அதிமுக உட்கட்சி தேர்தல்: மீண்டும் ஒரு வழக்கு; நாளை உயர் நீதிமன்றத்தில் விசாரணை
அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான தேர்தல் முடிவுகள் அறிவிக்க தடை கோரிய வழக்கை அவசரமாக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்த நிலையில் நாளை விசாரிக்க உள்ளது.
அதிமுக உட்கட்சி தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்த நிலையில் அதிமுக செயற்குழு கூடி திருத்தங்கள் கொண்டு வந்தனர். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு டிசம்பர் 7 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதை எதிர்த்து அதிமுக முன்னாள் எம்பி. கே.சி பழனிசாமி வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில் கட்சி விதிகளை திருத்தியதை பொதுக்குழுவில் வைக்கவில்லை, வாக்காளர் பட்டியல் தயார் செய்யவில்லை, போதிய அவகாசம் கொடுக்கவில்லை எனக்கூறி வழக்கு தொடர்ந்தார். தேர்தலுக்கு தடைவிதிப்பதை ஏற்க மறுத்த நீதிமன்றம் ஓபிஎஸ்-இபிஎஸ்-க்கு நோட்டீஸ் அனுப்பியது.
இதேபோல் இன்றும் ஒரு வழக்கு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதிமுக கட்சி விதிப்படி 21 நாட்கள் அவகாசம் வழங்காமல் தேர்தல் நடத்தப்படுவதால், தேர்தல் முடிவுகளை அறிவிக்க தடை கோரி ஓசூரைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர் ஜெயச்சந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் தாக்கல் செய்த மனுவில், "அதிமுக உட்கட்சித் தேர்தலில் போட்டியிட எவருக்கும் வாய்ப்பு வழங்கவில்லை. ஒரு கோடியே 50 லட்சம் உறுப்பினர்கள் உள்ள நிலையில் வாக்காளர் பட்டியல் வெளியிடவில்லை.
போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் செயல்படுவதாக கூறி, தேர்தல் ஆணையத்துக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இருவரின் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்க வேண்டும்.
நாகாலாந்து: 3 முறை ராணுவம் துப்பாக்கிச் சூடு - பொதுமக்கள் 14 பேர் பலி- அமித்ஷா விளக்கம்
மாலை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதாக செய்திகள் வெளியாவதாக கூறி, இந்த வழக்கை கடைசி வழக்காக அவசரமாக விசாரிக்க வேண்டும்" என ஜெயச்சந்திரன் தரப்பில், தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி அமர்வில் முறையிடப்பட்டது.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், நாளை விசாரிப்பதாக கூறியதுடன், இன்றைய நிகழ்வுகள் குறித்து கூடுதல் மனுவாக தாக்கல் செய்ய மனுதாரர் தரப்புக்கு அறிவுறுத்தினர். இதனால் இந்த மனு நாளை விசாரணைக்கு வர உள்ளது.