நிக்கட்டுமா, போகட்டுமா... தவிக்கும் பாமக.. தைரியமூட்டும் பாஜக.. இழுக்கத் துடிக்கும் திமுக
Recommended Video
சென்னை :எந்த அணியில் சேருவது என்பதை பாமக இன்னும் முடிவு செய்யவில்லை. திமுகவுடனும் பேசி வரும் அக்கட்சியை தக்க வைக்க பாஜக கடுமையாக முயல்கிறது. மறுபக்கம் அன்புமணியும், சபரீசனும் சந்தித்து ரகசியமாக பேசியுள்ளனராம்.
திராவிட கட்சிகளோடு இனிமேல் கூட்டணியே கிடையாது என்ற ராமதாஸ் இப்போது திமுக அல்லது அதிமுகவுடன் கூட்டணி வைத்தே தீருவது என்று ஒற்றைக்காலில் நிற்கிறாராம். ஆனால் இன்னமும் எந்த அணியில் இருப்பது என்ற முடிவுக்கு வராமல் இருக்கிறது பாமக தரப்பு. இரண்டு தரப்பிலும் கடுமையாக பேரம் பேசிக்கொண்டிருக்கிறது அந்தக் கட்சி.
இந்த நிலையில் பாமகவின் இந்த நிலைப்பாடு கட்சிக்குள்ளேயே தொண்டர்களிடம் கூட குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.. எந்த அணியில் சேரப்போகிறோம் என்பது கூட தெரியாமல் அவர்களும் குழம்பிப் போயுள்ளனர். தொண்டர்களிடம் தான் குழப்பம் என்றால் வீட்டுக்குள்ளும் குழப்பம் அதிகரித்து வருகிறதாம். அப்பா அதிமுக பக்கம் போலாம் என்றால் மகன் திமுக பக்கம் போலாம் என்கிறாராம்.
அன்புமணியை பிடிக்க முயன்ற கோயல்
இப்படிப் இருக்கையில் கடந்த இரு நாட்களுக்கு முன்னதாக அதிமுகவுடன் கூட்டணி பேசுவதற்காக மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் பியுஸ் கோயல் சென்னைக்கு வந்து சென்றார். அதற்கு முன்னதாக எப்படியும் அன்புமணியிடம் பேசிவிட வேண்டும் என்று பியுஸ் கோயல் முயற்சித்ததாக கூறப்படுகிறது ஆனால் தொலைபேசியில் அவரை பிடிக்க முடியவில்லை என்று கூறப்பட்டது.
தீவிர முயற்சியில் திமுக
திமுக தரப்பிலும் துரைமுருகன், எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் போன்றோர் பாமகவை எப்படியும் திமுகவில் கொண்டு வந்துவிட வேண்டும் என்பதில் அதி தீவிரமாக உள்ளனராம். ஏனெனில் வடமாவட்டங்களில் பாமக வலுவாக உள்ளதால் அவர்கள் அதிமுகவுடன் இணையும் பட்சத்தில் அது அதிமுகவுக்கு சில சீட்டுகளை பெற்றுத் தரும் வாய்ப்பாக அமைந்து விடும் என்று அவர்கள் கருதுகின்றனர்.
அன்புமணி சபரீசன் சந்திப்பு
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஸ்டாலினின் மகன் சபரீசன் தான் வழக்கமாக தனது நண்பர்களை சந்திக்கும் ஹோட்டலில் இருந்தபோது அன்புமணி அங்கு சென்றுள்ளார். நள்ளிரவில் நடந்த இந்த சந்திப்பில் இருதரப்பிலும் உள்ள சிக்கல்கள் குறித்து பேசப்பட்டுள்ளது. அப்போது இருதரப்பிலும் கூட்டணி குறித்து பேசியபோது தீர்வுக்கு வராத சில விசயங்களை அன்புமணி குறிப்பிட்டாராம் அப்போது சபரீசன் தரப்பில் சில வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டதாகவும் தெரிகிறது.
போகாதீங்க
இதை ஐ.பி மூலம் மோப்பம் பிடித்த பாஜக அன்புமணிக்கு நெருக்கமான வட்டாரத்தை தொடர்பு கொண்டுள்ளது. திமுக பக்கம் சென்றால் அவர்களுக்கு என்ன இழப்பு ஏற்படும் என்பதையும் மீண்டும் பாஜக வருவதற்கான சாத்தியக் கூறுகளையும் விளக்கி அவசரப்பட வேண்டாம் என்று அட்வைஸ் செய்துள்ளனர். அதோடு தொகுதி பங்கீடு மட்டுமல்லாமல் அதையும் தாண்டி சில விசயங்களை அதிமுக மூலமாகவே செய்து தர முடியும் என்று பாஜக தரப்பில் கூறியுள்ளனராம். இதனால் பெரியண்ணனின் சொல்லை தட்ட முடியாமலும் முடிவும் எடுக்க முடியாமலும் காத்திருக்கிறதாம் பாமக.