பிரதமர் மோடியை சந்திக்கும் எடப்பாடி- ஓபிஎஸ்.. ஏப்ரல் 6-ல் மதுரை விமான நிலையத்தில் 'கிளைமாக்ஸ்'?
சென்னை: தமிழ்நாட்டுக்கு ஏப்ரல் 6-ந் தேதி வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடியை மதுரை விமான நிலையத்தில் சந்தித்து பேசுவதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டுள்ளனராம்; இதனால் ஏப்ரல் 6-ந் தேதி மதுரை விமான நிலையத்தில் நடைபெறப் போகும் சந்திப்புகள் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கக் கூடும் என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.
தமிழ்நாட்டின் அடையாள சின்னங்களின் ஒன்றான ராமேஸ்வரம் பாம்பன் பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி வரும் 6-ந் தேதி திறந்து வைக்க இருக்கிறார். இதற்காக மதுரை வரும் பிரதமர் மோடியை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேச நேரம் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதேபோல முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், பிரதமர் மோடியை சந்திக்க முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது. அதிமுக விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடி தலையிட வேண்டும் என்பதுதான் இருவரது விருப்பம்; இதற்காகவே இபிஎஸ், ஓபிஎஸ், இருவரும் பிரதமர் மோடியை சந்திக்க இருக்கின்றனர்.

மோடியை சந்திக்க துடிப்பது ஏன்?
பிரதமர் மோடியை இபிஎஸ்., ஓபிஎஸ் போட்டி போட்டு சந்திப்பதற்கு பின்னணியே அடுத்தடுத்து அரங்கேறி வரும் அரசியல் திருப்பங்கள்தான். 2026-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலுக்கு அதிமுகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். டெல்லியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக குழுவினர் தம்மை சந்தித்த பின்னர் அமித்ஷா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பாஜக கூட்டணி- எடப்பாடியின் தடுமாற்றம்
ஆனால் அமித்ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமியோ, பாஜகவுடன் கூட்டணி என்பதை அறிவிக்கவில்லை. தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி அறிவிப்பு வெளியிடப்படும் என கூறி வருகிறார். இதற்கு காரணமே, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், சசிகலா உள்ளிட்டோரை சேர்த்துதான் ஆக வேண்டும் என்கிற டெல்லி பாஜக மேலிடத்தின் கட்டளையை எடப்பாடியால் ஏற்க முடியாததுதான் எனவும் கூறப்படுகிறது. இதனால்தான், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்கவே முடியாது என திட்டவட்டமாக கூறி வருகிறார்.
டெல்லி போன செங்கோட்டையன்
அதாவது டெல்லி பாஜக மேலிடத்தின் கட்டளையை ஏற்கவே முடியாது என்பதுதான் எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதமாக இருக்கிறது. இதனையடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி தரும் வகையில், அதிமுகவின் கலகக் குரலான மூத்த அதிமுக தலைவர் கே.ஏ.செங்கோட்டையன், டெல்லிக்கு சென்றார். டெல்லியில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை சந்தித்து பேசினார் செங்கோட்டையன்.
அதிமுக பொதுச்செயலாளராகும் செங்கோட்டையன்?
டெல்லி பாஜக மேலிடம் விரும்பியபடி, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டோரை சேர்க்க முடியாது என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறி வந்ததால், அவரை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு செங்கோட்டையனை பொதுச்செயலாளராக்கி ஓபிஎஸ், சசிகலா உள்ளிட்டோரை அதிமுகவில் சேர்க்கும் நடவடிக்கையை பாஜகவே மேற்கொள்ளும் என்கிற தகவலைத்தான் டெல்லியில் செங்கோட்டையனை சந்தித்ததன் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செங்கோட்டையனுக்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கவும் மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மதுரை விமான நிலையத்தில் கிளைமாக்ஸ் காட்சிகள்?
இந்த பின்னணியில்தான், மதுரை விமான நிலையத்தில் எப்படியாவது பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துவிட வேண்டும் என்பதில் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் மும்முரமாக உள்ளனராம். பிரதமர் மோடியை இருவரும் சந்திக்கும் போது ஓபிஎஸ், இபிஎஸ்ஸை சமாதானப்படுத்தும் முயற்சியை பிரதமர் மேற்கொள்ளக் கூடும்; அப்படி நடந்தால் அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பெரிய கிளைமாக்ஸ் காட்சியாக இருக்கும் என்பதால் அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications