அம்மா அம்மா தான்.. ஜெயிலில் இருந்து வீடு திரும்பிய டிடிஎப் வாசன்.. வீட்டில் தாய் செய்த தரமான சம்பவம்
சென்னை: பைக் ஓட்டி விபத்தில் சிக்கிய யூடியூபர் டிடிஎப் வாசன் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீன் கிடைத்த நிலையில் நேற்று சிறையில் இருந்து வெளியே வந்தார். இதையடுத்து அவரை வீட்டுக்கு அழைத்து சென்ற தாய் அவருக்கு செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் டிடிஎப் வாசன். இவர் பைக்கில் வெளிமாநிலங்களுக்கு ரைட் சென்று அதனை வீடியோவாக யூடியூப்பில் பதிவேற்றி வருகிறார். இவரை பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிகமாக பாலோ செய்து வருகின்றனர்.

இதற்கிடையே தான் அடிக்கடி டிடிஎப் வாசன் போக்குவரத்து விதிகளை மீறி சிக்கலில் சிக்கி கொள்வது உண்டு. அதிவேகமாக பைக் ஓட்டுவது உள்பட பல்வேறு பிரிவுகளில் அவர் மீது போலீஸ் நிலையங்களில் ஏற்கனவே வழக்குகள் பதிவாகி உள்ளன. பல வழக்குகளில் அவர் அபராதம் செலுத்தி உள்ளார்.
இதற்கிடையே தான் கடந்த செப்டம்பர் மாதம் டிடிஎப் வாசன் விலையுயர்ந்த பைக்கில்காஞ்சிபுரம் அடுத்த பாலுசெட்டிசத்திரம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அவரது பைக் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது. பைக் பல்டி அடித்து சாலையோரம் விழுந்த நிலையில் டிடிஎப் வாசன் தூக்கி வீசப்பட்டார். அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதையடுத்து காஞ்சிபுரம் பாலுசெட்டி சத்திரம் போலீசார் டிடிஎப் வாசன் மீது வாகனத்தை அஜாக்கிரதையாக ஓட்டுதல் உள்பட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அதன்பிறகு அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். ஏற்கனவே டிடிஎப் வாசன் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதால் அவரது லைசென்ஸ் 10 ஆண்டுகள் வரை ரத்து செய்யப்பட்டது.
இதற்கிடையே தான் டிடிஎப் வாசன் தொடர்ந்து ஜாமீன் கோரி வந்தார். காஞ்சிபுரம் கீழமை நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 1ம் தேதி நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதையடுத்து நேற்று சென்னை புழல் சிறையில் இருந்து டிடிஎப் வாசன் வெளியே வந்தார். சுமார் 45 நாட்களுக்கு பிறகு அவர் விடுதலையானார்.

டிடிஎப் வாசனை அவரது தாயார், நண்பர்கள் வரவேற்றனர். அதன்பிறகு காரில் அவரை அங்கிருந்து வீட்டுக்கு அழைத்து சென்றனர். வீடு திரும்பிய டிடிஎப் வாசனை அவரது தாய் வரவேற்ற சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதாவது டிடிஎப் வாசன் வீடு திரும்பியபோது வீட்டுக்கு வெளியே அமர வைக்கப்பட்டார். இதையடுத்து அவரது தலையில் எண்ணெய் வைத்து தாய் குளிப்பாட்டினார். அதன்பிறகு இன்னொரு பெண் டிடிஎப் வாசனுக்கு ஆர்த்தி எடுத்து திலகமிட்டார். அதன்பிறகு டிடிஎப் வாசன் வீட்டுக்குள் சென்றார்.












Click it and Unblock the Notifications