கவுன்ட் தொடங்கும் தவெக.. வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாக வேட்பாளர்களுடன் விஜய் இன்று முக்கிய ஆலோசனை!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வரும் மே 4 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று தனது கட்சி வேட்பாளர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் நேற்று வெளியாகியுள்ள நிலையில் இந்த முக்கிய ஆலோசனை நடைபெறுகிறது.
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் சட்டசபை தேர்தல் கடந்த ஏப்ரல் 23 அன்று நடைபெற்றது. இதில் 85.15% வாக்குகள் பதிவாகின. தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் நிறைவுற்று யார் ஆட்சியில் அமரப்போகிறார்கள் என்பதை நிர்ணயிக்கப்போகும் முடிவுகள் அறிவிக்க இன்னும் 3 நாட்களே இருக்கும் நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வாக்கு எண்ணிக்கையை எதிர்கொள்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

சமீபத்தில் திருச்செந்தூருக்கு சென்ற தவெக தலைவர் விஜய் முருகனை வழிபட்டுத் திரும்பினார். நேற்று மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஷீரடி சாய் பாபா கோயிலுக்கு விஜய் தரிசனம் செய்தார். தொடர்ந்து அவர் ஆன்மீக பயணங்களை மேற்கொண்டு வருகிறார். தொடர்ந்து அவர் செல்லும் இடங்களில் எல்லாம் கட்டுக்கடங்காத கூட்டம் கூடுவது வழக்கமாக உள்ளது. இதனால் சில அசம்பாவிதங்களும் ஏற்படுகின்றன.
இந்தச் சூழலில் தமிழகத்தின் சட்டசபை தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் நேற்று மாலை வெளியானது. ஆக்ஸிஸ் மை இந்தியா நிறுவனம் வெளியிட்ட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புக்கான முடிவுகளில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 98 - 120 இடங்களைக் கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேட்ரிஸ் நிறுவனத்தின் கருத்துக் கணிப்பில் தவெகவுக்கு 13 முதல் 18 இடங்கள், என்டிடிவி - பீப்பிள்ஸ் பல்ஸ் கருத்துக் கணிப்பில் தவெகவுக்கு 18 - 24 இடங்கள், ஜேவிசி - டைம்ஸ் நவ் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் தவெக 8 - 15 இடங்களைக் கைப்பற்றும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் வருகை ஏதேனும் ஒரு கட்சிக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்று அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.
வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் தவெகவுக்கு கணிசமான வாக்குகள் கிடைத்திருப்பதாக வரும் தகவலால் விஜய் உற்சாகமாகி வருகிறார். இந்நிலையில், சென்னை பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று பிற்பகல் 1 மணிக்கு விஜய் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட 233 வேட்பாளர்கள் மட்டுமே இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனைத்து வேட்பாளர்களும் அந்தந்த வாக்குச்சாவடிகளில் பெறப்பட்ட '17C' ஒரிஜினல் படிவத்தை கட்டாயம் கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
17C என்பது, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை தொடர்பான விவரங்கள் அடங்கிய படிவம் ஆகும். இது தேர்தல் அலுவலர் மூலம் வேட்பாளர்களிடம் வழங்கப்படுகிறது. இந்த படிவம் தேர்தலில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்கான முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது.
வாக்கு எண்ணிக்கை அன்று வேட்பாளர்கள் அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களிலேயே இருக்க வேண்டும். ஓட்டு எண்ணிக்கையின் போது சந்தேகத்திற்கு இடமான ஏதேனும் நடவடிக்கைகள் இருந்தால் உடனடியாக தேர்தல் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். கட்சியின் நிர்வாகிகளுடன் நேரடியாக தொடர்பில் இருக்க வேண்டும் போன்ற ஆலோசனைகள் வழங்கப்படும் எனத் தெரிகிறது.
முன்னதாக, தேர்தல் முடிவடைந்த அடுத்த நாளான ஏப்ரல் 24 ஆம் தேதி, தவெகவின் முக்கிய நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா மற்றும் மாநில அளவில் வெற்றி வாய்ப்புள்ளதாக கருதப்படும் 40 வேட்பாளர்களை, சென்னையில் உள்ள பனையூர் அலுவலகத்திற்கு அழைத்து அண்மையில் ஆலோசனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications