பீகார் தேர்தல் முடிவுகள் எதிரொலி... இன்னும் சீட்டை குறைச்சுடுமோ திமுக? பீதியில் காங்கிரஸ்
சென்னை: பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் அடுத்த ஆண்டு நடைபெறும் தமிழக சட்டசபை தேர்தலுக்கான கூட்டணியிலும் எதிரொலிக்கும் நிலை இருக்கிறது. பீகார் தேர்தல் முடிவுகளை வைத்து காங்கிரஸூக்கு மிக சொற்பமான தொகுதிகளை திமுக ஒதுக்கினாலும் ஆச்சரியப்பட எதுவும் இல்லை என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ்- இடதுசாரிகள்-விசிக உள்ளன.
கிட்டத்தட்ட பீகாரில் ஆர்ஜேடி-காங்கிரஸ்-இடதுசாரிகள் போன்ற கூட்டணிதான் தமிழகத்திலும் உள்ளது. தற்போது பீகார் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி எதிர்பார்த்த இடங்களைப் பெற முடியவில்லை.
20 இடம்தான்
எப்படியும் 50 இடங்களில் வெல்வோம் என மார்தட்டிய காங்கிரஸ் கட்சியால் 20 இடங்களைக் கூட தாண்ட முடியவில்லை. இதனால் காங்கிரஸ் கட்சியை கழற்றிவிட்டு தனியே ஆர்ஜேடி நின்றிருந்தால் கூட இன்னமும் கூடுதல் இடங்களை அந்த கட்சி பெற்றிருக்கும் என்கிற கருத்து முன்வைக்கப்படுகிறது.
இடதுசாரிகள் அமோகம்
இத்தனைக்கும் ஆர்ஜேடி கூட்டணியில் 19 இடங்களில் போட்டியிட்ட சிபிஎம்எல் கட்சியானது 13 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியால் ஒட்டுமொத்த கூட்டணிக்கே பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் எதிரொலிக்கும்?
பீகார் தேர்தல் முடிவுகளானது தமிழகத்திலும் அனேகமாக எதிரொலிக்கவே வாய்ப்புகள் உள்ளன. தமிழகத்தில் திமுக கூட்டணியில் அதிகமான இடங்களை காங்கிரஸ் பெற்று அந்த இடங்களில் பெரும்பாலானவற்றில் தோல்வியைத் தழுவுவது அந்த கட்சியின் வாடிக்கை. இதனால் திமுகவின் ஆட்சி கனவு தகர்ந்து கொண்டே இருக்கிறது.
காங். இடங்கள் குறையும்?
அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலிலும் திமுக கூட்டணியில் கணிசமான இடங்களை காங்கிரஸ் எதிர்பார்க்கிறது. ஆனால் நிச்சயம் கடந்த காலங்களைப் போல திமுக ஒதுக்காது என கூறப்பட்டது. இப்போது பீகார் நிலவரத்தை முன்வைத்து திமுக கொடுக்கலாம் என நினைத்த 15 முதல் 20 சீட்டுகளுக்கும் பங்கம் வந்துவிடுமோ என்கிற பீதி காங்கிரஸுக்கு ஏற்பட்டிருக்கிறது.