அக்னிபாத் எதிர்ப்பு- சென்னையில் பிரதமர் மோடி உருவபொம்மை எரிப்பு- பெரியார் தி.க.வினர் கைது!
சென்னை: மத்திய பாஜக அரசின் அக்னிபாத் எனும் புதிய ராணுவ ஆட்சேர்ப்பு கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் பிரதமர் மோடி உருவபொம்மையை எரித்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் (பெரியார் தி.க, த.பெ.தி.க) கைது செய்யப்பட்டனர்.
அக்னிபாத் திட்டம் என்பது ராணுவ பணியை 4 ஆண்டுகளுக்கு மட்டுமே வழங்கக் கூடியது. இதற்கு நாடு முழுவதும் ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 2 ஆண்டுகளாக ராணுவ ஆட்சேர்ப்பு நடைபெறவில்லை. இந்த நிலையில் இனி 4 ஆண்டுகளுக்குதான் ராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு நடைபெறும் என மத்திய அரசு அறிவித்தது ராணுவத்தில் சேர காத்திருந்தவர்களை கொந்தளிக்க வைத்தது. இதனால் கடந்த ஒரு வார காலமாக வட இந்தியாவே பற்றி எரிந்தது.

வட இந்தியாவில் குறிப்பாக பீகாரில் மிகப் பெரும் வன்முறை வெடித்தது. மொத்தமாக 60க்கும் மேற்பட்ட ரயில்கள் தீக்கிரையாக்கப்பட்டன. பல நூறு ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. மேற்கு வங்கத்திலும் இந்த வன்முறை விஸ்வரூபம் எடுத்தது.
தென்னிந்தியாவில் தெலுங்கானாவின் செகந்திராபாத் ரயில் நிலையம் தாக்கப்பட்டு போர்க்களமானது. தமிழகத்தில் வேலூர், மதுரையில் போராட்டங்கள் நடைபெற்றன. மதுரையில் நேற்று ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் சென்னையில் கோவை கு.ராமகிருட்டிணன் தலைமையில் செயல்படும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர், அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினர். அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி சென்னையில் உள்ள ராணுவ தலைமையகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை பெரியார் தி.க.வினர் நடத்தினர்.
இப்போராட்டத்தின் போது பிரதமர் மோடியின் உருவபொம்மையை பெரியார் தி.க.வினர் எரித்தனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு பிரதமர் மோடி உருவபொம்மையை எரித்த பெரியார் தி.க.வினரை போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications