செங்கோட்டையன் நாளை என்ன பேசுவார்? அதிமுக bylaw-வை கையிலெடுக்கும் KAS!
சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கே.ஏ. செங்கோட்டையன் நாளை காலை 11 மணிக்கு விரிவாக செய்தியாளர்களை சந்திப்பதாக கூறியுள்ள நிலையில் அப்போது அவர் என்ன பேசுவார் என்பது குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். கட்சி பதவிகள் கடந்த செப்டம்பர் மாதம் பறிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர் அதிமுகவிலிருந்தே நீக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பசும்பொன்னில் நேற்று நடந்த தேவர் ஜெயந்தி விழாவில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோருடன் வந்த செங்கோட்டையன் ஒன்றாக சேர்ந்து தேவர் சிலைக்கு மாலை அணிவித்தார். சசிகலாவுடனும் அவர் பேசினார். அதிமுகவிலிருந்து தன்னை எடப்பாடி பழனிசாமி நீக்கினாலும் மகிழ்ச்சியே என சசிகலாவிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமியிடம் கேட்ட போது கட்சி கட்டுப்பாட்டை மீறினால் நிச்சயம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், அந்த வகையில் செங்கோட்டையனை நீக்க தயக்கம் இல்லை என தெரிவித்திருந்தார். ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரை அதிமுகவில் இருந்து நீக்கும் போதும் இவர்களுடன் கட்சியினர் தொடர்பு வைத்துக் கொள்ள கூடாது என கட்சி தலைமை தெரிவித்திருந்தது.
ஆனால் அதை மீறி செங்கோட்டையன் அந்த மூவருடனும் பேசினார். இந்த நிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் நாளை கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் காலை 11 மணிக்கு நீக்கம் குறித்து பேசுவதாக செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் செங்கோட்டையன் என்ன பேசுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிலும் கட்சி அலுவலகத்தில் பேசுவதாக கூறியிருக்கிறார். இதுகுறித்து தராசு ஷியாம் நியூஸ் 18 தமிழ்நாடு சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுவிட்டார்.
இது அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்காது. இது எதிர்பார்த்த ஒன்றுதான். எனவே நாளை அவர் என்ன பேசுவார் என்றால், "நான் கட்சியின் அமைப்புச் செயலாளர், ஈரோடு மேற்கு மாவட்டச் செயலாளர். கட்சியின் விதிப்படி எனக்கு நோட்டீஸ் கொடுத்து விளக்கம் கேட்டுதான் என்னை நீக்க முடியும். அவ்வாறு நோட்டீஸ் ஏதும் கொடுக்காமல் நீக்கியிருப்பது சட்டப்படி செல்லாது.
என்னை நீக்க கட்சி விதிகளின் படிதான் செயல்பட வேண்டும். நான் பொதுக் குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளேன். எனவே என்னை எடப்பாடி பழனிசாமியோ சிறு குழுவோ நீக்க உரிமை இல்லை. நான் நீதிமன்றம் செல்வேன்" என்பதை தாண்டி அவரால் வேறு ஏதும் பேச முடியாது. எனவே தன்னை கட்சியில் இருந்து நீக்கிய உத்தரவுக்கு கோர்ட்டுக்கு போய் இடைக்கால தடை பெற முயற்சிப்பார் என தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.
செங்கோட்டையன் நீக்கத்தால் பாஜக தலைமை மகிழ்ச்சியாக இருக்கும் என அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். அதிமுகவை சேர்ந்த செங்கோட்டையன் தங்களை சந்தித்தால் அவருக்கு பிரச்சினை, இது பிற கட்சியின் உள் விவகாரத்தில் தலையிடுவது போன்றாகிவிடும் என்பது பாஜக தலைமைக்கு நன்றாக தெரிந்திருந்தும் செங்கோட்டையன் சந்திப்பை தவிர்க்கவில்லை. எனவே பாஜகவை பொருத்தமட்டில் வரும் தேர்தலை காட்டிலும் அடுத்து வரக் கூடிய தேர்தல்களையே முக்கியமாக கருதுகிறார்கள்.
அதிமுகவின் பலத்தை இழக்கச் செய்து திமுக வெர்சஸ் பாஜக என்ற நிலையை உருவாக்கி எப்படியாவது ஆட்சியை பிடிக்கவே பாஜக போராடுவதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications