அப்ப மட்டும் பேசுனீங்கல்ல.. இப்ப இத செய்யுங்க பாப்போம்... புள்ளி விவரத்துடன் ஓபிஎஸ் அறிக்கை
சென்னை: பிப்ரவரி மாதத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உச்சத்தை தொடும் என மருத்துவ வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருக்கும் நிலையில் தமிழகத்தில் மதுக்கடைகளை உடனடியாக மூட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கொரோணா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னை செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் தோற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் மதுக்கடைகளை மூட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ஓ பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார் இதுதொடர்பாக அவர் அறிக்கையும் வெளியிட்டுள்ளார்.

ஓபிஎஸ் அறிக்கை
அந்த அறிக்கையில், 27-12-2021 அன்று 605 ஆக இருந்த கொரோனா தொற்று, மூன்றாவது அலை வேகமாக பரவத் தொடங்கியதையடுத்து 03-01-2022 அன்று 1,728 ஆக அதிகரித்ததன் விளைவாக, கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், இரவு 10-00 மணி முதல் காலை 5-00 மணி வரை ஊரடங்கு, தகவல் தொழில்நுட்பப் பணியாளர்களை வீட்டிலிருந்து பணிபுரிய அறிவுறுத்தல், 09-01-2022 ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு, பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை என பல புதிய கட்டுப்பாடுகள் 05-01-2022 அன்று விதிக்கப்பட்டன. ஆனால், டாஸ்மாக் கடைகள் பற்றி வாய் திறக்கவில்லை என கூறியுள்ளார்.

உயரும் கொரோனா பாதிப்பு
மேற்படி புதியக் கட்டுப்பாடுகளை அறிவித்த 05-01-2022 அன்று 4,862 - ஆக இருந்த கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 08-01-2022 நிலவரப்படி 10,978 ஆக உயர்ந்துள்ளது எனவும், மூன்றே நாட்களில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கிற்கும் மேலாக உயர்ந்துள்ளது , இந்த அளவுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்குக் காரணம் மதுக்கடைகள் செயல்பட தமிழ்நாடு அரசு அனுமதித்து இருப்பதுதான் என ஓ பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

டாஸ்மாக் மதுக்கடைகள்
07-05-2020 அன்று அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 580 என்றிருந்த நிலையில் மதுக் கடைகள் திறக்கப்பட்ட போது, அதனை எதிர்த்து தி.மு.க. சார்பில் அவரவர்கள் வீடு முன்பு கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், தற்போதைய முதலமைச்சரும் தன் வீட்டின் முன் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக கூறிய அவர், ஆனால் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் 14-06-2021 அன்று 12,772 பேர் ஒரு நாளைக்கு கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டபோது தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் காலை 10-00 மணி முதல் மாலை 5-00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்ததை சுட்டிக் காட்டினார்..

திமுகவின் வாதம்
பரிசோதனை செய்யப்பட்டவர்களில் எத்தனை சதவீதம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதன் அடிப்படையில் மதுக்கடைகளை திறக்க வேண்டுமேயன்றி, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை வைத்து மதுக்கடைகளைத் திறக்கக்கூடாது என்பது தி.மு.க.வின் வாதமாக அப்போது இருந்தது எனவும், திமுகவினுடைய வாதத்தின்படி, எட்டு சதவீத பாதிப்பு உள்ள இந்நிலையில் மதுக்கடைகள் மூடப்பட்டு இருக்க வேண்டும் எனக் கூறியுள்ள ஓபிஎஸ், கொரோனா தொற்று வேகமாகப் பரவிக் கொண்டிருக்கின்ற தருணத்தில் மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்காத தி.மு.க. அரசிற்கு அ.தி.மு.க சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

மதுக்கடைகளை மூட வேண்டும்
ஒரு பக்கம் பள்ளிகள், கல்லூரிகளை மூடவும், வழிபாட்டுத்தலங்களை வாரத்தில் மூன்று நாட்கள் மூடவும் உத்தரவிட்டுவிட்டு, மறுபக்கம் மதுக்கடைகளை திறந்து வைப்பது என்பது கொரோனா தொற்றினைக் கட்டுப்படுத்த உதவாது எனவும், மாறாக தொற்றினை அதிகரிக்க வழிவகுக்கும் என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள ஓபிஎஸ், கொரோனா பரவலின் தாக்கம் 5 விழுக்காட்டிற்குக் கீழ் செல்லும் வரையிலாவது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் உடனடியாக மூட உத்தரவிட வேண்டுமென்று முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன் என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications