கூட்டணி இழுபறியில் இருந்தாலும்.. மார்ச் 24இல் அதிமுக பிரச்சாரத்தை ஆரம்பிக்கும் எடப்பாடி பழனிசாமி!
சென்னை: லோக்சபா தேர்தலுக்கான பரப்புரையை அதிமுக பொதுச்செயாளர் எடப்பாடி பழனிசாமி வரும் 24ஆம் தேதி தொடங்குகிறார்,
நமது நாட்டில் விரைவில் லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், இது குறித்த அறிவிப்பைத் தேர்தல் ஆணையம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது. மொத்தம் 7 கட்டமாக லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது,

இதில் தமிழ்நாட்டில் முதல் கட்டத்திலேயே லோக்சபா தேர்தல் நடக்கிறது. தமிழகத்தில் இன்னும் ஒரு மாதத்தில் லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் தங்கள் பிரச்சாரத்தைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
எடப்பாடி பழனிசாமி: இதற்கிடையே லோக்சபா தேர்தலுக்கான பரப்புரையை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரும் 24ஆம் தேதி தொடங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் தனது பிரச்சாரத்தைத் தொடங்குகிறார்.
கூட்டணி இறுதியாகாத போதிலும்,, எடப்பாடி பழனிசாமி தனது பிரச்சாரத்தைத் தொடங்குகிறார் முதற்கட்டமாகத் திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, சிதம்பரம் தொகுதிகளில் பரப்புரை மேற்கொள்கிறார்.
அதிமுக அறிவிப்பு: இது குறித்து அதிமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஏப்ரல் 19-ம் தேதியன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலில், அதிமுகவின் சார்பிலும், அதன் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி மு.பழனிசாமி மார்ச் 24 முதல் மார்ச் 31 வரை முதல் கட்டமாக, தேர்தல் பிரச்சார சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
அதன்படி, வரும் மார்ச் 24-ம் தேதி ஞாயிறு மாலை 4 மணிக்கு திருச்சி நவலூர் குட்டப்பட்டு வண்ணாங்கோவில் பகுதியில் தனது பரப்புரையை ஆரம்பிக்கிறார். மார்ச் 26-ம் தேதி மாலை 4 மணிக்கு தூத்துக்குடி விவிடி சிக்னல், எம்ஜிஆர் திடலிலும், இரவு 7 மணிக்கு திருநெல்வேலியில் உள்ள வாகையாடிமுனையிலும் பரப்புரை செய்கிறார்.
பிரச்சாரம் எங்கே: மார்ச் 27-ம் தேதி மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோயில் திடலிலும், இரவு 7 மணிக்குத் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள 18-ம் படி கருப்பசாமி கோயில் அருகிலும் பரப்புரை மேற்கொள்கிறார். மார்ச் 28-ம் தேதி மாலை 4 மணியளவில் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள பாவடி தோப்பு திடலிலும், இரவு 7 மணிக்கு ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் பரப்புரை செய்கிறார்.
மார்ச் 29-ம் தேதி மாலை 4 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஹோட்டல் ஹைவே இன் அருகிலும், இரவு 7 மணிக்கு ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட பல்லாவரத்தில் உள்ள ராஜேந்திரபிரசாத் சாலையில் உள்ள அன்னை தெரசா பள்ளி அருகிலும் பரப்புரை செய்கிறார். மார்ச் 30-ம் தேதி மாலை 4 மணிக்கு புதுச்சேரியில் கடலூர் சாலையில் நீதிமன்றம் எதிரில் உள்ள ரோடியர் மைதானத்திலும், மாலை 6 மணிக்கு கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்திலும் பரப்புரை செய்கிறார்.
மார்ச் 31-ம் தேதி மாலை 3.30 மணிக்கு சிதம்பரம் புறவழிச்சாலையிலும், மாலை 5.30 மணிக்கு மயிலாடுதுறை சின்ன கடைத் தெருவிலும், இரவு 7.30 மணிக்கு நாகப்பட்டினம் மாவட்டம் திருவாரூர் தெற்கு வீதியிலும் பரப்புரை மேற்கொள்கிறார்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications