எனக்கு நீதி இல்லையா! நாங்கள் மனிதர் இல்லையா? ராஜீவ் குண்டுவெடிப்பில் காயமடைந்த பெண் அதிகாரி ஆவேசம்.!
சென்னை : ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், குண்டுவெடிப்பு தாக்குதலில் காயமடைந்த பெண் அதிகாரி ஒருவர் தங்களுக்கு நீதி கிடைக்காதா? நாங்கல் எல்லாம் தமிழர்கள் கிடையாத என ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991ஆம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு தேர்தல் பிரசாரம் செய்ய வந்தபோது ஸ்ரீபெரும்புதூரில் தற்கொலை படை மனித வெடிகுண்டால் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார்.
இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய வழக்கில் பிரதமர் ராஜீவ்காந்தி மட்டுமல்லாது, லதா கண்ணன், கோகிலா, சல்வார் கமீஸ் அணிந்திருந்த பெண், ராஜீவ் காந்தியின் பாதுகாப்பு அதிகாரி, மாவட்ட காவல்துறை அதிகாரி முகமது இக்பால் உள்ளிட்ட 9 காவலர்கள் உயிரிழந்தனர்.
மகிழ்ச்சி! பேரறிவாளன் வேலூர் சிறையில் இருந்தது என்னால்தான் வெளியே தெரியும்! நாம்தமிழர் சீமான் தடாலடி
ராஜீவ் காந்தி படுகொலை
மேலும் 45க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உலகையே உலுக்கிய இந்த படுகொலைக்கு காரணம் விடுதலைப் புலிகள் என கூறப்பட்ட நிலையில், அதனை அந்த அமைப்பு செய்யவில்லை என பிரபாகரனின் நம்பிக்கைக்குரிய தளபதிகளில் ஒருவரான ஆண்டன் பாலசிங்கம் அப்போதே கூறினார். இந்நிலையில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் முருகன், நளினி, பேரறிவாளன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் போன்றோர் கடந்த 30 வருடங்களாக சிறையில் இருக்கின்றனர். இந்நிலையில் பேரறிவாளனுக்கு தமிழக அரசு சார்பில் பரோல் வழங்கப்பட்டு, உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
கடும் விமர்சனம்
இதற்கிடையே புதன்கிழமை பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் விடுதலை அளித்த நிலையில், பேரறிவாளன் அவரது தாயார் அற்புதம் அம்மாள் உள்ளிட்டோர் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பேரறிவாளனின் விடுதலையை ஒட்டி பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகள் இதனை வரவேற்று நிலையில் காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் விடுதலையை எதிர்த்து நாளை போராட்டம் நடத்தப்போவதாக காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
பெண் அதிகாரி ஆவேசம்
இந்நிலையில் குண்டுவெடிப்பு தாக்குதலில் காயமடைந்த பெண் அதிகாரி ஒருவர் தங்களுக்கு நீதி கிடைக்காதா என ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். அனுஷ்யா ஏர்னஸ்ட் என்கிற ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ராஜீவ் காந்தியை 1991ல் வெடிகுண்டு மூலம் கொன்ற போது பாதுகாப்புப் பணியில் இருந்தவர். அப்போது, காயங்களுடன் உயிர் தப்பிய அவர், அந்த வழக்கின் குற்றவாளிகளை விடுதலை செய்ய எதிர்ப்பு தெரிவித்தார். இன்றும் அவரது முகத்தில் குண்டு வெடிப்பின் போது ஏற்பட்ட காயங்கள் உள்ளன. இது குறித்து ஏற்கனவே ஒரு தொலைக்காட்சியிடம் பேசிய அவர், முன்னாள் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட போது என் இரண்டு விரல்களை அந்த குண்டு வெடிப்பு சம்பவத்தால் இழந்தேன். இன்னும் என் உடலில் பல இடங்களில் காயம் இருக்கிறது.
காயங்களால் வேதனை
இந்த வழக்கின் குற்றவாளிகள் சிறையில் சந்தோஷமாக இருக்கும் போது, நான் இங்கு தினம் தினம் வேதனையால் துடித்துக் கொண்டிருக்கிறேன். பல குடும்பங்கள், அவர்களுக்கு நெருக்கமானவர்களை அந்த கோர சம்பவத்தால் இழந்தன. பலரது வாழ்க்கை சீரழிந்தது. எங்கள் வலியையும் வேதனையையும் யாரும் மதிப்பதில்லை. இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட எல்லோரும் பயங்கரவாதிகள். அவர்கள் நம் பிரதமரைக் கொன்றவர்கள். அவர்களை விடுதலை செய்வது மிகவும் ஆபத்தானது" என்று கூறியிருந்தார்.
|
நீதி கிடைக்காதா?
சம்பவம் நடந்த போது சார்பு ஆய்வாளராக இருந்த அவர், பின்னர் ஏடிஎஸ்பியாக பதவி உயர்வு பெற்று பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டது குறித்து பேசியுள்ள அனுசுயா, " ராஜீவ் காந்தி படுகொலையின் போது பாதிக்கப்பட்டவர்கள் நாங்கள்தான் எங்களுக்கு நீதி வழங்க எந்த சட்டமும் கிடையாது நீதிமன்றமும் கிடையாது சட்டமன்றம் கிடையாது முதல்வர் கிடையாது பிரதமர் கிடையாது. குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட நாங்களெல்லாம் வெளிநாட்டவர்களா?
நாங்கள் வெளிநாட்டவர்களா?
கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தமிழர்கள் என்றால் கொலை சம்பவத்தில் உயிரிழந்தவர்களும், காயமடைந்தவர்களும் வெளிநாட்டவர்களா, அல்லது வேறு மாநிலத்தை சேர்ந்தவர்களா எங்களுக்கெல்லாம் சட்டம் இல்லையா.? இந்திய தண்டனைச் சட்டத்தில் எங்களுக்கு எந்த சலுகையும் கிடையாதா? நீதி கிடையாதா? யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் கொல்லலாம் அவர்கள் தமிழர்கள் என்றால் சிலர் போராடுவார்கள் அவர்களுக்கு விடுதலை கொடுப்பார்கள் காரணம் அவர்கள் தமிழர்கள் என்றால் நாங்கள் யார்? " என ஆவேசமாக பேசினார். அவரது இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.