2 பேர் எடுத்த பரபர முடிவு.. இபிஎஸ் தாமதிக்கவே கூடாது.. சாட்டையை சுழற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது!
சென்னை: அதிமுகவில் சீட் கிடைக்காமல் அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகள் மற்றும் எம்எல்ஏக்களை சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் முதல்வர் பழனிசாமி இருக்கிறார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்காக மிகப்பெரிய கூட்டணியை அமைத்து அதிமுக தேர்தலை எதிர்கொண்டு வருகிறது. தேர்தல் அறிக்கை, வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுவிட்டு தற்போது அதிமுக பிரச்சாரம் மீது கவனம் செலுத்தி உள்ளது.
இப்படிப்பட்ட நிலையில் அதிமுகவிற்குள் திடீரென சில அதிருப்தி எம்எல்ஏக்கள் இடம் கிடைக்காத காரணத்தால் போர்க்கொடி தூக்கி உள்ளனர். அதிமுகவிற்கு எதிராகவே சுயேட்சையாக நிற்கும் முடிவில் இவர்கள் இறங்கி உள்ளனர்.

சுயேச்சை
அதிமுகவில் இரண்டு எம்எல்ஏக்கள் எடுத்த முடிவுதான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது . முதல் நபர் பெருந்துறை தொகுதி அதிமுக எம்எல்ஏ தோப்பு என்.டி.வெங்கடாச்சலம். 2011 மற்றும் 2016ல் பெருந்துறை தொகுதிகளில் போட்டியிட்டு வென்றவர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம். அமைச்சராக இருந்த தோப்பு என்.டி.வெங்கடாச்சலத்திற்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை.

என்ன ஆச்சு
அதிமுகவில் இவருக்கு வெற்றிவாய்ப்பு குறைவு என்பதால் மீண்டும் தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் தற்போது இங்கு சுயேச்சை வேட்பாளராக இவர் களமிறங்க முடிவு செய்துள்ளார். அதிமுக கூட்டணிக்கு எதிராக பெருந்துறையில் இவர் தனியாக களமிறங்குகிறார். இரண்டாவது நபர் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அதிமுக எம்எல்ஏ சி சந்திரசேகரன் .

வெற்றி எப்படி
சி சந்திரசேகரன் திமுகவில் இருந்து விலகி 2016 தேர்தலுக்கு முன் அதிமுகவில் இணைந்து 2016ல் அதிமுக சார்பாக எம்எல்ஏ ஆனார். சேந்தமங்கலம் தொகுதியில் இவருக்கு பெரிய ஆதரவு இருக்கிறது.ஆனால் சேந்தமங்கலம் தொகுதியில் இவருக்கு இந்த முறை அதிமுக வாய்ப்பு வழங்கவில்லை. இங்கு எஸ். சேகர் என்ற புதிய முகம் களமிறக்கப்பட்டுள்ளார்.

நாமக்கல்
இன்னொரு பக்கம் நாமக்கல்லில் இருக்கும் எந்த தொகுதியும் இவருக்கு ஒதுக்கப்படவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சி சந்திரசேகரன் தற்போது இதே தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட உள்ளார். இதற்கான வேட்புமனுவை அவர் தாக்கல் செய்துவிட்டார். அதிமுகவின் இரண்டு மூத்த எம்எல்ஏக்கள் இப்படி சுயேட்சையாக களமிறங்குவது கட்சி நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மோசம்
இந்த நிலையில் முதல்வர் பழனிசாமி உடனே சாட்டையை சுழற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அதிருப்தி நிர்வாகிகளுக்கு எதிராக அதிரடி நடவடிக்கையை இவர் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இப்படி அதிமுக எம்எல்ஏக்கள் சுயேட்சையாக களமிறங்குவது அதிமுகவின் வாக்குகளைதான் பிரிக்கும். அதற்கு இடம் கொடுக்காமல் உடனே அதிருப்தியாளர்களை இவர் சமாளிக்க வேண்டும்.

அவசியம்
ஒன்று இவர்களை அழைத்து வைத்து பேச வேண்டும். அல்லது இவர்களுக்கு ஆதரவாக இருப்பவர்களை, இவர்களுக்கு கொம்பு சீவி விடும் நபர்களை உடனே சமாளிக்க வேண்டும். இதைவிட பெரிய எதிர்ப்புகளை அதிமுக சமாளித்து ஆட்சி முழுமையாக 5 வருடம் நடந்த நிலையில்.. இதையும் சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் முதல்வர் உள்ளார்.












Click it and Unblock the Notifications