அடக்கொடுமையே! உங்க சண்டையில் எம்ஜிஆர், ஜெ. சமாதியை மறந்துட்டீங்களே..அதிமுக தொண்டர்கள் ஆதங்கம்!
சென்னை: அதிமுகவின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகும் பொதுக்குழுவுக்கு செல்வதற்கு முன்பாக அக்கட்சியின் நிறுவனர் எம்ஜிஆர், அக்கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா நினைவிடங்களுக்கு யாருமே சென்று மரியாதை செலுத்தாதது அதிமுக தொண்டர்களிடையே ஆதங்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
Recommended Video
தமிழகத்தில் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளிலும் ஏதேனும் மிக முக்கிய நிகழ்வுகள் நடைபெறும் நாட்களில் அக்கட்சிகளின் தலைவர்கள் நினைவிடங்களும் முக்கியத்துவம் பெறும். திமுக என்றால் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்கும் அதிமுக என்றால் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களுக்கும் அக்கட்சிகளின் தலைவர்கள் சென்று மரியாதை செலுத்துவது வழக்கம்.
ஆகட்டும் பார்க்கலாம்! எம்ஜிஆரின் 1976 கோவை அதிமுக பொதுக்குழு பார்முலாவை நம்பும் எடப்பாடி கோஷ்டி!
தலைவர்கள் நினைவிடங்கள்
அதேபோல் சட்டசபை மானிய கோரிக்கை, கட்சியின் அதிமுக்கிய தீர்மானங்கள் ஆகியவற்றை இந்த தலைவர்களின் நினைவிடங்களின் வைத்து வணங்கி எடுத்துவிட்டுச் செல்வதும் ஒரு வழக்கமாகவே இருந்து வருகிறது. இதனால் தலைவர்களின் பிறந்த நாள், நினைவுநாள் தவிர இத்தகைய முக்கிய தருணங்களிலும் இந்நினைவிடங்கள் முக்கியத்துவம் பெறும்.
தர்மயுத்த இடம்
அதிமுகவைப் பொறுத்தவரை ஜெ.நினைவிடம் என்பது ஒரு கலகக் குரலுக்கான இடமாகப் போய்விட்டது. அதிமுகவினரின் வார்த்தைகளில் சொன்னால் தர்மயுத்த அரங்கமாகிவிட்டது. சசிகலாவை எதிர்த்து ஓபிஎஸ் தர்மயுத்தத்தை தொடங்கிய இடம் ஜெ.நினைவிடம்தான். தமிழகத்தையே ஒரு பின்னிரவில் திரும்பிப் பார்க்க வைத்தார் ஓபிஎஸ் தமது தர்மயுத்தம் மூலம்.
அதிமுக குழப்பம்
தற்போது அதிமுகவில் உச்சகட்ட குழப்பம் நடைபெற்று வரும் நிலையிலும் ஜெ.வின் சமாதி முக்கிய இடமாக பார்க்கப்பட்டது. அதிமுகவில் தம்மை ஓரம் கட்டி, பொதுச்செயலாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி கைப்பற்றப் போகிறார் என்பதால் கொந்தளித்து போனார் ஓபிஎஸ். இதையடுத்து அதிமுக பொதுக்குழுவையே நடத்தவிடாமல் பெரும் முயற்சிகளை மேற்கொண்டுப் பார்த்தார் ஓபிஎஸ். இதன் ஒருபகுதியாகவே ஜெ. சமாதிக்கு ஓபிஎஸ் செல்வார் என கூறப்பட்டது.
தொண்டர்கள் ஆதங்கம்
ஆனால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்தான் நேற்று ஜெ.சமாதிக்கு போனார்கள். அங்கே எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆவேசமாக முழக்கங்களை எழுப்பினர். எப்படியும் ஓபிஎஸ் வந்துவிடுவார் என காத்திருந்த ஆதரவாளர்களுக்கு கடைசியில் ஏமாற்றம்தான் மிஞ்சியது.
இந்நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இன்று பொதுக்குழு நடைபெறுகிறது. ஆனால் பொதுக்குழுவுக்கு செல்வதற்கு முன்பாக ஓபிஎஸ், ஈபிஎஸ் என எந்த ஒரு கோஷ்டியும் எம்ஜிஆர், ஜெ. நினைவிடங்களை மறந்தும் கூட எட்டிப்பார்க்கவில்லை. எப்படியும் தலைவர்கள் இங்கே வருவார்கள் என காத்திருந்த அதிமுக தொண்டர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர். உங்க சண்டையில் எங்க தலைவர்களை தூக்கிப் போட்டுவிட்டீங்களே.. எம்ஜிஆர், ஜெ.நினைவிடங்களில் இன்னமும் காத்திருக்கும் அதிமுக தொண்டர்கள் குமுறுகின்றனர்.