அதிமுக - பாஜக கூட்டணி தொகுதி பங்கீடு.. ஜனவரி 23ல் வெளியாகும் அறிவிப்பு.. பியூஷ் கோயல் சொன்ன அப்டேட்!
சென்னை: தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணிக்கான தொகுதி பங்கீடு ஜனவரி 23ல் இறுதி செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி முன்னிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும், புதிய கட்சிகளை வரவேற்பதாகவும் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் இருக்கும் நிலையில், அதிமுக - பாஜக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளன. ஏற்கனவே பாமகவுக்கான தொகுதி பங்கீடு நிறைவடைந்துவிட்ட சூழலில், பாஜகவுக்கான தொகுதி பங்கீடு குறித்து விவாதம் நடந்து வருகிறது.

இதனிடையே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் 56 தொகுதிகள் மற்றும் தேர்தலில் வென்றால் 3 அமைச்சரவை ஒதுக்கப்பட வேண்டும் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா கேட்டதாக கூறப்படுகிறது. இதற்கு ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை என்றும், தொகுதி பங்கீடு தொடர்பாக நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்துவிட்டு பதில் அளிப்பதாக கூறி இருந்தார்.
இதன்பின் எடப்பாடி பழனிசாமி மற்றும் நயினார் நாகேந்திரன் இடையிலான சந்திப்பு நடைபெற்றது. அப்போதே தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் முக்கியமான அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். ஜனவரி 23ல் சென்னை அருகே என்டிஏ பொதுக்கூட்டம் பிரம்மாண்டமாக நடக்கவுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடக்கும் இந்தப் பொதுக்கூட்டத்தில் என்டிஏ கூட்டணியில் உள்ள அத்தனை தமிழக தலைவர்களையும் மேடையேற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி 23ல் நடக்கும் என்டிஏ கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு தொகுதிகளில் போட்டியிடும் என்ற அறிவிப்பு வெளியாகும்.
அதுமட்டுமல்லாமல் பிரதமர் மோடியுடன் தமிழக தலைவர்கள் பங்கேற்பார்கள். அந்த கூட்டத்தில் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான அறிவிப்பு வெளியாகும். அதேபோல் அமமுகவை கூட்டணிக்குள் கொண்டு வரும் பணிகள் நடைபெற்று வந்தன. அது இறுதி பெற்றுவிட்ட சூழலில், அதிகாரப்பூர்வமாக ஜனவரி 23ல் அறிவிக்கப்படும் என்றும் பியூஷ் கோயல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் என்டிஏ கூட்டணியில் தற்போது உள்ள கட்சிகள் மட்டுமல்லாமல், புதிய கட்சிகள் இணைய விரும்பினாலும் இணைக்கப்படுவார்கள் என்றும், புதிய கட்சிகளை வரவேற்பதாகவும் கூறி இருக்கிறார். இதன் காரணமாக என்டிஏ பொதுக்கூட்டம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications