போற போக்கை பார்த்தா அதிமுக, பாமக, தேமுதிக, அத்தனையும் சேர்ந்த கலவையாக பாஜக விஸ்வரூபமெடுக்குமோ?
சென்னை: சட்டசபை தேர்தல் நாளை நடைபெறும் நிலையில் தமிழகத்தில் தேர்தலுக்கு பிந்தைய நிலவரம் என்னவாக இருக்கும் என்பது பெரும் எதிர்பார்ப்புக்குரியதாக இருக்கிறது.
பொதுவாக மாநிலங்களில் ஒரு கட்சியுடன் கூட்டணி அமைப்பதும் அந்த கட்சியையே அப்படியே கபளீகரம் செய்து காலி செய்வதும்தான் பாஜக போக்கு. பீகார் சட்டசபை தேர்தலில் ஜேடியூவுக்கு இணையான இடங்களில் போட்டியிட்டது பாஜக.
ஆனால் ஜேடியூ தம்மைவிட அதிக இடங்களில் வென்றுவிடக் கூடாது என்பதற்காகவே கூட்டணி கட்சியான ஜேடியூவையே பதம் பார்க்க லோக் ஜனசக்தியை களமிறக்கியது. பாஜக திட்டமிட்டபடியே ஜேடியூவுக்கு குறைவான இடங்கள்தான் கிடைத்தன. இப்போது பாஜக தயவில் ஜேடியூ ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.

ஜேடியூவை சாய்த்த பாஜக
அதேநேரத்தில் ஜேடியூ நம்முடைய கூட்டணி கட்சிதானே என்று பரிதாபம் எல்லாம் பார்க்கவில்லை அருணாசலப் பிரதேசத்தில்.. அதுவும் பீகாரில் கூட்டணி ஆட்சி நடத்துகிறோமே என்கிற தயக்கம் எதுவும் பாஜகவுக்கு இல்லை.. அருணாச்சல பிரதேசத்தில் ஜேடியூவின் 7 எம்.எல்.ஏக்களில் 6 பேரை வளைத்துப் போட்டுக் கொண்டு எதிர்க்கட்சியாகவே உருமாற்றிக் கொண்டது பாஜக.

தமிழக பாஜக நிலவரம்
இவை எல்லாம் மிக மிக அண்மைய வரலாறுகள். இந்த பார்முலாவை அப்படியே தமிழகத்தில் பாஜக கடைபிடிக்காது என்பதற்கு எந்த ஒரு உத்தரவாதமும் யாரும் தந்துவிட முடியாது. அதிமுக கூட்டணிக்கும் 50 முதல் 60 இடங்கள் கிடைக்கும் என்கின்றன கருத்து கணிப்புகள். அதிமுகவுக்கு அதிக இடங்களும் பாஜக போட்டியிட்ட 20 தொகுதிகளிலும் எதிலும் வெல்லாது என்கிற நிலைமையும் இருப்பதாக கருத்து கணிப்புகள் சொல்கின்றன.

பாஜகவின் வாய்ப்புகள்
ஆனால் களநிலவரத் தகவல்களோ வேறு மாதிரியே இருக்கின்றன. பாஜக போட்டியிடும் தொகுதிகளில் அதிமுக என்கிற கட்சியை சேர்ந்தவர்கள் சொந்த கட்சியின் அடையாளத்தை தூர எறிந்துவிட்டு காவி ஜோதிக்குள் கலந்துவிட்டனர். இதற்கு காரணம் பாஜகவின் சித்தாந்தம் மீதான ஈர்ப்பு அல்ல.. பாஜக அள்ளி வீசியிருக்கும் பணம்தான் அத்தனையையும் செய்ய வைத்திருக்கிறது. இதனால் பாஜகவுக்கான சில தொகுதிகளின் வெற்றி வாய்ப்புகளை அப்படி எல்லாம் புறந்தள்ள முடியாது.

தென் தமிழகத்தில் அதிமுக நிலைமை
அதேபோல் அதிமுக கவுரவமான தொகுதிகளைப் பெறும் என்பதிலும் இருவேறு கருத்துகள் இருக்கின்றன. குறிப்பாக தென்மாவட்டங்களில் அதிமுகவுக்கு எத்தனை இடங்கள் கிடைக்கப் போகிறது என்பது யூகிக்க முடியாது என்றாக உள்ளது. வன்னிய உள்ஒதுக்கீடு விவகாரம் என்பது தென்மாவட்ட அதிமுகவை ரொம்பவே பதம் பார்த்துவிட்டது. அதனால் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் தென்மாவட்ட அதிமுக தலைவர்கள் என்ன செய்வார்களோ? என்கிற கேள்வி எழாமல் இல்லை.

தென்மாவட்ட அதிமுக
மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சி தொடரத்தான் போகிறது.. தமிழகத்திலும் பாஜகவின் கட்சிகளை கபளீகரம் செய்யப் போகும் வேட்டை தொடரவே செய்யும். அனேகமாக சட்டசபை தேர்தலில் தோல்வியை சந்தித்தால் தென்மாவட்ட அதிமுகவினர், அதிமுகவை கை கழுவிவிட்டு முதல் போனியாக பாஜகவில் ஐக்கியமாகும் போக்கை தொடங்க அதிக சாத்தியங்கள் இருக்கின்றன.

பரிதாப தேமுதிக
அனேகமாக இந்த தேர்தலுடன் தேமுதிகவின் எதிர்காலம் முடிவுக்கு வந்துவிடும் என்றே தெரிகிறது. ஆகையால் 2-வது போனியாக தேமுதிக போதுமடா சாமி.. ஏதோ ஒரு கட்சியில் இருந்துவிட்டு போகிறோம் என நினைக்கும் எஞ்சிய கொஞ்ச நஞ்ச நிர்வாகிகளும் பாஜகவை நோக்கி பயணிப்பது தவிர்க்க முடியாததாகலாம்.

பாமகவுக்கும் குறி
அதிமுகவில் கொஞ்சம், தேமுதிகவில் கொஞ்சம் என்று விழுங்கிவிட்ட பின்னர் இன்னொரு கூட்டணி கட்சியான பாமகவை மட்டும் பாஜக விட்டு வைக்குமா என்பது சந்தேகம். அதுவும் பாமக இளைஞரணித் தலைவரான அன்புமணி ராமதாஸ் மீதான மருத்துவ கல்லூரி அனுமதி ஊழல் ஒன்றே போதும்.. பாமகவையும் ஆக்டோபஸ் போல விழுங்கி ஏப்பம் விட பாஜகவுக்கு வேறு ஆயுதமே தேவை. இப்போதைக்கு சின்னஞ்சிறிய கட்சியாக 20 தொகுதிகளுக்கே கெஞ்சுகிற ஒரு கட்சியாக பாஜக இருக்கலாம். தமிழக சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் கட்சிகளைவிட்டு தப்பி ஓடியவர்கள் அத்தனை பேருக்கும் அடைக்கலம் கொடுத்து; வசமாக சிக்கிய கட்சிகளை வளைத்துப் போட்டு பாஜக ஒரு புதிய விஸ்வரூபம் எடுத்து நிற்கலாம்.. தேர்தலில் ஒன்றிரண்டு இடங்களில் வென்றாலும் கூட!












Click it and Unblock the Notifications