கவர்ச்சிகர அறிவிப்புடன் ரெடியாகுது? அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க 10 பேர் குழுவை அமைத்த எடப்பாடி
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது. நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், ஜெயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமன், உதயகுமார், செம்மலை, வளர்மதி ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த 10 பேர் குழு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் அறிக்கை தயாரிக்க உள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது. சரியாக சொல்வது என்றால் 4 மாதங்களே உள்ளன. இதனால், தமிழகத்தில் அரசியல் களம் கொதிக்க ஆரம்பித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது திமுக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், வரும் தேர்தலில் திமுக கூட்டணியை வீழ்த்தி எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் அதிமுக - பாஜக கூட்டணி வியூகம் வகுத்து வருகிறது. திமுகவிற்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்க அதிமுக வியூகம் வகுத்து வருகிறது.
திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற ஒத்த கருத்துள்ள கட்சிகள் ஒரே அணியில் திரள வேண்டும் என்று அதிமுக அவ்வப்போது அழைப்பு விடுத்து வருகிறது. தமிழகம் முழுவதும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர பிரசாரத்திலும் ஈடுபட்டு வருகிறது.
அதேபோல, சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனுவை அதிமுக பெற்றுள்ளது. இப்படி சட்டமன்ற தேர்தல் பணிகளை அதிமுக தீவிரப்படுத்தியுள்ள நிலையில், தற்போது தேர்தல் அறிக்கை தயாரிக்க குழுவையும் அமைத்துள்ளது. நத்தம் விஸ்வநாதன், ஜெயக்குமார், சிவி சண்முகம், பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன், வளர்மதி, உதயகுமார், செம்மலை உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழுவை அதிமுக அமைத்துள்ளது.
இந்தக் குழு தமிழகம் முழுவதும் சென்று விவசாயிகள், தொழில் முனைவோர்கள் என பல்வேறு தரப்பினரை சந்தித்து அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து தேர்தல் அறிக்கை தயாரிக்க உள்ளது. சட்டமன்ற தேர்தலில் வென்று எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று தீவிரம் காட்டி வரும் அதிமுக, பல்வேறு கவர்ச்சிகர அறிவிப்புகளை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மகளிர் வாக்குகளை குறிவைத்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications