"செம பிளானுடன்" எடப்பாடி.. அடுத்தடுத்து ஆதரவு தீர்மானம்போடும் "மாவட்டங்கள்.." என்ன செய்வார் ஓபிஎஸ்?
சென்னை: அதிமுகவில் ஒற்றைத் தலைமை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், மாவட்ட நிர்வாகங்கள் அடுத்தடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
வரும் ஜூன் 23ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இதற்காக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் திடீரென ஒற்றைத் தலைமை குறித்த பேச்சு எழுந்ததால், கடந்த சில நாட்களாக அதிமுக கூடாரத்தில் ஏகப்பட்ட சல்சலப்புகள் அடுத்தடுத்து அரங்கேறி வருகின்றன. முக்கியமாக எடப்பாடி பழனிசாமி ஒரு தரப்பில் அமைதியாக மூத்த மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் சேலம், சென்னை என அடுத்தடுத்து ஆலோசனையில் ஈடுபட்டார். அதேபோல் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டாலும், தொலைக்காட்சிகள் மூலமாக இரட்டைத் தலைமையே தொடர வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், அதிமுகவின் பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவளிப்பதாக கூறப்பட்டது. இதனிடையே மூத்த நிர்வாகிகள், ஓ.பன்னீர் செல்வத்திடம் சமான பேச்சுவார்த்தை மேற்கொள்ள வந்ததாகவும் கூறப்பட்டது. இருந்தும், சமரச பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். ஆனால் இபிஎஸ் ஆதரவாளர்கள், ஓபிஎஸ் அனுப்பிய கடிதம் இதுவரை தங்களுக்கு கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், வரும் ஜூன் 23ல் நிச்சயம் திட்டமிட்டபடி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று இபிஎஸ் ஆதரவாளர் கே.பி.முனுசாமி உறுதி தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி, ஒற்றைத் தலைமையாக வர வேண்டும் என்று மாவட்ட நிர்வாகங்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. அவ்வாறு திருப்பத்தூர் மாவட்ட அதிமுக சார்பில், அதிமுகவிற்கு ஒற்றை தலைமை எடப்பாடி பழனிச்சாமி தான் வர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருப்பத்தூர் அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சர் வீரமணி கூறுகையில், மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் ஒருமனதாக எடப்பாடி பழனிச்சாமியிற்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். அதிமுகவை பிளவுபடுத்தி பார்க்க திமுக நினைக்கிறது. அதற்காக தொந்தரவு கொடுத்து பின்னிருந்து செயல்படுகிறது. அது ஒரு போதும் நடக்காது. ஒற்றை தலைமையின் அவசியம் ஏற்பட்டுள்ளது. கழக எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஓ.பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு வழங்குவார். ஓபிஎஸ் எத்தனை உயர்மட்ட குழு அமைத்தாலும் எடப்பாடியார் தான் ஒரே தலைவர். 99% சதவிகித நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு தான் ஆதரவு தெரிவிக்கின்றனர் என்று கூறினார்.
இதேபோல் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கட்சியின் பொது செயலாளராக தேர்வு செய்ய வலியுறுத்தி புதுச்சேரி அதிமுகவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன், இரட்டைத் தலைமையால் கட்சியின் பல்வேறு முடிவுகள் எடுப்பதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே கட்சி வேகமாக செயல்பட ஒற்றைத் தலைமை தேவை. இதில் திமுகவை உறுதியாக எதிர்த்து வரும் எடப்பாடி பழனிசாமி தலைமையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
ஏற்கனவே கட்சியின் மூத்த நிர்வாகிகளும், மாவட்டச் செயலாளர்களும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், மாவட்ட நிர்வாகங்களும் அடுத்தடுத்து தீர்மானம் நிறைவேற்றி வருவது ஓ.பன்னீர் செல்வத்திற்கு சவாலை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications