ஆன்மீக பயணம்... சிறப்பு சாமி தரிசனங்களுக்கு முன்னேற்பாடு.. கோவில் கோவிலாக விசாரிக்கும் சசிகலா உறவுகள்
சென்னை: அதிமுகவை எப்படியும் கைப்பற்றியே தீருவது என தீர்மானமாக இருக்கும் சசிகலா முதல் கட்டமாக ஆன்மீக பயணம் மேற்கொள்ள இருக்கிறார் என்கின்றனர் அவரது உறவினர்கள்.
சட்டசபை தேர்தலில் அதிமுக தோற்றதால் தம்மை தேடி கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் வருவார்கள் என எதிர்பார்த்தார் சசிகலா. ஆனால் அதிமுகவில் இருந்து சசிகலாவுக்கு ஆதரவான குரல்கள் உருவாகவில்லை.
இதற்கு பதிலாக சசிகலாவை அதிமுகவில் சேர்க்க மாட்டோம்; அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என அக்கட்சியின் மாவட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் அதிமுக, அமமுக நிர்வாகிகளுடன் தொடர்ந்து போனில் பேசி வருகிறார் சசிகலா.

ஆடியோ அரசியல்
அத்துடன் தாம் பேசும் ஒவ்வொரு உரையாடலையும் பதிவு செய்து ஊடகங்களுக்கும் அனுப்பி வருகிறார் சசிகலா. அவரது இந்த ஆடியோ அரசியல் அதிமுகவுக்கு பெரும் நெருக்கடியை கொடுத்துள்ளது. இதனால் சசிகலாவுடன் போனில் பேசியவர்கள் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றனர்.

கோவில்கள் திறப்பு
இது ஒருபுறமிருக்க, கொரோனா நெருக்கடிகள் குறைக்கப்பட்டு தளர்வுகள் கொடுக்கப்பட்டதில் கோவில்களும் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் சிறப்பு பூஜைகளுக்கு அனுமதி இல்லை. சிறப்பு பூஜைகளுக்கு அனுமதி கிடைக்கும் போது சுற்றுப்பயணம் செல்லலாம் என சொல்லியிருக்கிறாராம் சசிகலா.

சிறப்பு பூஜைக்கான விசாரிப்பு
அதேசமயம், முக்கிய சில கோவில்களில் சிறப்பு பூஜை இல்லை என்றாலும் தனிப்பட்ட முறையில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக் கிடைக்குமா ? என விசாரிக்கச் சொல்லியிருக்கிறார் சசிகலா. சசிகலாவின் உறவுகள் இதுகுறித்து, தமிழக அரசின் இந்து அறநிலையத்துறையின் அதிகாரிகளிடம், குறிப்பிட்ட சில கோவில்களைச் சொல்லி அந்த கோவில்களில் தனிப்பட்ட முறையில் சாமி தரிசனம் செய்ய வாய்ப்புகளை ஏற்படுத்தி தருமாறு கேட்டுள்ளனர்.

சுற்றுப்பயணம் எப்போது?
ஆனால், அதற்கு வாய்ப்பில்லை என்றும், சசிகலாவுக்காக தனிப்பட்ட முறையில் சாமி தரிசனம் செய்ய அனுமதித்தால் ஒவ்வொரு அரசியல் வி.வி.ஐ.பி.க்களும் இதே கோரிக்கை வைப்பார்கள். அதனால் அப்படி அனுமதிக்க முடியாது. பொறுத்திருங்கள்...விரைவில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படும். அப்போது சிறப்பு பூஜைகளுக்கும் வாய்ப்புண்டு என கூறியுள்ளனர். இதனால்தான் சசிகலா இன்னமும் சுற்று பயணம் மேற்கொள்ளவில்லையாம்.












Click it and Unblock the Notifications