ராமர் கோவில்: எடப்பாடியின் 'ஸ்டிராங்' பாஜக எதிர்ப்பு பதிலடி-சிங்கம் களமிறங்கிருச்சு குஷியில் அதிமுக!
சென்னை: அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா தொடர்பாக பாஜகவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக தந்துள்ள பதிலடி அக்கட்சியினரை உற்சாகப்படுத்தியிருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். பாஜகவுடன் ஒட்டும் இல்லை; உறவும் இல்லை என்ற நிலைப்பாட்டை ஆணித்தரமாக இந்த பதில் மூலமாக சொல்லி இருக்கிறார் என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.
லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி கிடையாது என எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ஆனால் யாருமே இதை நம்பக் கூடிய அறிவிப்பாக கருதவில்லை. அதிமுக எப்படியும் பாஜகவுடன் கை கோர்த்துவிடும் என்றே பலரும் கணித்து கொண்டிருந்தனர். அதற்கேற்ப கடந்த 3 மாதங்களாக பாஜகவை கடுமையாக விமர்சிக்காமல் கனத்த மவுனத்துடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் அக்கட்சியின் 2-ம் கட்ட தலைவர்களும் கடந்து சென்று கொண்டே இருந்தனர்.

அயோத்தி கோவில் விவகாரம் பதிலடி: இந்த நிலையில் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, கோவில் கட்டித்தான் ஆட்சிக்கு வர வேண்டும் என்றால் எல்லோரும் கோவில் கட்ட சென்றுவிடுவார்கள். அதேபோல கோவில் கட்டினால் எல்லோரும் மோடியைத்தான் ஆதரிப்பார்கள்; மோடி பக்கமே சென்றுவிடுவார்கள் என்பது தவறான கருத்து.
கோவில் என்பது அவரவர் நம்பிக்கை சார்ந்தது. கோவில் கட்டினால் மட்டுமே மக்கள் ஓட்டுப் போட்டுவிடமாட்டார்கள். நான் முதல்வராக இருந்த போது ஏராளமான கோவில்களைக் கட்டினேன். அப்படியானால் மக்கள் எனக்குதானே வாக்களிக்க வேண்டும் என அதிரடியாக கூறியிருந்தார். பாஜகவுடனான கூட்டணி முறிவுக்குப் பின்னர் பாஜக மீது எடப்பாடி பழனிசாமி முன்வைத்த கடும் விமர்சனம் இது.

இந்து என்.ராம்: எடப்பாடி பழனிசாமியின் இந்த விமர்சனம் தொடர்பாக சன் நியூஸ் தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்ற மூத்த பத்திரிகையாளர் இந்து என். ராம் கூறுகையில், இனிமேல் எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் சேருவது கஷ்டம்தான். முதலில் கூட பேரம் பேசும் சக்தியை அதிகரிக்கத்தான் கூட்டணியை முறிக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்கிற கருத்து இருந்தது. இந்த பேட்டியின் மூலம் பாஜகவிடம் இருந்து அதிமுக விலகி தனியாகத்தான் போட்டியிடும் என்பதை உறுதி செய்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளர் குபேந்திரன்: இதேபோல மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் கூறுகையில், எடப்பாடி பழனிசாமியின் இந்த பதில் நேரடியாக பிரதமர் மோடிக்கு இடித்த இடி. எப்படியாவது அதிமுகவை கொண்டு பாஜக வந்துவிடும் என நம்பிக் கொண்டிருந்தவர்களுக்கு இது சரியான அடி. இந்த அடிக்கு பதிலாக டெல்லியில் இருந்து ஈடியாக (அமலாக்கத்துறை) வந்து இடிக்குமா என்பது தெரியாது என கூறியிருக்கிறார். எடப்பாடி பழனிசாமியின் இந்த திட்டவட்டமான நிலைப்பாடு அதிமுக தொண்டர்களை பெரும் உற்சாகப்படுத்தியிருக்கிறது எனவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications