந்தது. அவரது இடத்தை நிரப்புவது குறித்துத் தேர்தல் ஆணையம் கடந்த கடந்த சில வாரங்களுக்கு முன் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதில் திமுக சார்பில் எம் எம் அப்துல்லா போட்டியிட்டு, மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலமே ராஜ்யசபாவில் திமுகவின் எம்பிக்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது.

சட்டசபைத் தேர்தல்
இந்நிலையில், தமிழ்நாட்டில் காலியாக இருக்கும் 2 ராஜ்ய சபா எம்பி பதவிகளுக்குத் தேர்தல் குறித்து இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த இரண்டு இடங்கள் எப்படி காலியானது என்பது சுவாரசியமானது. சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதா பணியில் புது முகங்களுக்கு வாய்ப்பளிக்காமல், இந்த முறை மக்களால் அறிந்த முகங்களுக்கும், கட்சியில் முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்களுக்குமே அதிமுகவில் வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது. அந்த பட்டியில் கே.பி. முனுசாமி மற்றும் வைத்தியலிங்கம் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றிருந்தது அப்போது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது.

சட்டசபையில் போட்டியிட்ட எம்பிக்கள்
ஏனென்றால், 2016 சட்டசபைத் தேர்தலில் அப்போது வீட்டுவசதித் துறை அமைச்சராக இருந்த வைத்தியலிங்கம் ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட்டார். இதில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுகவின் ராமச்சந்திரன் 3645 வாக்குகள் வித்தியாசத்தில் வைத்தியலிங்கத்தைத் தோற்கடித்து, அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தார். அதன் பின்னர் அவர் 2017இல் ராஜ்ய சபா உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேபோல 2016இல் பொன்னாகரம் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி திமுகவின் இன்ப சேகரனிடம் தோல்வியடைந்தார். இதையடுத்து அவர் 2020இல் மாநிலங்களவைக்குத் தேர்வானர். பதவிக்காலம் முடியப் பல ஆண்டுகள் இருந்த போதிலும், இருவரும் சட்டசபைத் தேர்தலில் களமிறக்கப்பட்டனர்.

ராஜினாமா
சட்டசபை தேர்தலில் வேப்பனஹல்லி தொகுதியில் கே.பி.முனுசாமியும், தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட்ட வைத்தியலிங்கமும் வெற்றி பெற்றனர். இதையடுத்து இருவருமே தங்கள் எம்பி பதவிகளைக் கடந்த மே மாதம் ராஜினாமா செய்தனர். இதையடுத்து இரண்டு இடங்களுக்கு இப்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது இத்தேர்தலில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய செப். 22 ஆம் தேதி கடைசி நாளாகும். அதைத் தொடர்ந்து தேவைப்பட்டால் அக்டோபர் 4 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக
திமுகவுக்கு போதியளவில் எம்எல்ஏக்கள் இருப்பதால் இரண்டு ராஜ்ய சபா உறுப்பினர்கள் பதவியும் திமுக வசமே செல்லும். இதன் மூலம் மாநிலங்களவையில் திமுகவின் பலம் 10ஆக உயரும். இதில் ஒரு இடம், முகமது ஜான் உயிரிழந்ததைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தேர்தல், அதிட்டம் காரணமாக இந்த இடம் திமுக பக்கம் வந்ததது. ஆனால் மற்ற இரண்டு இடங்களும் முழுக்க முழுக்க அதிமுகவின் தவறான முடிவின் காரணமாகவே திமுகவுக்குக் கிடைத்துள்ளது. அங்கு வேறு தலைவர்களைப் போட்டியிட வைத்திருக்கலாம்.

போனஸ்
மாநிலங்களவையில் இருந்து கொண்டே வைத்தியலிங்கம் மற்றும் கே பி முனுசாமி சட்டசபையில் போட்டியிட்டதால் அதிமுக தேவையில்லாமல் இரண்டு உறுப்பினர்களை இழந்துள்ளது. அடுத்தாண்டு மேலும் 5 உறுப்பினர் (அதிமுக 3 எம்பிகள், திமுக 2 எம்பிகள்) பதவிக்காலம் முடிகிறது. எனவே அப்போது நடத்தப்படும் தேர்தலிலும் திமுக கூடுதல் இடங்களை வெல்ல வாய்ப்புகள் அதிகம். அதிமுகவின் குழப்பத்தாலும் தவறான முடிவாலும் திமுகவுக்கு மொத்தம் 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி போனஸாகவே கிடைத்துள்ளது.












Click it and Unblock the Notifications