அன்று எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு தனபால்- இன்று அவைத்தலைவர் பதவிக்கு அன்வர்ராஜா- ஓபிஎஸ் தடாலடி
சென்னை: அதிமுக அவைத் தலைவர் பதவிக்கு ஓபிஎஸ் தரப்பில் இருந்து சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த அன்வர்ராஜா, தமிழ்மகன் உசேன் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதிமுக அவைத் தலைவராக இருந்த மதுசூதனன் காலமானார். இதனையடுத்து அதிமுகவின் புதிய அவைத் தலைவர் யார் என்பது குறித்து விவாதம் நடந்து வருகிறது.
மதுசூதனனைப் பொறுத்தவரையில் எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றத்தை தொடங்கி அதிமுகவின் தொடக்க கால உறுப்பினராக இருந்தவர். எம்.ஜி.ஆர். காலத்தில் வடசென்னை அதிமுக என்றால் மதுசூதனன் என்கிற அளவுக்கு செல்வாக்குடன் இருந்தார்.

சசிகலா நெகிழ்வு
எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் ஜெயலலிதாவின் அதிதீவிர விசுவாசியாக இருந்தார் மதுசூதனன். மதுசூதனன் தொடர்பாக சசிகலா ஒரு டிவி பேட்டியில் குறிப்பிடுகையில், எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் ஜெயலலிதாவுக்கு கடும் அச்சுறுத்தல்கள் இருந்தன. போயஸ் கார்டன் பங்களாவுக்குள் அத்துமீறி ஆயுதங்களுடன் நுழைந்து மிரட்டுவார்கள். அப்போதுதான் நானும் அங்கேயே தங்க தொடங்கினேன். அந்த காலத்தில் மதுசூதனன் தமது ஆதரவாளர்களுடன் போயஸ் கார்டனுக்கு பாதுகாப்பு கொடுத்தார். அதை எல்லாம் மறக்க முடியாது என நெகிழ்ந்திருந்தார். இதனால்தான் மதுசூதனன் மருத்துவமனையில் இருந்த போதும் போய் பார்த்தார்; அவர் மறைந்தபின்னரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் சசிகலா.

புதிய அவைத் தலைவர்
அதிமுகவில் மதுசூதனனின் அவைத் தலைவர் பதவிக்கான ரேஸில் பொன்னையன், தம்பிதுரை, செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் என பலரது பெயரும் உச்சரிக்கப்படுகிறது. ஆனால் ஈபிஎஸ், ஓபிஎஸ் இருதரப்பும் அவர் வேண்டாம்.. இவர் வேண்டாம் என்கிற ரேஞ்சில் விவாதம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். இந்த முறை எப்படியும் அவைத் தலைவர் பதவியை நாம் பரிந்துரைக்கும் நபருக்கு பெற்றுத்தந்தாக வேண்டும் என்பதில் ஓபிஎஸ் முனைப்பாக இருக்கிறார். அப்படி செய்தால்தான் தமது ஆளுமையை நிரூபிக்க முடியும் என்பது ஓபிஎஸ்-ன் கணக்கு.

ஓபிஎஸ் போட்ட கணக்கு
சட்டசபை அதிமுக குழுத் தலைவர் பதவி அதாவது எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு ரொம்பவே முட்டி மோதினார் ஓபிஎஸ். ஆனால் எடப்பாடி பழனிசாமி, தமக்கான எம்.எல்.ஏக்கள் ஆதரவைக் காட்டி அந்த பதவியைப் பெற்றுக் கொண்டார். அதில் கடும் வருத்தமடைந்தார் ஓபிஎஸ். அப்போது நடந்த மோதலில் தலித் சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் சபாநாயகர் தனபாலை எதிர்க்கட்சித் தலைவராக்கலாம் என சொல்லி ஈபிஎஸ் தரப்புக்கு நெருக்கடி கொடுத்து பார்த்தார் ஓபிஎஸ். ஆனால் அதையும் லாவகமாகவே கையாண்டு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தன் வசமாக்கிக் கொண்டார் ஈபிஎஸ். இப்போதும் அதே பாணியை கையில் எடுத்துள்ளாராம் ஓபிஎஸ்.

ஓபிஎஸ் லிஸ்ட்டில் அன்வர்ராஜா
அப்போது தலித்தை முன்னிறுத்திய ஓபிஎஸ் இப்போது சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களை முன்னிறுத்துகிறாராம். ஓபிஎஸ் தரப்பில் அன்வர்ராஜா, தமிழ் மகன் உசேன் ஆகியோர் முன்னிறுத்தப்படுகிறார்களாம். சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த ஒருவரை அதிமுக அவைத் தலைவராக்கினால் பெருமைதானே என்கிறதாம் ஓபிஎஸ் தரப்பு. ஆனால் இந்த விளையாட்டு எல்லாம் வேண்டாம்... நாங்க சொல்லும் சீனியர்கள், மாஜி அமைச்சர்கள் பட்டியலில் இருந்து ஒருவரை தேர்வு செய்யலாம் என்கிறதாம் ஈபிஎஸ் தரப்பு. தற்போதைய நிலையில் இருதரப்பும் எந்த முடிவும் எடுக்காமல் அதிமுக அவைத் தலைவர் பதவி யாருக்கு என்பதில் இழுபறி தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications