விடாது கறுப்பு- எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி விவகாரம்- சபாநாயகரை சந்தித்து வலியுறுத்திய இபிஎஸ்
சென்னை: சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவராக தமது கோஷ்டியை சேர்ந்த ஆர்பி உதயகுமாரை அங்கீகரிக்க வேண்டும் என சபாநாயகர் அப்பாவுவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.
அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் என இரு கோஷ்டிகள் பிளவுபட்டுள்ளன. இதனையடுத்து எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியில் இருந்து ஓபிஎஸ்ஸை எடப்பாடி பழனிசாமி தரப்பு நீக்கியது. ஓபிஎஸ்-க்கு பதில் ஆர்பி உதயகுமாரை, எதிர்க்கட்சித் துணைத் தலைவராக நியமித்தது.

இது தொடர்பாக தமிழ்நாடு சட்டசபை சபாநாயகர் அப்பாவுவுக்கு இபிஎஸ் கோஷ்டி கடிதமுன் அனுப்பியது. ஆனால் கடந்த சட்டசபை கூட்டத் தொடரின் போது வழக்கம் போலவே, எதிர்க்கட்சித் தலைவரான இபிஎஸ்க்கு அருகேதான் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் என ஓபிஎஸ்-க்கும் இருக்கை போடப்பட்டிருந்தது. இதற்கு எதிராக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இபிஎஸ் தலைமையில் போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் நடப்பாண்டின் முதலாவது சட்டசபை கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இந்தக் கூட்டத் தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் தொடங்கியது. ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசு தயாரித்த உரையின் சிலவற்றை படிக்காமல், சொந்தமாக சிலவற்றை படித்திருந்தார். இது சபை குறிப்பில் இடம்பெறாது முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக அறிவித்தார். இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி தரப்பு அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது. மேலும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் தமிழ்நாடு- தமிழகம் பேச்சு விவகாரத்தில் ஆளும் திமுக கூட்டணி எம்.எல்.ஏக்கள், ஆளுநருக்கு எதிராக முழக்கமிட்டும் பரபரப்பை ஏற்படுத்தினர். இப்படி நடப்பாண்டின் முதல் நாள் கூட்டமே அனல் பறந்தது.

இந்நிலையில் அதிமுக விவகாரம் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தக் கூடும் என தெரிகிறது. எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்பி உதயகுமாரை அங்கீகரிக்க கோரி, தமிழ்நாடு சட்டசபை சபாநாயகர் அப்பாவுவை எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் மற்றும் அதிமுக எம்.எல்.ஏக்கள் சந்தித்து வலியுறுத்தி இருந்தனர். மேலும் உதயகுமாருக்கான இருக்கை குறித்தும் விவாதித்தனர். இன்றைய சந்திப்பின் அதிமுக மூத்த தலைவர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி, ஆர்.பி.உதயகுமார், கே.செங்கோட்டையன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதனிடையே தங்களது கோரிக்கையை ஏற்று சபாநாயகர் அப்பாவு, உதயகுமாருக்கான இருக்கை ஒதுக்காவிட்டால் அடுத்த கட்ட போராட்டம் குறித்தும் அதிமுகவினர் விவாதித்துள்ளனர். சபாநாயகர் அப்பாவு தங்களது கோரிக்கையை நிராகரித்தால், சட்டசபைக்குள் முழக்கங்கள் எழுப்பி வெளிநடப்பு செய்வது அல்லது சட்டசபை கூட்டத் தொடரை புறக்கணிப்பது என அதிமுக இபிஎஸ் கோஷ்டி முடிவு செய்துள்ளதாம்.












Click it and Unblock the Notifications