ஆஹான்... எங்களிடம் இரு தலைகள்... இரு இலைகள்.. பெரும் அலைகள்.. புல்லரிப்பில் அதிமுக தொண்டர்கள்!
சென்னை: அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதை அந்த கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் சமூக வலைதளங்களில் பெரும் உற்சாகத்துடன் வசனங்களை கொட்டியும் கொண்டாடி திளைக்கின்றனர்.
அதிமுகவில் சட்டசபை தேர்தலுக்கு 7 மாதங்கள் இருக்கும் நிலையில் இப்போதே முதல்வர் வேட்பாளராக எடப்பாடியார் அறிவிக்கப்பட்டுவிட்டார். இனி கட்சி வேலைகள் ஜரூராக நடக்கும்; பிரச்சனைகள் எதுவும் இருக்காது என்பது அதிமுக தொண்டர்களின் கருத்து.

பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
இதற்காக தமிழகத்தின் பலநகரங்களில் அதிமுகவினர் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி தேர்தல் வெற்றியைப் போல கொண்டாடி மகிழ்கின்றனர். நம்மிடம் பேசிய திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் நகர அதிமுக செயலாளர் எம். பாபுசேட், இதையே பிப்ரவரி மாதத்தில் அறிவித்திருந்தால் ஏகப்பட்ட குழப்பங்கள் வந்திருக்கலாம். இப்போதே அறிவித்துவிட்டதால் வேட்பாளர் பட்டியலை மட்டும் அறிவிக்க வேண்டியதுதான் பாக்கி; தேர்தல் பணிகளில் இனி சுணக்கமே இல்லை என அப்படி ஒரு உற்சாகத்துடன் கொண்டாடுகிறார்.

இருதலை- இரு அலை- பெரும் அலை
அனேகமாக அதிமுக தொண்டர்களின் பொதுவான மனநிலை இப்படியாகத்தான் இருக்கிறது. திண்டுக்கல்லை சேர்ந்த மற்றொரு அதிமுக தொண்டர் இதேபோல் தமது மகிழ்ச்சியை இப்படித்தான் பகிர்ந்திருக்கிறார். அதாவது எங்களிடம் இருதலைகள் உண்டு.. இரு இலைகள் உண்டு. 2021 சட்டசபை தேர்தலில் ஈட்டப்போகும் வெற்றிக்கு பெரும் அலைகள் உண்டு என அட்டகாசப்படுத்தி இருக்கிறார்.

கழகம் வெல்ல இணைந்த கைகள்
அதிமுகவினரின் சமூகவலைதளப் பக்கங்களில் இப்படியான சிதறல்களை ஏராளமாக பார்க்க முடிகிறது. கழகம் வெல்ல இணைந்த கைகள் என ஓபிஎஸ்- ஈபிஎஸ் படத்தை போட்டு கொண்டாடி பலரும் இதை ஷேர் செய்தும் வருகின்றனர். திண்டுக்கல்லை அடுத்த கரூர் மாவட்ட அதிமுகவினரோ, எடப்பாடியாரே நிரந்தர முதல்வர் என கொண்டாடுகின்றனர்.
இதுதான் அதிமுக
சேலம் மாவட்டத்தில் சாதாரண கிராம செயலாளர் முதலமைச்சர் ஆகலாம்; தேனி மாவட்டத்தில் டீ கடை நடத்தியவர் கழக ஒருங்கிணைப்பாளர் ஆகலாம் என்கிற வசனங்களையும் சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது. ஆக இன்றைக்கு அதிமுகவினர் ஒரே கொண்டாட்ட மனநிலையில்தான் உள்ளனர்.












Click it and Unblock the Notifications