55 தொகுதிகள் இல்லையாம்.. அமித்ஷாவிடம் 80 தொகுதிகளை தேர்வு செய்து கொடுத்த நயினார் நாகேந்திரன்!
சென்னை: அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக விருப்ப தொகுதிகளின் பட்டியலை தயார் செய்துள்ளது. நயினார் நாகேந்திரன் தரப்பில் மத்திய அமைச்சர் அமித்ஷாவிடம் கொடுக்கப்பட்ட விருப்ப பட்டியலில் சுமார் 80 தொகுதிகள் அடங்கி இருப்பதாக கூறப்படுகிறது. அதில் இருந்து சுமார் 45 முதல் 55 தொகுதிகளை பாஜக கூட்டணி கேட்டு வருவதாக பார்க்கப்படுகிறது.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் சூழலில், அதிமுக - பாஜக கூட்டணி தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்கி இருக்கிறது. தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக போட்டியிட விரும்பும் தொகுதிகள் அடங்கிய பட்டியலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் வழங்கி இருக்கிறார்.

இந்தப் பட்டியலை கொடுத்த பின் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பியூஷ் கோயல் அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி, எஸ்பி வேலுமணி உள்ளிட்டோருடன் நட்புடன் இருந்தனர். 2019 லோக்சபா மற்றும் 2021 சட்டசபைத் தேர்தலின் போதும் பியூஷ் கோயல் தமிழக பாஜக பொறுப்பாளராக இருந்தனர்.
இதனால் பாஜக தரப்பில் தொகுதி பங்கீட்டில் கூடுதல் தொகுதிகளை கைப்பற்ற இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது. இதனிடையே நயினார் நாகேந்திரன் தரப்பில் அமித்ஷாவிடம் அளிக்கப்பட்ட பட்டியலில் சுமார் 80 தொகுதிகளின் பெயர்கள் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. இந்த 80 தொகுதிகளில் இருந்து 45 தொகுதிகள் வரை அதிமுகவிடம் பெற பாஜக திட்டமிட்டுள்ளது.
அதேபோல் பாஜக தேர்வு செய்த 80 தொகுதிகளில் சென்னை, கோவை, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அதிக தொகுதிகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. கடந்த சட்சசபைத் தேர்தலில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் அளிக்கப்பட்டது. அதில் 4ல் மட்டுமே பாஜக வென்றது. இதன்பின் லோக்சபா தேர்தலில் பாஜக கூடுதல் தொகுதிகளில் தங்கள் தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்டது.
அதில் ஓபிஎஸ், டிடிவி தினகரன், ஏசி சண்முகம், ஜான் பாண்டியன் உள்ளிட்டோர் கணிசமான வாக்குகளை பெற்றனர். இதன் மூலமாக பாஜகவின் வாக்கு சதவிகிதம் அதிகரித்தது. இதனை வைத்து பாஜக இம்முறை கூடுதல் தொகுதிகளை கேட்டு வருகிறது. ஆனால் எடப்பாடி பழனிசாமியோ 30 முதல் 35 தொகுதிகள் வரை மட்டுமே கொடுக்க தயாராக இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் அமித்ஷாவின் வருகைக்கு பின் என்ன முடிவு எடுக்கப்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications