யாருப்பா அது! புதுக்கோட்டை கறம்பக்குடி பேரூராட்சியின் அதிமுக வேட்பாளருக்கு ஒரு ஓட்டு கூட விழவில்லை!
சென்னை: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் சூழலில், புதுக்கோட்டையில் ஒரு வார்டில் அதிமுக வேட்பாளர் ஒருவர் ஒரு வாக்கைக் கூடப் பெறவில்லை.
கடந்த சனிக்கிழமை தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.
மொத்தம் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளை நிரப்ப நடைபெற்ற இந்தத் தேர்தலில், 60% வாக்குகள் பதிவாகியுள்ளன.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்
மாநிலம் முழுவதும் சிறு பூசல்கள் ஏற்பட்டாலும் கூட பெரும்பாலான இடங்களில் அமைதியான முறையிலேயே தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவில் சிக்கல் நிகழ்ந்த சென்னையில் 2 வார்டுகள் உட்பட தமிழகத்தில் 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் திங்கள்கிழமை மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகளும் சேர்த்து இன்று எண்ணப்பட்டு வருகிறது.

வாக்கு எண்ணிக்கை
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் மொத்தம் 268 வாக்கு எண்ணும் மையங்களில் எண்ணப்பட்டு வருகிறது. இதற்காக வாக்கு எண்ணும் மையங்களைப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தற்போது வரை வெளியான தேர்தல் முடிவுகளில் பெரும்பாலான இடங்களில் திமுக கூட்டணியே முன்னிலையில் உள்ளது. குறிப்பாக மொத்தம் இருக்கும் 21 மாநாகரட்சிகளிலும் திமுக கூட்டணி வென்றுள்ளது.

திமுக வெற்றி
அதேபோல மொத்தம் 138 நகராட்சிகள் உள்ள நிலையில் அதில் 120க்கும் மேற்பட்ட நகராட்சிகளில் திமுகவே வென்றுள்ளது. மொத்தம் இருக்கும் 490 பேரூராட்சிகளிலும் 360க்கும் மேல் திமுகவே முன்னிலையில் உள்ளது. பொங்கல் பரிசு விவகாரம், நீட் விலக்கு ஆகியவை பிரச்சினைகளை முன்னிறுத்தி பிரசாரம் செய்த அதிமுக இந்த முறை கணிசமான இடங்களில் வெல்ல வேண்டும் என நினைத்தது. இருப்பினும், அதிமுக இந்த முறையும் மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது.

ஒரு வாக்கைக் கூடப் பெறாத அதிமுக வேட்பாளர்
இந்நிலையில், புதுக்கோட்டை கறம்பக்குடி பேரூராட்சியில் ஒரு வார்டில் அதிமுக வேட்பாளர் ஒருவர் ஒரு வாக்கைக் கூடப் பெறவில்லை. புதுக்கோட்டை கறம்பக்குடி பேரூராட்சி 7வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் இம்ராம்ஷாவுக்கு ஒரு ஓட்டு கூட விழவில்லை. அதேபோல விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் நகராட்சி 1வது வார்டில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் மணிகண்டனும் ஒரு வாக்கு கூட வாங்கவில்லை.












Click it and Unblock the Notifications