நாளைக்கு வேண்டாம்.. நீதிபதியிடம் என்.ஆர்.இளங்கோ விடுத்த முக்கிய கோரிக்கை.. விசாரணை தள்ளிப்போனது ஏன்?
சென்னை: இன்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, அமலாக்கத்துறை சார்பாக வாதங்களை நிறைவு செய்த நிலையில், செந்தில் பாலாஜி மனைவி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஒரு முக்கியமான கோரிக்கையை நீதிபதியிடம் வைத்தார்.
சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார். செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் அவரது மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் விசாரித்தனர்.

3வது நீதிபதி விசாரணை: இந்த வழக்கில் ஐகோர்ட்டின் 2 நீதிபதிகளும் ஒருவருக்கொருவர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். நீதிபதி நிஷாபானு, செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதும், நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டதும் சட்டவிரோதம், அவர் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என தீர்ப்பளித்தார். நீதிபதி பரத சக்கரவர்த்தி தனது தீர்ப்பில், செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கைது செய்ததில் எந்த சட்டவிரோதமும் இல்லை எனக் கூறி ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.
இதையடுத்து இந்த வழக்கு 3வது நீதிபதி சி.வி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. செந்தில் பாலாஜி மனைவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, வழக்கு விசாரணையை ஜூலை 11ஆம் தேதிக்கு தள்ளி வைக்கவேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் தங்கள் சார்பாக ஆஜராகி வாதம் செய்வதற்காக வழக்கை செவ்வாய்க்கிழமைக்கு தள்ளி வைக்கக் கோரினார் என்.ஆர்.இளங்கோ.
அதன்படி, ஜூலை 11ஆம் தேதிக்கு வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்ட நிலையில், நேற்று காணொளிக் காட்சி வாயிலாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி, செந்தில் பாலாஜி தரப்பு சார்பாக வாதங்களை எடுத்து வைத்தார். இதையடுத்து இன்று, அமலாக்கத்துறை சார்பாக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதங்களை முன்வைத்தார்.
என்.ஆர்.இளங்கோ வைத்த கோரிக்கை: அமலாக்கத்துறை தரப்பில் துஷார் மேத்தா வாதங்களை நிறைவு செய்த நிலையில், செந்தில் பாலாஜி மனைவி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ நீதிபதியிடம் ஒரு கோரிக்கையை வைத்தார். மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் மருத்துவ சிகிச்சை பெற இருப்பதால் நாளை ஆஜராக முடியாது என்றும், பதில் வாதங்களை எடுத்து வைக்க வழக்கு விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு தள்ளி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதையடுத்து நீதிபதி சிவி கார்த்திகேயன் வழக்கு விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு (ஜூலை 14) தள்ளி வைத்தார்.
கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், செந்தில் பாலாஜி காவலில் வைக்கப்பட்ட முதல் உத்தரவுக்கு எதிராக முறையீடு செய்யப்படவில்லை என்பதை முன்வைத்தார். அதற்கு என்.ஆர்.இளங்கோ, செந்தில் பாலாஜிக்கு ஜூன் 18 ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டது. ஆனால் அமலாக்கத்துறையுடன் ஒத்துழைப்பதற்காக ஒத்திவைக்குமாறு கோரப்பட்டது எனத் தெரிவித்தார்.
அதற்கு துஷார் மேத்தா, இந்த விவரம் எங்கும் சொல்லப்படவில்லை என்றார். அதற்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன், நாம் இங்கு வந்திருப்பது பிரச்சனைகளைக் கண்டறிய அல்ல, தீர்வுகளைக் காணத்தான் எனத் தெரிவித்தார். தொடர்ந்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், செந்தில் பாலாஜிக்கு ஜூலை 26 வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து உத்தரவிட்டதையும், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் நீதிபதியிடம் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications