திமுகவுடன் இணக்கமாக போங்க.. அதிக சீட் கேட்டு மோத வேண்டாம்.. உத்தரவிட்ட ராகுல்? அதிர்ச்சியில் விஜய்?
சென்னை: பீகார் தேர்தல் முடிவுகள், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி அணுகுமுறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. தமிழ்நாட்டில் திமுகவிடம் அதிக இடங்களை கேட்க வேண்டாம், திமுகவிடம் அனுசரித்து செல்லலாம் என்ற நிலைப்பாட்டை எடுக்க காங்கிரஸ் டெல்லி மேலிடம் முடிவு செய்துள்ளதாம்.
பீகார் தேர்தல் முடிவுகள் காங்கிரசுக்கு மிகப்பெரிய சவுக்கடியாக உருவெடுத்து உள்ளது. 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, காங்கிரஸ் கட்சி, அதன் கூட்டணிக் கட்சியான திமுகவிடம் அதிக இடங்களைப் பெற முயற்சிப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் பீகார் தேர்தல் முடிவுகள் அந்த கட்சிக்கு எதிரியாக சென்றது.
பீகார் தேர்தல் - காங்கிரஸ் மோசம்
பீகார் தேர்தலில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி (NDA) பெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது. பீகாரில் பாஜக - ஜேடியூ கூட்டணி 202 இடங்களில் வெற்றியை பெற்று உள்ளது. பாஜக 89 இடங்களிலும் , ஜேடியு 85 இடங்களிலும் வென்றுள்ளது.

பீகாரில் காங்கிரஸ் கட்சி மிக மோசமான தோல்வியை பதிவு செய்துள்ளது. அங்கு 61 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், வெறும் 6 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கூட்டணி கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் 25 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த கூட்டணி 35 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது.
காங்கிரஸின் இந்த பலவீனமான செயல்பாடு அதன் கூட்டணிக் கட்சியான ஆர்ஜேடியின் வெற்றி வாய்ப்புகளையும் பாதித்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். காங்கிரஸின் குறைந்த வெற்றி விகிதம் கூட்டணியின் ஒட்டுமொத்த செயல்பாட்டைக் குறைத்துவிட்டதாக ஆர்ஜேடி தலைவர்கள் பலர் கருதுகின்றனர். இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு இது எதிராக மாறலாம். காங்கிரஸின் 50க்கும் மேற்பட்ட தொகுதிகள் கோரிக்கையைத் தமிழ்நாடு திமுக தலைமை ஏற்க மறுக்கலாம்.
காங்கிரஸ் திமுக கூட்டணி
இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழ்நாட்டில் திமுகவிடம் அதிக இடங்களை கேட்க வேண்டாம், திமுகவிடம் அனுசரித்து செல்லலாம் என்ற நிலைப்பாட்டை எடுக்க காங்கிரஸ் டெல்லி மேலிடம் முடிவு செய்துள்ளதாம்.
மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர், மாநிலப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரிடம், திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை கவனமாக நடத்த அறிவுறுத்தியுள்ளனர். மாநிலத்தில் காங்கிரஸ் தனது செல்வாக்கு, அமைப்பு பலம் மற்றும் தேர்தல் முக்கியத்துவத்தைப் பாதுகாக்க திமுகவுடனான நிலையான உறவு அவசியம் என தலைமை கருதுகிறது.
இது தொடர்பாக டெல்லியில் இருந்து வந்த செய்தி தெளிவாக உள்ளது என்கிறார்கள் கதர் சட்டையினர். தேசிய, மாநில அரசியல் சூழ்நிலைகள் வேகமாக மாறும் நிலையில், கூட்டணியில் பிளவைத் தவிர்க்க காங்கிரஸ் விரும்புகிறது. பீகார் தேர்தல் முடிவுகள், கூட்டணிகள் மற்றும் ஒருங்கிணைப்பின் பங்கை நிரூபித்தன. மோதலை விட ஒத்துழைப்பே பலன் தரும் என்ற டெல்லி காங்கிரஸ் தலைமை நம்புகிறது . இதனால் திமுக உடன் இணக்கமாக செல்லுங்கள் என்று டெல்லி உத்தரவிட்டு உள்ளதாம்.
திமுக உடன் இணக்கம்
காங்கிரஸ் கட்சி 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அடுத்த கட்டப் பணிகளைத் தொடங்கியுள்ளது. திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த ஒரு ஐவர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு டிசம்பர் 3 அன்று சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் மு.க. ஸ்டாலினைச் சந்திக்கும். இதில் ஏஐசிசி பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், மூத்த தலைவர்கள் சூரஜ் ஹெக்டே, நிவேதித் ஆல்வா, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே. செல்வப்பெருந்தகை, சட்டமன்றக் கட்சித் தலைவர் எஸ். ராஜேஷ்குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்தக் கட்டமைக்கப்பட்ட அணுகுமுறை, 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு நடந்ததை போலவே ஆலோசனைகளை செய்யும். காங்கிரசின் இந்த நிலைப்பாடு அவர்களுடன் கூட்டணி வைக்க ஆர்வமாக இருந்த விஜயின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஏமாற்றம் ஏற்பட்டு உள்ளது.
விஜயின் தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்க முயன்றது. ஆனால் காங்கிரஸ் டெல்லி தலைமை.. திமுகவுடன் இணக்கமாக செல்லுங்கள், கொடுக்கிற சீட்டை வாங்கிக்கொள்ளுங்கள் என்று உத்தரவிட்டு உள்ளதால்.. காங்கிரஸ் - தவெக கூட்டணி அமையாமலே போகும் சூழல் ஏற்பட்டு உள்ளது!












Click it and Unblock the Notifications