அதே ரசிகர்கள் கூட்டம்.. அதே செல்பி.. விஜயை தொடர்ந்து அரசியலில் கால் பதிக்கிறாரா நடிகர் சூர்யா?
சென்னை: நடிகர் விஜயை தொடர்ந்து நடிகர் சூர்யாவும் அரசியலில் கால் பதிக்க வாய்ப்பு உள்ளதாகப் பேச்சுகள் எழுந்துள்ளன. சூர்யாவின் படங்களுக்கு தொடர்ச்சியாக அரசியல் ரீதியிலான எதிர்ப்பு இருப்பதோடு, அவ்வப்போது மத்திய அரசின் திட்டங்களை எதிர்த்து வருகிறார். இந்த நிலையில் சூர்யாவின் பிறந்தநாள் நிகழ்வு காட்சிகள், அவருக்கு அரசியல் ஆசை இருப்பதாக பார்க்கப்படுகிறது.
நடிகர் விஜய் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். அதற்கு முன்பாக கல்வி நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு உதவித்தொகை அளித்தார். அதேபோல் விஜய் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு நடந்த போது, கடலூரில் தனது வேனில் ஏறி நின்று ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

அதுமட்டுமல்லாமல் நீட் தேர்வை எதிர்த்துப் போராடிய அனிதாவின் மரணம், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட சம்பவங்களில் பயங்கரவாதத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். இதனைத் தொடர்ந்து விஜய் அரசியலுக்கு வந்துள்ள நிலையில், அவருக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் விஜயை தொடர்ந்து சூர்யாவும் அரசியலுக்கு வரலாம் என்று கணிக்கப்படுகிறது.
நடிகர் சூர்யா இன்று தனது 50வது பிறந்தநாளினை கொண்டாடி வருகிறார். இதனையொட்டி ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கருப்பு படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. விஜய் எப்படி மெர்சல் படத்தில் தோன்றினாரோ, கிட்டத்தட்ட அப்படியான ஒரு கெட்டப்பில் சூர்யாவும் தோன்றி இருக்கிறார். அதேபோல் சூர்யாவின் பிறந்தநாளினையொட்டி இன்று அவரது வீடு முன்பாக சூர்யாவின் ரசிகர்கள் குவிந்தனர்.
அவர்களைப் பார்ப்பதற்காக சூர்யாவும் அவரின் வீட்டின் கட்டடம் மீது ஏறி நின்று ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது ஒரு பூங்கொத்தை ரசிகர் தூக்கி எறிய, அதனைச் சரியாக கேட்ச் பிடித்து சூர்யா நன்றி கூறினார். அதன்பின் அங்கிருந்த ரசிகர்களுடன் சூர்யா செல்ஃபி ஒன்றை எடுத்துக் கொண்டார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.
ஏற்கனவே நடிகர் சூர்யா அறம் என்ற என்ஜிஓ நிறுவனம் மூலமாகக் கல்விக்காக பல்வேறு உதவிகளையும் மாணவர்களுக்கு வழங்கி வருகிறார். இதுவரை 5 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் "அறம்" அறக்கட்டளை மூலமாகப் படித்து வேலை செய்து வருகின்றனர். அதேபோல் நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் கடந்த சில ஆண்டுகளாகவே தங்களின் ரசிகர் மன்றக் கட்டமைப்பை வலுப்படுத்தி வருகின்றனர்.
விஜய் அளவிற்கு மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு வருகின்றனர். சூர்யாவின் செயல்பாடுகளும் விஜயை பின்பற்றி அமைந்திருப்பதால், வரும் காலத்தில் சூர்யாவும் அரசியலில் கால் பதிக்கலாம் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் சூர்யா ஏற்கனவே புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட விவகாரங்களுக்காக மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
ஜெய பீம் விவகாரத்தில் பாமக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்ப்பை தெரிவித்த போதும் கூட, அவர் மன்னிப்பு கேட்காமல் அமைதி காத்தார். சூர்யாவின் படங்களுக்கும் தொடர்ச்சியாக அரசியல் ரீதியிலான எதிர்ப்புகள் அதிகரித்து வருகிறது. இதனால் இன்னும் சில ஆண்டுகளில் சூர்யாவும் தனது புதிய அரசியல் கட்சி தொடர்பான அறிவிப்பு வெளியிட வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications